ஆடுகிறார் வசந்தன்
நினைவில் வைத்திருங்கள் இது வெறும் ஒத்திகை தான்.
மேடைக்குப் புதிய நடிகை வந்தாள்
நல்ல நடிப்புடன் நாடகமாடினாள்
கதையற்ற கலைப்படைப்பு என்பதால்
பெரிய படிப்புக்காரியின் பொய் வேடம்
நீண்ட காலத்துக்கு நிலைக்க வில்லை.
இடை வேளையுடன் திரை விழுந்தது.
ஈழத் தமிழர் ஏமாளிகள் என்ற கதை
திருத்தியெழுதப்பட்டதை
அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.
இனி அமைதிக்கு வந்த அன்னப்பறவை
குண்டுகள் சுமந்து வந்து கொட்டும்.
கொட்டட்டும்.
இடைவெளியற்று இடி விழுகிறது எமக்கு
அவலம் அன்றாட வாழ்வாச்சு
கறிக்கு உப்பானது கண்ணீர்
நாசித்துவாரங்கள் காற்றையல்ல
கந்தகத் துகள்களையே சுவாசிக்கின்றன.
அடுத்த நேர உணவு எந்த அகதி முகாமில்..
யாரறிவார்..
எரியுண்டு போகுமா எம்மண்
நடவாது
பூவரசு பூக்கும் பூமிக்கு
வெள்ளரசு வந்தா விலங்கிட முடியும்..
மழை நீரால் மட்டும் பயிர்செய்யும் பூமியிது
அசையாதென்பதறிக
எந்நாட்டு மக்களையும் எம் தேசம் வரவேற்கும்
படையோடு வருபவர்க்கு எம் தலைவாசல் மரமிடிக்கும்.
குமாரணதுங்காவின் குடும்பத் தலைவிக்கு
யாரேனும் இதனை அறியக் கொடுத்திடுக.
புராதன வாழ்வின் பெருமை அறியாது
நிவாரண வரிசையில் நிற்பதே தொழிலென
எட்டியுதைக்கும் கால்களுக்கு முத்தமிட்டபடி
புத்திஜீவிகள் சிலர் உன்னைப் பார்த்து புன்னகைக்கலாம்.
சிங்கக் கொடியேற்றும் போது
நந்திக் கொடியேற்றவும் நாலு பேர் இல்லாமலா போய் விடும்?
கும்பிட்டு வாழமாட்டோம் எழுதியவன்
உள்ளே வந்துள்ளான்
கூப்பிட்டழைத்துக் கொடியை ஏற்றுக.
வானம் எம் வசமென்று வாழ்த்துப் பாடிய சிலரை
இங்கு காணவில்லை.
சந்தக் கவிஞர்களல்லவா
உனக்கு வந்தனம் பாட வந்திருப்பார்கள்.
வாசலில் நிற்க வைக்கவும்.
சாமரம் வீச இவர்களே தகுதியானவர்கள்.
குவேனியின் பிள்ளைகளுக்கு குற்றவேல் செய்ய
காட்டாற்று வேகக் கதைக்காரன்
வீட்டுக்கு வந்தள்ளார்.
பதவியுயர்வுக்காக உனக்குப் பாதபூசை செய்வார்
பழைய பேப்பர் வழங்குக
அவர் பாடநூல் அச்சிடட்டும்..
பகையுடன் இனி உறவில்லையெனப் பாடியவரே
உமக்கு என்ன நடந்தது
உள்ளி கண்ட இடத்தில் பிள்ளைபெறும் வித்தையை
உமக்குச் சொல்லித்தந்தது யார்.?
காற்றுக்கொதுங்கிய போர்த்துக்கீசனின்
கண்ணிலெம் தாயகம் தெரியும் வரை
தலையில் கட்டிய தலைப்பாகையை
முதுகில் தொட்டுப் போவதென
உயர்ந்த வாழ்வுக் குரியவராய் இருந்தோம் நாம்.
எம்மை நாமே எழுதினோம்.
வெடிமருந்துடன் வந்தவனை
வேலும் வாளும் வெல்ல முடியவில்லை
வேற்றொருவனின் காலில் விழுந்தோம்.
கிணற்றில் விழுந்த குங்குமச் சரையாய்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்தோம்.
யானைகள் மிதிக்கும் சேனைப்புலவாய்
மாறி மாறிப் பலரின் மகுடத்தின் கீழ்
நாறிக் கிடந்தது நம் வாழ்வு
வெள்ளைக் காரன் வெளியெறிய போது
சேனநாயக்காவிற்கு சிம்மாசனம் கிடைத்தது.
சென்ற இடமெல்லாம் தீ மூட்டி எரித்து விட்டு
அந்த இராமன் கூட அயோத்தி திரும்பினான்.
திலீபனே நீயேன் திரும்பி வரவில்லை.
வழி நிறைய எம்முற்றம் பூத்த வீரியக் கொடியை
அழியா முதலென்றல்லவா அழகு பார்த்தோம்!
அதை வேரோடிழுத்து வெய்யிலில் போட்டது
இமயம் உயரமெனும் அகம்பாவம்.
'கந்தன் கருணை' யிலிருந்துன் கால் நடந்த போது
கோயில் வீதியே குளிர்ந்து போனது.
கூட்டி வந்து கொலுவிருத்தினோம்.
சாட்சியாக எல்லாவற்றையும் பார்த்தபடி
வீற்றிருந்தாள் முத்துமாரி.
பன்னிரண்டு நாட்களாக உள்ளொடுங்கி
நீ உருகியபோது
வெள்ளை மணல் வீதி விம்மியது.
உன்னெதிரே நின்று எச்சில் விழுங்கியபோது
குற்றவுணர்வு எம்மைக் குதறியது.
வரண்டவுடன் நாவு அண்ணத்தில் ஒட்டியபோது
திரண்டிருந்த சுற்றம் தேம்பியது.
இம்முறை துயிலுமில்ல வாசல்
திறக்கும் போதே
என்ன கொண்டு வந்தீர் எனக் கேட்டால்
பதிலேதும் உண்டா எம்மிடம்..?
சம்பூ கொணர்ந்தோம்
சவர்க்காரம் கொணர்ந்தோம்
சீமெந்தும் முறுக்குக் கம்பியும்
செல்போனும் கொணர்ந்தோம் என்று
சொல்ல முடியுமா அவர்களுக்கு
முள்முடி சூடி
முதுகிற் பாரச் சிலுவை சுமந்த
பாவப்பட்ட மக்களின் பயணப்பாடு முடிந்தது.
இயேசுவே
எம்மையேன் இரட்சிக்க மறந்தீர் சுவாமி
ஆலமுண்ட நீல கண்டனே
எம்மைச் சாவு தின்றபோது தாங்காதிருந்ததற்கு
அன்று மட்டும் உமக்கென்ன அலுவல் இருந்தது பிரபு
அல்லாவே பிள்ளைகளைக் கைவிட்டதேனோ?
புத்தபெருமானே
வெள்ளம் வருகுதென்றாயினும்
சொல்ல வேண்டாமா..?
எல்லோரும் ஒதுங்கிக் கொண்டீர்
நாம் தான் தனித்துப்போனோம்
இந்தத் தடவை வானப் பயணம் போனவர்
வந்து இறங்கியதிலிருந்து
ஆவியாய் வெளியேறிக் கரைகிறது
மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்..
மேசையிலமர்ந்து பேசுவதென்பது
பூதகியிடம் பால் குடிப்பதைப் போன்றதே
உறிஞ்ச வேண்டும்
விழுங்கக் கூடாது
சிரிக்க வேண்டும்
சிக்குப்படக்கூடாது
நெஞ்சுக்குள் அலையெற்றிய
மாயக்கனவுகள் வெளியேற
நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது.
மினுங்கிய மின்சாரமற்று
தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று
செப்பனிடப்பட்ட தெருவற்று
மாவற்று - சீனியற்று - மருந்தற்று
ஏனென்று கேட்க எவருமற்று
கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும்.
கணினிகளையும் காஸ்சிலிண்டர்களையும்
வீட்டு மூலையில் வீசிவிட்டு
மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும்
விறாந்தையின் தரைவிரிப்புகளையும்
மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும்
அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு
பதுங்கு குழிக்குப் பால்காச்சிவிட்டோம்.
விடுவிக்கப்பட்ட ஊர்களை
விடுதலைபெற்ற தேசமென வெளிச்சம் செய்து
ஆடிய கூத்துக்கள் ஒவ்வொன்றாய் அகல
மீண்டும் நிஜத்துக்குத் திரும்பியது அரங்கு.
இப்போ மயக்கம் கலைந்த மனிதர்களைச் சுமந்து
மாரீசப் போர்வை கலைத்துக் கிடக்கிறது மண்.
இன்றைய விடிகாலையிற் துயில்நீங்கி
தாய்நிலம் வாய்திறந்து பாடும்
விடுதலைப்பாடல் பரவுகிறது வெளியெங்கும்.
மனச்சாட்சியின் கதவுகள் திறந்தபடி
எல்லோர் முகங்களிலும் அறைந்தபடி
கேட்கும் பாடலை உணரமுடிகிறதா உன்னால்?
இன்று புது உதயம் எழுகிறது.
இணையமதை
வென்று நிலைத்து விடும் விருப்பில்
எழுநா எனும்
கன்றொன்று இன்று கண் திறந்து கொள்கிறது.
நன்றென்று வாழ்த்தி
நான் மிதந்து கொள்கின்றேன்.
நீளக்கிடக்கின்ற நிலமெல்லாம்
நெடிதுயர்ந்து
ஆளும் நிலை தமிழுக்காகுமெனும்
நம்பிக்கை சூழ்கிறது.
எழுநாவை சூழ்ந்திருக்கும் என்னினிய தோழர்களே..
உங்கள் தொண்டு மிக நெடிது.
வாழ்வீர்.
புதிய தொரு வரலாறு உமக்காகும்.
எழுநாவால் எழும் உலகு.
இனித்தமிழ்
தொழுதுண்டு வாழாதெனச் சொல்லி
நீ துலங்கு..
தமிழகத்தில் எனது அகதி வாழ்வின் அனுபவங்கள் பற்றி நான் சிலவற்றைக் கூற வேண்டும். தமிழ் நாடு முழுவதும் அதிகளவான ஈழத் தமிழ் அகதிகள் பரந்திருக்கிறார்கள். நான் வந்ததன் பிற்பாடு, அகதிகளின் தொகை எழுபதினாயிரமாக அரசாங்க முகாம்களிலும், ஒரு லட்சமாக வெளியிடங்களிலும் அதிகரித்தது. இப்போது முகாம்களில் அதே எழுபதினாயிரமாகவும் வெளியிடங்களில் முப்பதினாயிரமாகவும் உள்ளது. 1983 இல் நாம் மிக மரியாதைக் குரியவர்களாக வரவேற்கப் பட்டோம்.
ஆயினும் ரஜீவ் காந்தி கொலையின் பின், முழுமையாக எனச் சொல்ல முடியாவிட்டாலும், தமிழக மக்களால் கூட நாம் வெறுக்கப் படுகின்ற ஒரு நிலை தோற்றம் பெற்றது.
எனது இரண்டு சொந்த அனுபவங்களை இங்கு நான் சொல்ல முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது. நான் திருமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்குள்ள இனஸ்பெக்டர் - அவர் பெயர் பூங்காவனம் எனச் சிலர் சொன்னார்கள் - என்னை ஒரு நாயைப் பார்ப்பது போல ஏளனமாய்ப் பார்த்தார். எந்த விதமான கேள்விகளும் இல்லை. நடுங்கும் என் கைகளிலிருந்து ஆவணங்களைப் பறித்தெடுத்துக் கொண்டார்.
நான் நரைத்து விட்ட தலையுடனும் தாடியுடனும் எழுபதை நெருங்கும் வயதில் இருந்தேன். அவரைக் கோபமூட்டும் எதனையும் செய்யவும் இல்லை. எனினும் இனஸ்பெக்டர் எனது ஆவணங்களைக் கிழித்து ஜன்னல் வழியாக வெளியே எறிந்து கத்தினார்
போ.. போய் எடுத்திட்டு வா
நான் போய் எடுத்து வரவேண்டியிருந்தது. ஏனெனில் அந்த ஆவணங்கள் இல்லாது நான் தமிழ் நாட்டில் வாழ முடியாது.
இப்போது ஈழத் தமிழ் அகதிகள் குடிவரவுத் திணைக்களத்தில் கூட பதிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நாம் பொலிஸ் நிலையத்திலிருந்தும், வங்கியிலிருந்தும், வீட்டுச் சொந்தக் காரர்களிடமிருந்தும் கடிதம் பெற்றுச் சென்று குடிவரவுத் திணைக்களத்தில் நமது பதிவைப் புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தடவை நான் இத் திணைக்களத்திற்கு சென்றிருந்தேன். அப்போது 76 வயது எனக்கு. கூடவே உடல் நடுக்க வியாதியும் வேறு. நான் நீண்ட நேரமாகக் காத்திருந்தேன். எனக்கு முன்னால் நின்றவர் தனது அலுவலை முடித்து விட்டுச் சென்ற பின் நான் அதிகாரியை நோக்கிச் சென்றேன். ஆயினும் அவர் என்னைக் காத்திருக்கச் சொல்லி விட்டு மற்றவர்களை அழைத்தார். ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் நான் - ஒரு காலத்தில் இந்த உலகம் முழுவதையும் கால்களால் அளந்தவன் - நடுங்கும் என் உடலோடு நிற்க வேண்டியிருந்தது.
நான் எனது குடையையும் பையையும் எடுத்து வெளியேறி விட்டேன். பின்னர் குடிவரவுத் திணைக்கள பிரதான அதிகாரியொருவருக்கு என்னுடைய விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றினை அனுப்பியதையடுத்து என்னை அழைத்த அவர் நடந்த சம்பவத்திற்கு வருந்தியதுடன் எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காதெனவும் உறுதியளித்தார்.
எனது சிக்கல் தீர்ந்து விட்டது. ஆயினும் இன்னமும் ஈழத் தமிழர்கள் குடிவரவுத் திணைக்களங்களில் தமது நேரங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை இங்கே நேரம் பெறுமதியற்றது. அமெரிக்க டொலர்களே பெறுமதி மிக்கன.
வா!
வேட்கை தணியும் வரை என்னை
முத்தங்களால் ஒத்தியெடு.
உன் உணர்வு அடங்குமட்டும் - என்
உதடு கடித்து ரத்தமெல்லாம்
உறிஞ்சியெடு.
ராட்சசி போல் என்
பாதாதி கேசமெல்லாம்
உன் பசிக்கு ஏற்றாற்போல்
புசித்து முடித்துவிடு.
Labels: சிறுகதைகள்
Labels: நினைவுகள்