28.3.07

சொதி மீதான மறு வாசிப்பும் சோமியின் பாடலும்

நாமோர் உறுதியெடுத்திருந்தோம். வெறுமே அலட்டுகிறோமெனவும், வெறும் வெண்ணைகளாயிருக்கிறோமெனவும், சிரித்துச் சிரித்து வந்த சீனாத்தானா போல சித்தரிக்கப்பட்டிருந்த நிலையில், எங்களாலும் பயனுள்ள வகையில் எதையாவது தரமுடியுமென நிரூபித்திருக்கிறோம். இது ஆரம்பம் தான். இந்த ஒலிப்பதிவில் நிறையப் பயனுள்ள தகவல்களைத் தந்த சென்னைச் சாமி எங்கள் சோமிக்கு நன்றி.


27.3.07

ஆனந்தன் அண்ணா, நேற்றும் உங்களை நினைத்தேன்

ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள் பாட, வீடே கலகலக்கும். சில வேளை நீங்களே பாடிக்கொண்டு ஆர்மோனியம் வாசிப்பீர்கள். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என குரலை உயர்த்திப் பாடுவது அவ்வளவு நல்லாயிருக்காது என்றாலும் ஆர்மோனிய இசை, அதையெல்லாம் கடந்து இனிக்கும். நீங்கள் அந்தப் பாட்டைப் பாடும் போதெல்லாம் அம்மாவோ, அத்தையோ வழமையாக் கேட்கும், ஆனந்தன் ஆரடா அந்தப் பெட்டை எண்ட கேள்விக்கு பாட்டினூடே சிரிப்பியள் ஒரு சிரிப்பு அந்தச் சிரிப்பை கடைசியா உங்களைக் கண்ட போது நான் காணவில்லை.

ஆனந்தன் அண்ணை நாங்கள் எல்லாரும் ஒண்டாத் தான் இடம்பெயர்ந்தம். ஆமி, பொன்னாலை மாதகல் எண்டு எல்லா இடத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட செய்தி கேட்டதும் தான் தாமதம் முடிந்தவரை எல்லா சாமான் சக்கட்டுக்களையும் தூக்கி சைக்கிளில கட்டத் தொடங்கினம். அண்ணா நீங்கள் உங்கடை ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கி சைக்கிளில கட்ட, உங்கடை அம்மா பேசுறா. மனிசர் சாகக் கிடக்கிற நேரம் உனக்கு உது தானோ அவசரம். கழட்டி எறி. நீங்கள் என்ன நினைத்தியளோ தெரியா ஆர்மோனியப் பெட்டியை சைக்கிளில இருந்து இறக்கி வைச்சிட்டு கொஞ்சம் நேரம் அதையே பாத்தியள்.

செல் சத்தங்களும் பிளேன் சத்தங்களும் கிட்டவாக் கேட்கத் தொடங்கிட்டுது. துப்பாக்கி வெடிக்கிற சத்தங்களையும் கேட்கக் கூடியதாயிருந்தது. ஆமி, சண்டிலிப்பாய் பக்கத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட உடனை நாங்கள் நவாலியால யாழ்ப்பாண ரவுணுக்கு போக முடிவெடுத்து தெருவில இறங்கினம். தெரு முழுக்கச் சனம். சிவராசன் அண்ணை வந்து தன்ரை ரண்டு பொம்பிளைப் பிள்ளையளையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போகச் சொல்லிட்டு, தான் பிறகு தங்கடை அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாறன் எண்டுவிட்டு போயிட்டார். அத்தானிட்டை மோட்டச்சைக்கிள் இருந்ததாலை அவர் முதலில எங்கடை அம்மம்மாவையும் குழந்தையோடை இருந்த கீதா அன்ரியையும் கொண்டுபோய் விட்டுட்டு வாறேனெண்டு சொல்லிட்டுப் போனார்.

ஆனந்தன் அண்ணை வழி முழுக்க நீங்கள் பேசாமல் வந்தியள். நீங்கள் சிவராசன் அண்ணையின்ர கடைசி மகள் சோபாவை சைக்கிளில ஏத்தி வந்தனியள். அவள் அழுது கொண்டேயிருந்தாள். அவ்வப்போது அழாதையடி எண்டு அவளுக்குச் சொல்லிக்கொண்டு வந்தீங்கள். இதுக்கிடையில மோட்டச்சைக்கிளில போன அத்தான் திரும்பி வந்தார். அம்மம்மாவையும், கீதா அன்ரியையும் நவாலியில உள்ள தேவாலயத்தில் விட்டு வந்ததாகவும் அந்தப் பக்கம் பிரச்சனை இல்லையெண்டும் சொன்னார். இந்த முறை அவர்,அத்தை அம்மா இவையளை ஏத்திக்கொண்டு போனார்.

நாங்களும் நவாலியில சென் பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு வந்து சேர்ந்தம். தேவாலயம் அமைந்த சூழல் வீதி மூடிய மரங்கள் நிறைந்த நிழலான பகுதி. இடம்பெயர்ந்த மொத்தச் சனமும் அங்கை தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்திருந்தினம். சண்டை நடக்கிற பிரதேசத்தை தாண்டி வந்திட்டம் எண்டளவில நாங்களெல்லாம் செய்தியறியிற ஆர்வத்தில அங்கையிங்கையெண்டு கதைச்சுக் கொண்டிருந்தம். அழுது கொண்டிருந்த சோபா கூட இப்ப சிரிச்சுக் கொண்டிருந்தாள். தீபா தான் அப்பாவைக் காணேல்லையெண்டு அந்தரிச்சுக் கொண்டிருந்தாள். ஆனந்தன் அண்ணா நீங்கள் ஆரோடும் கதைக்கவில்லை. உங்கடை அம்மா அரிசி மாவுக்குள்ளை தண்ணியும் சீனியும் போட்டுக் குழைச்சு எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தா.

எல்லாரையும் நல்லூர் கோவிலுக்கு வந்து சேரச் சொல்லிவிட்டு அத்தான் தனக்குத் தெரிந்த ஒரு அங்கிள் வீட்டை போய் தங்குமிட வசதிபற்றி அறிந்து கொண்டு வாறதாச் சொல்லிப் புறப்பட்டார். நானும் அவரோடை வெளிக்கிட்டன். உண்மையில நான் சைக்கிள் ஓடிக் களைச்சுப் போயிருந்தன். நாங்கள் வெளிக்கிட்டம்! என்னோடை கீதா அன்ரியும் குழந்தையும்.

ஆனந்தன் அண்ணா அப்பதான் நான் உங்களைக் கடைசியாப் பாக்கிறன் எண்டு எனக்குத் தெரியேல்லை. நாங்கள் வெளிக்கிட்டு ஆனைக் கோட்டைச் சந்தி தாண்ட.. புக்காரா குத்துற சத்தம் காதைக் கிழிக்குது. மோட்டச் சைக்கிளை பிரேக் அடிச்சு நிப்பாட்டிப் போட்டு றோட்டோரமா விழுந்து குப்புறப் படுத்தன். கீதா அன்ரி தன்ர குழந்தையை நெஞ்சுக்குள்ளை வைச்சுக்கொண்டு விழுந்து கிடந்து, முருகா முருகா எண்டு கத்துறா. தொடர்ந்து எட்டுக் குண்டுகள் ஒரே இடத்தில், ஒரே பிளேனில இருந்து. நிலம் ஒருக்கா அதிர்ந்து தணிந்தது.

அத்தானுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது. பக்கத்தில இருந்த ஒரு வீட்டில கீதா அன்ரியையும் குழந்தையையும் விட்டுவிட்டு அத்தான் என்னையும் ஏத்திக்கொண்டு திரும்பவும் நவாலிப் பக்கமா ஓடத் தொடங்கினார். அங்கிருந்து வாற எல்லாரிடமும், அண்ணை எங்கை விழுந்தது, அண்ணை எங்கை விழுந்தது எண்டு கேட்கிறம். ஆருக்குமே தெரியேல்லை. இதுக்கிடையில ரண்டு மூண்டு வாகனங்கள் காயப்பட்ட ஆக்களை ஏத்திக் கொண்டு எதிர்த்திசையில் போகிறது.

நவாலித் தேவாலயச் சூழலை அடையாளமே காண முடியேல்லை. ஒரே புகை மண்டலம். காலுக்கு கீழே மிதிபடும் இடமெல்லாம் மனித தசைத் துண்டங்கள். ஆனந்தன் அண்ணா அந்தக் கணத்தை எனக்கு எப்பிடி எழுதுறது எண்டு தெரியேல்லையண்ணா. என்ர அம்மா, அத்தை, அம்மம்மா, ஆனந்தன் அண்ணா.. ஐயோ என்னாலை கத்தக் கூட முடியேல்லையண்ணா.

நான் முதலில கண்டது சோபாவைத்தான். அவளுக்கு நெற்றி, கன்னம் எல்லாம் ரத்தம். கையாலை பொத்திக் கொண்டு குழறிக் கொண்டிருந்தாள். அத்தை தன்ர சேலையில இருந்து கிழிச்சு அவளுக்கு கட்டுப் போட்டுக் கொண்டிருந்தா. அத்தையைப் பார்க்க ரத்தத்தில் குளித்திருப்பது போல கிடந்தது. இதுக்கிடையில சுவர் ஒன்று மேல் விழுந்து உள்ளிருந்து கத்திக் கொண்டிருந்த மச்சாளை அத்தான் கண்டு தூக்கிட்டார். அவவுக்கு காயம் ஒண்டும் இல்லை. ஆனா அவவுக்கு பேச்சு மூச்சொண்டும் வரேல்லை. தீபாவுக்கும் வயிற்றில் கிழியல். மற்றவர்களை உடல் முழுக்க மண்ணும் இரத்தமுமாக அடையாளம் கண்டு கொண்டோம்.

ஆனந்தன் அண்ணா.. என்னவோ தெரியேல்லை. ஆம்பிளையள் எல்லாம் தப்பியிருப்பினம் எண்டு அப்ப நான் நினைச்சிருந்தன் அண்ணா. உங்கடை அம்மா, ஆனந்தன் ஆனந்தன் எண்டு கத்தித் தேடுறது எனக்கு கேட்டது. ஆனந்தன் அண்ணா நீங்கள் எங்கை.. ?

அண்ணா.. நான் உங்களைப் பாத்தபோது நீங்கள் இரண்டு கைகளையும் மேலே தூக்கி திரும்பிப் படுத்திருந்தியள். உங்கடை அம்மா உங்கடை கன்னத்தை தட்டித் தட்டி கத்தினா. உங்களுக்குக் காயம் எதுவுமில்லையெண்டும் மயங்கிட்டியள் எண்டும் தான் நான் நினைச்சிருந்தன். அத்தை உங்கள் முகத்தில் தண்ணி தெளிச்சுக் கொண்டிருந்தா.

அண்ணா உங்கடை உடலைத் திருப்பியபோது தான் கவனிச்சம். நெஞ்சில் இதயமிருக்கும் பக்கமிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை. பெரும் காயம் எதுவுமில்லையண்ணா உங்களுக்கு. ஆனா...

ஆனந்தன் அண்ணா உங்களுக்குச் செத்த வீடு கூட செய்யமுடியவில்லை. உழவு இயந்திரம் ஒன்றில் உங்கள் உடலை ஏற்றி, வரும் வழியில் கோம்பயன் மயானத்தில் எரிக்கக் கொடுத்து விட்டுக் கூடியழத்தான் முடிந்தது.

ஊரெல்லாம் உன் பாட்டுத் தான் உள்ளத்தை மீட்டுது என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் மேலே கைகளைத் தூக்கி திரும்பிப் படுத்திருந்த உங்களை நினைப்பேன் ஆனந்தன் அண்ணா. அது தவிர நீங்கள் இறந்த ஐந்தாவது நாளும் 2001 இன் நடுப்பகுதி ஒன்றிலும் நேற்றும் உங்களை நினைத்தேன்.

சில செய்திகள்:

1995 யூலை 9 இலங்கை இராணுவம் யாழ்குடாநாட்டின் வலிகாமம் மேற்குப் பகுதியில் மேற்கொண்ட ஒபரேசன் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கை காரணமாக தமது கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்து சண்டை நடக்கும் பிரதேசத்திற்கு அப்பால் உள்ள நவாலித் தேவாலயத்தில் தங்கியிருந்த மக்கள் மீது இலங்கை அரச விமானப்படைக்குச் சொந்தமான புக்காரா ரக விமானம் நடாத்திய குண்டுத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

1995 யூலை 14 முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக புலிகள் நடாத்திய எதிர்ச்சமரில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

2001 யூலை 24 கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தினுள் நுழைந்த புலிகள் அங்கிருந்த விமானப் படைக்குச் சொந்தமான 13 வான்கலங்களைத் தாக்கியழித்தனர்.

2007 மார்ச் 26 வான்புலிகள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தினுள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டார்கள்.

23.3.07

ஒட்டுக் கேட்கலாம் வாங்க..

இன்னுமொரு உரையாடல் ஒலிப்பதிவு இது. இள வயது நினைவுகள் குறித்து நானும் சோமிதரனும் பேசியிருக்கின்..... ok.. அலட்டியிருக்கின்றோம். அனுபவங்களைப் பேசுதலில் கூட பதின்ம வயது அனுபவங்கள் தான் பெரும்பாலும் பேசப்படுகின்றன. அதனால் அதற்கும் முந்திய குழந்தைப் பராயத்து நினைவுகளைப் பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கின்றோம். (எங்கடை பதின்ம அனுபவங்களை பப்ளிக்கில சொல்வதில நிறைய சங்கடங்கள் இருக்கின்றன என்பது வேறு விடயம்.)

ஒலிப்பதிவுகளை ஒரு போதும் 10 நிமிடங்களுக்கு மேல் அனுமதிப்பதில்லையென்பதில் உறுதியாக இருப்பதனாலும் வலைப்பதிவில் கேட்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் உருப்படியான வேறு வேலைகளும் இருக்கின்றன என்பதனாலும் அதற்கேற்ப வெட்டிக் கொத்தி தொகுக்கும் போது சில வேளைகளில் தொடர்ச்சித் தன்மை இல்லாது போகலாம். ஒவ்வொரு தடவையும் பயனுள்ள வகையில் ஏதாவது பேச வேண்டும் என நினைப்பது உண்டு.. என்ன செய்ய.. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்....


21.3.07

மூன்று பாட்டு ஒரு மெட்டு! கானா பிரபா, இது வேறு தலைப்பு

கானா பிரபா தனது பதிவொன்றில் இட்டிருந்த மெட்டு ஒன்று பாடல் மூன்று எனும் பதிவின் பாதிப்பில் உருவாகிய குரற்பதிவு இது. பொதுவாக சினிமா என்ற ஒரே தளத்தில் வெவ்வேறு மொழிகளில் ஒரு மெட்டு பல பாடல்களில் பயன்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் மூன்று பாடல்களும் சினிமாவும் சினிமாவிற்கு வெளியேயுமான வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப் பட்டிருக்கின்றன என்பது குறித்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. கேட்டுப் பாருங்கள்.


19.3.07

அந்த ஐந்து பேரையும் யாருக்காவது தெரியுமா..?

இன்று ஒருவருடன் நமது இளம் பராயத்து நினைவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது இது பற்றிய பேச்செழுந்தது. அதாவது நமது இளம்பராயத்து பாடப் புத்தகங்களில் இடம் பெற்ற சுவையான சுவாரசியமான கதைகளை இப்போதும் நம்மால் நினைவு கொள்ள முடிகிறதா என கொஞ்சம் முயற்சித்துப் பார்த்தோம். குறிப்பாக தமிழ் ஆங்கில பாடப்புத்தகங்களில் இவ்வாறான நிறையக் கதைகள் இருந்தன. கதைகள் மட்டுமல்லாமல் பாடல்களும் கூட.

இதனைப் படித்துக் கொண்டிருக்கும் யாருக்காவது Muru என்பவரைத் தெரியுமா? ஆரம்ப ஆங்கில பாடப் புத்தகத்தில் I am Muru, I am from Nigeria எனத் தன்னை அறிமுகப் படுத்துவாரே.. அவர் தான். அவரைத் தெரிந்திருந்தால் நீங்கள் என் வயதொத்தவர்கள்.

Muru ஐ போல மொத்தம் 5 பேர் இருந்தார்கள் என நினைக்கிறேன். எனக்கு Taro ஐயும் ஞாபகமிருக்கிறது. I am Taro, I am from Japan என்றவர் அவர். இது தவிர இந்தியாவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் இருவர் இருந்திருக்கிறார்கள். இலங்கையில் இருந்து கூட ஒரு பெண் தன்னை அறிமுகப் படுத்தியிருப்பார். இவர்கள் எல்லோரும் சேர்ந்து தேங்காய்ப் பூ இனிப்புச் செய்து சாப்பிட்டதும் நினைவிருக்கிறது.

இவர்கள் ஐவரின் பெயர்களும் ஊர்களும் யாருக்காவது தெரியுமா.? எனது அறிதலின் படி வசந்தன், சிநேகிதி, டிசே போன்றோர் இதற்கு பதிலளிக்கக் கூடியவர்களாக இருக்கலாம். இது தவிர, வேறு கதைப்பாத்திரங்களையும் நீங்கள் அறிமுகப்படுத்தலாம். (நான் மூளையைப் போட்டு எவ்வளவு குழப்பியும் சிறு வயது தமிழ்ப் புத்தகங்களிலிருந்து எந்தக் கதையையும் என்னால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. )

எமக்கு முந்தைய பாடத்திட்டத்திலிருந்த இவ்வாறான சுவாரசியமான கதைகள் பற்றியும் அறிய ஆவல் உள்ளது.(கானா பிரபா உங்களை அங்கை சேர்க்கவா ? இங்கை சேர்க்கவா?) எமக்குப் பின்னும் பாடத்திட்டம் மாற்றப் பட்டிருக்கிறது. யாராவது சின்ன வட்டுக்கள் அதையும் எழுதுங்கள்.

தமிழகத்தில் எப்படி..? உங்கள் சிறு வயதில் பாடப்புத்தகங்களில் இருந்த சிறு சிறு கதைகள் அல்லது எவையாயினும் சுவையான விடயங்கள் பற்றி முடிந்தால் ஒரு outline கொடுக்கலாமே..

17.3.07

வெட்கம்

டந்து சென்ற வாகனமொன்று முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்துவிட்டுப் போனது. எவ்வளவுதான் ஒதுங்கி நின்றாலும் போகிற வருகிற வாகனங்கள் கிளப்புகிற செம்புழுதி உடல் முழுவதும் படியத்தான் செய்கிறது.

தெருவில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அது அப்பிடியேதான் குண்டும் குழியுமாக கிடந்தது.

கெனடியைச் சிலர் ஆச்சரியமாக பார்த்துப் போனார்கள்.

'நடை உடைகளில் நான் இந்த இடத்துக்கு புதியவனாக தெரியக்கூடும்' என அவன் நினைத்துக் கொண்டான்.

'சங்கக்கடை கடந்தாச்சு இன்னும் கொஞ்சத்தூரம் தான்..' சுமந்து வந்த பையை அடுத்த தோளுக்கு மாற்றி நடையில் வேகமெடுத்து நடந்தான். அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் அதிகாலையிலேயே இங்கு வந்து நிவாரணத்திற்காக காத்திருந்த காலங்கள் ஞாபகத்தில் வந்து போயின. அப்போதும் கூட சிலர் நடு இரவிலேயே வந்திருந்து காத்திருப்பார்கள்..

''எப்பவாவது இருந்திட்டுத் தான் தர்றாங்கள்.. அதையும் விட முடியுமே..'' அம்மா சொல்வாள்.

உண்மைதான்.

நிவாரணத்தை வாங்கி சைக்கிளில் கட்டிப் புறப்பட எப்பிடியும் மதியம் நெருங்கும்.

இன்று கெனடிக்குத் தெரிந்த எவரையுமே வீதிகளில் காண முடியாதிருந்தது வியப்பாக இருந்தது.

'ஏழு வருசத்துக்குள்ளை எங்கை போட்டாங்கள் எல்லாரும்.. அகிலனைப் போய் பாத்திட்டு போவமோ..' போகிற வழியில் உள்ள ஒரு அகதி முகாமில்தான் அகிலன் குடும்பத்தோடு தங்கியிருந்தான். அவனுக்கு அப்பா இல்லை. ஷெல்லடியில் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் செத்துப் போனதாக ஒரு முறை சொல்லியிருக்கிறான். அம்மாவும் அக்காவும் மட்டும் தான்.

"கெனடி.. முகாமில இருந்து படிக்கிறது கொஞ்சம் கஷ்ரமாக் கிடக்கு.. இரவில உன்ரை வீட்டில இருந்து படிக்கட்டே.." தயங்கித் தயங்கி ஒரு நாள் அவன் கேட்டான்.

"அதுக்கென்னடா வாவன்..."

அகிலன் பதினொரு பன்னிரண்டு மணிவரை இருந்து படிப்பான். சில சமயம் இவனுக்கு நித்திரை தூங்கி வழியும். அவ்வாறான நேரங்களில் எரிச்சலும் வந்ததுண்டு.

'அகிலன் இப்ப அங்கைதான் இருக்கிறானோ.. வேறை இடம் போனானோ..?'

வியர்வையோடு புழுதி படிந்து ஒரு வித அசூசையை கெனடி உணர்ந்தான். தலையெல்லாம் செம்மண்.. 'முதலில போய் முழுக வேணும்.. பிறகு அகிலனிட்டை வரலாம்..'

அகதி முகாம் இப்போது இல்லை. அது இருந்த இடத்தில வேறு சில கடைகள் முளைத்திருந்தன. 'ஒரு வேளை பிளேன் கிளேன் ஏதாவது அடிச்சு.. ச்சீ.. சண்டை நிண்டு போச்சு.. சனங்கள் சொந்த இடங்களுக்குப் போயிருக்குங்கள்.. அகிலன் எங்கை போயிருப்பான்..'

அடுத்த திருப்பத்தைக் கெனடி கடந்தான். இதே திருப்பத்தால் நேரே போய்த் திரும்பினால் மாலிக்கா வீடு வரும். ஏனோ தெரியவில்லை இன்று காலை புறப்பட்டதிலிருந்து அவளின் நினைவுகளே வருகின்றன.

'அவள் இப்ப எப்பிடியிருப்பாள். என்னையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பாளா..'

கெனடிக்கு மாலிக்காவைச் சந்திக்க வேண்டும் போல இருந்தது.

"க்கா அக்கா.." வாசலில் நின்று அழைத்தான் கெனடி. மண் விறாந்தையில் சிறுவயதுப் பொடியன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அக்காவின் மகனாயிருக்கக் கூடும். கெனடி அங்கு இருந்த போது அவன் பிறந்திருக்க வில்லை.

"அம்மா ஆரோ வந்திருக்கினம்..." அவன் உள்ளே போய் அக்காவை கூடவே அழைத்த வந்தான். அக்கா முன்பிருந்ததை விட சரியாக இளைத்துப் போயிருந்தாள்.

"கெனடியே.. வா வா என்ன திடீரென்று.." அக்காவின் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.

கெனடி இங்கு இடம் பெயர்ந்து வந்திருந்த காலப்பகுதியில் தான் அக்காவின் குடும்பம் அவனுக்கு அறிமுகமானது. அவர்களும் இடம்பெயர்ந்து வந்து அடுத்த காணியில் குடியிருந்தார்கள். அக்காவின் கணவர் கண்ணன் மாமா சிரிக்க சிரிக்க பேசுவார். அவரோடை பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பெரும்பாலான நேரங்களில் கெனடி அங்கு தான் நிற்பான்.

"கொஞ்சம் பொறு பாய் எடுத்தாறன்.."

"இல்லையக்கா வேண்டாம்.." கெனடி சுவரில் சாய்ந்து நிலத்தில் அமர்ந்தான். அக்கா வீட்டு மண் சுவர்கள் மழை ஈரத்தில் சில இடங்களில் கரைந்திருந்தன. கூரை வேயப்பட்டு பல காலமாயிருக்கக் கூடும். கிடுகுகள் சிதிலமடைந்திருந்தன.

"இஞ்சை வாங்கோ பிள்ளைக்கு என்ன பேர்.." அவனையே பார்த்தபடி நின்றிருந்த அக்காவின் மகனைக் கூப்பிடவும் அவன் தாயின் பின்னால் ஓடிப்போய் மறைந்து கொண்டான்.

"நேற்றுப்போல கிடக்கு.. ஏழு வருசமாச்சு.." அக்கா எலுமிச்சம் பழநீர் கொண்டு வந்து கொடுத்தாள். நடந்து வந்த களைப்பிற்கும் வெயிலுக்கும் அது இதமாயிருந்தது.

"அக்கா மிஸ்டர் கண்ணா எங்கை?" கண்ணன் மாமாவை கெனடி அப்பிடித்தான் அழைப்பான். முன்பு அக்காவும் அப்பிடித்தான் அழைப்பாள். இப்போது எப்படியென்று தெரியவில்லை.

"வேலைக்கு போட்டார்.. பின்னேரம் வந்திடுவார். நீ குளிச்சிட்டு வாவன்.. சாப்பிடலாம்.."

"ஓம் அக்கா.." கெனடி துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு நடந்தான். கிணறு காட்டோடு அண்டிக்கிடந்த அடுத்த காணியில் இருந்தது. அந்தச் சுற்றாடலில் உள்ள ஒரேயொரு நல்ல தண்ணீர்க் கிணறும் அதுதான். அந்தக் காணிக்குள்த் தான் கெனடியின் வீடும் இருந்தது.

'ஏன் அதுக்கை போய் வீட்டைக் கட்டுறியள்.. பக்கத்தில காடு.. யானையள் அடிக்கடி வரும்.. அதவும் இளந்தென்னையள் நிக்கிற காணி. கட்டாயம் யானை வரும்..' அங்கு வீடு கட்ட கெனடியின் வீட்டில் தீர்மானித்த போது பலரும் பயமுறுத்தினார்கள்.

'கொஞ்ச வருசத்துக்கு முதல் அந்தக் கிணத்துக்குள்ளை ஆரோ பெட்டை விழுந்து செத்ததாம்..' என்று கூடச் சிலர் சொன்னார்கள். ஆனாலும் 'நல்ல தண்ணீர்தான் ஒரு வீட்டுக்கு முக்கியம்' என்று அம்மா சொல்லி முடிவெடுத்தாள்.

பத்து ஏக்கர் பரப்புக் காணியில் தன்னந்தனியனாக அவர்களின் வீடு எழுந்தது. அந்தக் காலங்கள் பசுமையானவை. காட்டுக்குள் போய் மரந்தடிகள் வெட்டி வந்து கிடங்கு வெட்டி மண் எடுத்துக் குழைத்து சுவரெழுப்பி இரண்டு அறைகளும் ஒரு விறாந்தையுமென வரைபடம் வரைந்து ... அப்போதெல்லாம் தான் ஒரு இன்ஜினியர் என்ற நினைப்பு கெனடிக்குள்ளிருந்தது.

சின்ன ஒழுங்கையைத் தாண்டி கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தான் கெனடி. இளந்தென்னைகள் இப்போது வளர்ந்து காய்த்திருந்தன. வீடிருந்த இடத்தில் மண்மேடு மட்டும் இருந்தது. அவர்கள் வெளியெறிய சில நாட்களிலேயே அது இடிக்கப்பட்டிருக்கக்கூடும்.

கெனடி மண்மேட்டில் போய் நின்று கொண்டான். இனம் புரியாத ஏக்கம் ஒன்று தொண்டையை அடைத்துக் கொண்டது.

"அண்ணா வாளியை விட்டுட்டு போட்டியள்.. அம்மா குடுத்துவிட சொன்னா.." அக்காவின் மகனிடமிருந்து வாளியை வாங்கிக் கொண்டு கிணற்றடிக்குப் பொனான். முன்பெல்லாம் இங்கு கூட்டம் அலைமோதும். நல்ல தண்ணீர் அள்ள வருபவர்கள், குளிக்க வருபவர்கள் என எப்போதுமே அது கலகலப்பாயிருக்கும். இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. கெனடி ஒரு வித வெறுமையை உணர்ந்து கொண்டான்.

தூரத்தே காணி எல்லையில் காடு தெரிந்தது. சரியான வெக்கைக் காடு. உள்ளே போய் வந்தால் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டும். மரந்தடி வெட்ட அதற்குள் போன சமயங்களிலெல்லாம் இலை குழைகளை வெட்டிப்போட்டு பாதையை அடையாளப் படுத்தித்தான் போக வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் திசை மாறிப் போய்விடக்கூடும்.

அந்தக் காட்டுக்குள்ளிருந்து தான் ஒரு முறை தனியன் யானையொன்று காணிக்குள் வந்து தென்னைகளைத் துவசம் செய்திருந்தது. கெனடிக்கு ஞாபகம் இருக்கிறது. நடு இரவில் அம்மா எழுப்பவும் எழும்பியவன் வீடு பரபரத்துக் கொண்டிருப்பதை கண்டுவிட்டு 'முல்லைத்தீவிலை இருந்து ஆமி மூவ் பண்ணுறான் போல கிடக்கு.. இந்த இருட்டுக்குள்ளை எங்கை போறது..' என்று தான் முதலில் நினைத்தான்.

"வந்திருக்கிறது தனியன் யானை.. கூட்டமா வந்தால் அதுகள் தன்பாட்டில போய்விடுங்கள். இது தனியனா வந்திருக்கு.."

"குசினிக்குள்ளை உப்பு மா ஏதாவது இருக்கோ.. அதுகளுக்குத்தான் யானையள் வரும்"

"சத்தம் வையுங்கொ அது போயிடும்."

ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டார்கள். சத்தம் வைத்தும், வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டியும் அன்றைய இரவு கழிந்தது. அடுத்த நாள் காலை போய்ப்பாத்த போது பதின்மூன்று இளம் தென்னைகளை யானை துவசம் செய்திருந்தது. ஆங்காங்கே லத்திக்கும்பங்களும் கிடந்தன. அன்று முழுதும் கண்காட்சி பார்க்க வருவது போல சனம் வந்து பார்த்தது.

கெனடி தலையைத் துவட்டிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்.

"அம்மா கெனடி அண்ணா வந்திட்டார்." என்றான் அக்காவின் மகன். இப்போது அவன் கெனடியோடு ஒட்டிக்கொண்டான். சாப்பிடும் போதும் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். அவனுக்கென எதுவும் வாங்கி வரேல்லை. வெளிய போய் ஏதாவது வாங்கி வந்து குடுப்பம் என கெனடி நினைத்துக் கொண்டான்.

"அக்கா இப்பவும் யானையள் வாறதோ?"

"அதுகள் தன்பாட்டில வருங்கள் போகுங்கள்.." சிரித்துக் கொண்டே இயல்பாக சொன்னாள் அக்கா. இதே அக்கா தான் முதல்த்தடவை யானை வந்த போது கத்திக் குளறினாள்.

மாலையில் கண்ணன் மாமா வரும் போதே இவனைக் கண்டு கொண்டார். "எட கெனடியோ காலமை காகம் கத்தேக்கையே அதின்ரை நிறத்தில ஆரோ வரப்போகினம் எண்டு நினைச்சன்.. நீ தானா.. "வார்த்தைக்கு வார்த்தை பகிடி தெறிக்க பேசுகிற அவரது பழக்கம் அப்பிடியே தானிருந்தது.

'மனிசன் மாறேல்ல'

இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு முற்றத்தில் பாயை விரித்து அவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். முழு நிலவுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அக்காவின் மகனை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டான் கெனடி.

"தம்பி என்ன படிக்கிறியள்"

"நேசறி"

"படிச்சு என்னவா வர போறியள்"

"டொக்டரா வருவன்.."

"டொக்டரா வந்து எனக்கு ஊசி போடுவியளோ"

"இல்லை"

"அப்ப..?"

"பிளேன் அடிச்சும் ஷெல் அடிச்சும் காயம்பட்ட ஆக்களுக்கு மருந்து கட்டுவன்.."

கெனடிக்கு அவன் பதில் உறைத்தது. அணைத்துக்கொண்டே சொன்னான். "இனி பிளேனெல்லாம் அடிக்காது. ஆக்கள் ஒருத்தரும் காயப்பட மாட்டினம். தம்பி பயப்பிடத்தேவையில்லை." கெனடியின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டே அவன் சொன்னான்.

"பிளேன் அடிச்சாலும் எனக்கு பயமில்லை.. நான் விழுந்து படுத்திடுவன்.." சின்னதான சிரிப்பொன்றை உதிர்க்கத்தான் கெனடியால் முடிந்தது. ஆனாலும் இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு கேள்வி தொக்கி நின்று கொண்டேயிருந்தது.

"என்ன வந்தனி வீட்டிலேயே நிக்கிறாய்.. பழைய சினேகிதங்களை பாக்க போகேல்லையோ.." என்று அக்கா கேட்ட போது தான் அகிலனைப் பற்றி அவர்களிடம் கேட்கலாம் என்று தோன்றியது. அகிலனை அவர்களுக்கும் தெரியும்.

"அக்கா அகிலனை உங்களுக்க தெரியும் தானே.. வரேக்கை பாத்தன் முகாமையே காணேல்லை. எங்கை இப்ப அவன் இருக்கிறான்.." அக்கா அமைதியானாள்.

"அவன் இப்ப இல்லை" கண்ணன் மாமாதான் சொன்னார். கெனடியால் உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாமல் இருந்தது. அவர் தொடர்ந்தார்.

"வீரச்சா நாலு வருசத்தக்கு முதல்"

கெனடி அமைதியானான். அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. ஏழு வருசத்தில் இந்தச் செய்தி அவனுக்கு வந்திருக்கவேயில்லை.

அகிலன் மற்றெல்லோரையும் விட உயரத்தில் குள்ளமானவன். "ஆமி வந்தால் எங்களாலை துவக்கெடுத்து சுடவாவது முடியும். நீ பாவம் துவக்கு உனக்க மேலாலை நிக்கும். எப்பிடித் தூக்கிறது." படிக்கிற காலத்தில் அவனை நண்பர்கள் இப்படி எல்லாம் கேலி செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அகிலன் மெல்லியதாய்ச் சிரிப்பான். அப்போதே வயதுக்கு மீறிய பொறுப்புணர்வுகளைக் கொண்டிருந்த அகிலனின் பேச்சில் எப்போதுமே ஒரு வித முதிர்ச்சி தெரியும்.

"கிழடுகள் மாதிரி கதையாதையடா" என்று கெனடி கூட சொல்லியிருக்கிறான்.

அகிலனின் அம்மா இருக்குமிடத்தை அக்கா சொன்னாள். கட்டாயம் போகோணும்

இரவு படுக்க போகும் முன்பு கண்ணன் மாமா கேட்டார்

"ஏதேனும் அலுவலா வந்தனியோ..?"

"இல்லை சும்மா உங்களையும்.." என்பதோடு கெனடி நிறுத்திக் கொண்டான். கண்ணன் மாமாவிற்கோ அக்காவிற்கோ மாலிக்காவைத் தெரியாது. அவளைப் பற்றி யாரிடமாவது கேட்கலாம் என்றால் முடியாமலிருக்கிறது.

'மாலிக்கா இப்ப எப்படியிருப்பாள்..' கெனடிக்கு அவளைப் பார்க்க வேண்டுமென்ற வெறியோ தவிப்போ இல்லாவிடினும் அவன் ஆர்வமாயிருந்தான்.

மாலிக்கா பள்ளிக்கூட நாட்களில்தான் அறிமுகமானாள். அப்போது பள்ளிக்கூட கட்டடங்களில் இடம் பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருந்தார்கள். மரங்களுக்கு கீழே வாங்கு மேசைகளைப்போட்டுத் தான் வகுப்புக்கள் நடந்தன. சின்னப் பிள்ளைகள் நிலத்தில் சாக்குப் போட்டு அமர்ந்து படித்தார்கள்.

கெனடியின் வகுப்பில்த்தான் மாலிக்காவும் இணைந்திருந்தாள். கொடுக்கப்படும் கணக்ககளை உடனுக்குடன் செய்து அவள் ஆசிரியருக்கு காட்டும் போதெல்லாம் ஆச்சரியமாயிருந்தாலும் மாலிக்கா கதை கவிதை எல்லாம் எழுதுவாள் என்று தெரிந்த போது தான் அவள் மீதொரு ஈர்ப்பு விழுந்திருக்க வேண்டும்.

மாலிக்காவிற்கு சரியான வெட்கம். நிமிர்ந்து கூட பேசமாட்டாள். பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளில்தான் பதில் வரும். கெனடிக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் தெருவில் அவள் எதிரில் வந்தாள்.

"மாலிக்கா நில்லும்" இவன் தடுத்து நிறுத்திய போது அவள் திகைத்திருக்க வேண்டும். தலை குனிந்து நின்று கொண்டாள்.

"நீங்கள் கதையெல்லாம் எழுதுவியளாம் உண்மையோ"

"ம்.."

"போட்டியளிலை எல்லாம் கலந்து கொள்ளுவியளோ" மாலிக்கா பேசாமல் நின்றாள்.

"போட்டியளில கலந்து கொண்டு இன்னொருவரின்ரை வரையறைக்குள்ளை எழுதாதேங்கோ.. சுயமா நீங்களா எழுதுங்கோ.. உங்களுக்கு என்ன தோன்றுதோ அதை எழுதுங்கோ.. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கோ.." என்று தொடங்கி நிறைய பேச வேண்டுமென கெனடி நினைத்திருந்தான். எதுவுமே முடியவில்லை. மாலிக்கா விலகிச் சென்றாள். அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது.

இப்போ நினைத்தாலும் சிரிப்பாயிருக்கிறது.

மாலிக்கா இப்பவும் அதே மாதிரித்தான் இருப்பாளோ.. வெட்கப்படுவாளோ.. நாளைக்கு அவளின்ரை வீட்டை போகலாம்.. ஆனால் அவளின் அப்பாவை நினைக்க பயமாயிருந்தது. மனிசன் என்ன சொல்லுதோ.. 'இதிலையென்ன நான் அவளோடை படிச்சவன்.. சும்மா சந்திக்க போறன்..'

நாளை அவள் வீட்டுக்கு போவதென கெனடி தீர்மானித்துக் கொண்டான்.

நிறைய கேள்விகளொடு உட்கார்ந்திருந்தான் கெனடி. 'மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் வேறை எங்கை..'

அன்று காலையிலேயெ அவன் மாலிக்கா வீட்டுக்கு போயிருந்தான். சைக்கிளை நிறுத்தி விட்டு உள் நுழைந்தவனை வாசலிலேயே அவர் கண்டு கொண்டார் மாலிக்காவின் அப்பா

லேசான உதறல் எடுத்தாலும் கெனடி சுதாகரித்துக் கொண்டான்.

"ஆரப்பன் உள்ளை வாரும்"

"ஐயா மாலிக்கா நிக்கிறாவோ.."

அவர் அவனை யார் எவர் என்று கேட்கவேயில்லை.

"இல்லைத் தம்பி பின்னேரம் சிலநேரம் வருவா.." கெனடி தான் யாரென்பதை கூறிவிட்டு திரும்பியிருந்தான்.

மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் பின் எங்கே.. ஒரு வேளை கலியாணம் முடிச்சிருப்பாளோ.. பள்ளிக்கூட பக்கம் போனால் யாராவது சொல்லக் கூடும். அவனது ஆசிரியர்கள் அவனை ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியவில்லை.

வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து உறுமி நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு பெண்கள் இறங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தி..

சட்டென்று அடையாளம் கண்டு கொண்டான்.

அது மாலிக்காதான். மற்றவள் யாரென்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தது. வியப்பு மேலிட எழுந்தான்.

"வணக்கம் கெனடி எப்பிடியிருக்கிறியள்" கேட்டுக்கொண்டே மாலிக்கா உள்ளே வந்தாள். அந்த உடையில் அவள் வெகு கம்பீரமாக தெரிந்தாள். கையில் ஏதோ பைலும் சில பேப்பர்களும் இருந்தன. அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

"எப்பிடி சுகமாயிருக்கிறியளோ.."

"ம்" கெனடியிடமிருந்து ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. குசினிக்குள்ளிருந்து அக்கா எட்டிப்பார்த்து யாரென்று கண்ணால் கேட்டாள்.

"என்னோடை படிச்சவை"

மாலிக்கா நிறைய பேசினாள். "என்ன ஆள் சரியா உடம்பு வைச்சிட்டியள்.. சொக்கையள் வைச்சு.. மட்டுப்பிடிக்க முடியேல்லை.." தன்னுடைய பெயர் என்று ஒரு புதுப்பெயர் சொன்னாள்.

ஏனோ தெரியவில்லை. அவளைக் கண்டது முதலே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. பெரும்பாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.

மாலிக்காவுடன் வந்தவள் அக்காவின் மகனுடன் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தாள். அக்கா தேனீர் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டே மாலிக்கா சொன்னாள்.

"அக்கா கெனடி சரியா வெட்கப்படுறார் போலக் கிடக்கு." கெனடிக்கு யாரோ தலையில் குட்டியதைப் போல இருந்தது. அக்கா சிரிச்சுக் கொண்டே உள்ளே போனாள்.

"சரி கெனடி காலமை வீட்டை போயிருந்தன். அப்பா தான் சொன்னவர். எனக்கு உங்கடை வீடும் சரியா தெரியாது. ஒரு மாதிரி கண்டு பிடிச்சு வந்திட்டம். வேறை என்ன நாங்கள் வரப்போறம். அக்கா போயிட்டு வாறம்." மாலிக்கா அக்காவை கூப்பிட்டு சொன்னாள். வாசல் வரை கெனடி வந்தான். அக்காவும் கூட வந்தாள்.

மாலிக்கா மோட்டார் சைக்கிளை ஸ்ரார்ட் செய்தாள். "கெனடி நீங்களும் உங்கடை பிரண்ட் ஒராளும் எங்கடை ஒழுங்கைக்குள்ளை மோட்டச்சைக்கிளாலை விழுந்த ஞாபகம் இருக்கோ.."

ஒரு சமயம் மாலிக்கா வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் அவளை வேகமாக கடந்து சாகசம் செய்ய வேண்டுமென்ற நினைப்பில் சட்டெனத் திருப்ப அது நிலை தடுமாறி அவனையும் பின்னாலிருந்தவனையும் தூக்கி வீதியில் எறிந்தது. அப்போதும் மாலிக்கா குனிந்த தலை நிமிராமல் அமைதியாகத்தான் போனாள். பின்னாலிருந்தவனுக்கு முழங்கால் மூட்டு உடைந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் வீட்டிலிருக்க வேண்டியதாய் போனது.

"ம்.." கெனடி உண்மையிலேயே இப்பொழுது வெட்கப்பட்டான்..

அவர்கள் புறப்பட்டார்கள். ஒழுங்கையின் வளைவுகளில் லாவகமாக ஓடி வீதியில் அவர்கள் திரும்பினார்கள். கெனடி நெடுநேரமாய் அங்கேயே நின்றான்.
(யாவும் கற்பனையல்ல)
20.04.2003 தினக்குரல்

15.3.07

சுஜித் ஜியின் இன்னொரு பாடல் - சயந்தன்

சுஜித் ஜி யின் இன்னுமொரு பாடல் இது. (இதனோடு நிறுத்தச் சொல்லுப்படுகுது.) கேட்டுப் பாருங்கள்.


14.3.07

சுஜித் ஜியின் We Tamil Boyz

சுஜித் ஜியின் அடுத்த இசைத் தொகுப்பான Ceylon க்கான சில பாடல்கள் கிடைத்தன. இந்த We tamil Boyz பாடல் அதன் ஆரம்ப சில வரிகள் சில மாதங்களுக்கு முன்பே கிடைத்த போது என்னைக் கவர்ந்திருந்தது. இப்போது முழுமையாகக் கிடைத்திருக்கிறது. இதனைத் தவிரவும் அடிமேல் அடிவைத்து, Buyakka Buyakka, பிறப்பெடு போன்ற பாடல்களும் நன்றாகத் தான் உள்ளன.


13.3.07

வலைப் பதிவர்கள் பற்றிய உற்சாக உரையாடல்

இது ஒரு உற்சாக அலட்டல் பதிவு. ஏற்கனவே நானும் சோமியும் அலட்டி இட்ட பதிவுக்கு முன்பாக சில காலங்களுக்கு முன்பு ஒலிப்பதிவு செய்யப் பட்டது. ஒரு வேளை இது எப்போது ஒலிப் பதிவு செய்யப்பட்டதென்பதை சோமியும் மறந்திருக்கலாம். வழமை போலவே நோக்கமெதுவுமற்ற பலதும் பத்துமான உரையாடல் தான் இப்பதிவாயினும் ஆரம்பத்தில் சோமி தனது வலைப் பதிவு குறித்தும் பதிவர்கள் குறித்தும் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

பிற்பாதியில் சாதாரண அலட்டல் தான் இடம்பெறும். அவ்வப்போது ஒலிப்பதிவை குழப்பும் விதத்தில் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். (மயக்கும் சிரிப்பு..:))



சோமி நீ என்னைப் பற்றி புகழ்ந்து பாடிய தோத்திரங்களை கூச்சத்தில் எடிற் பண்ணிட்டன். பரவாயில்லை பின்னூட்டத்தில வந்து சொல்லு. :))

9.3.07

நான் போட்ட பின்னூட்டங்கள்

எனது வலைப்பதிவில் பிறர் இடுகின்ற பின்னூட்டங்களைத் திரட்டினால்ப் போதுமா..? நான் மற்றவர்களுக்கு இடுகின்ற பின்னூட்டங்களைத் திரட்ட வேண்டாமா..? அவற்றை நினைவு வைத்துக்கொள்வது எப்படி..? இப்படி யோசித்ததன் விளைவு தான் பக்கத்தில் நீங்கள் பார்க்கின்ற நான் இட்ட பின்னூட்டங்கள் என்னும் பகுதி.

cocomment என்னும் தள உதவியுடன் Fire fox உலாவியின் அனுசரணையுடன் இதனைச் செய்துள்ளேன். இதன் மூலம் நான் எவருக்கெல்லாம் பின்னூட்டமிடுகின்றேனோ அவர்களின் பதிவின் பெயர் இடுகையின் பெயர் மற்றும் எனது பின்னூட்டத்தின் ஒரு பகுதி இவையாவும் எனது வலைப்பதிவிலும் வந்து தாமாகவே குந்திக் கொள்வார்கள்.

உதாராணமாக கானா பிரபாவின் ஒரு பதிவுக்கு நான் பின்னூட்டமிடுகிறேன். Fire fox இல் நிறுவப்பட்டுள்ள ஒரு நீட்சி அந்தப் பின்னூட்டத்தைத் தானாகவே தூக்கி சென்று ஒரு இடத்தில் சேமிக்கும். சேமிக்கப் பட்ட இடத்திலிருந்து எனது வலைப்பதிவு அதனை தானாகவே பெற்றுக் கொள்ளும். அதிலும் கானா பிரபா எனது பின்னூட்டத்தை அனுமதிக்கும் காலம் வரை காத்திராமல் உடனடியாகவே காட்சிப் படுத்தும். (அனுமதிக்காட்டியும் காட்டுவோமே..)

எனது பயன்பாட்டுக் கணணிகள் தவிர்ந்த புதிய கணணியொன்றில் எந்த வித ஏற்பாடுகளுமற்று நான் பிறருக்கு இடும் பின்னூட்டம் திரட்டப்பட மாட்டாது.

வலைப் பதிவு தவிர்ந்த வேறு களங்களில் நான் ஏதாவது எழுதினால் கூட அவையும் திரட்டப்படக் கூடும். (ஈ மெயில்களையும் திரட்டுமோ..:((

என்ன பதிவு என்ன இடுவையென தனித் தனியே பிரித்துக் காட்டுவது சிறப்பானது.

ஒழுங்காக வேலை செய்தால் விபரமாக எழுதுகிறேன். :)

4.3.07

நாங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லை?

திருமண நிகழ்வுக்காக பெண் பார்க்கப் போகும் ஒரு வழக்கம் தமிழகத்தில் ( இந்தியா.) உள்ளதென்பதை எனது பதின்மங்களில் தமிழக சமூக நாவல்களிலும், திரைப்படங்களிலும் நான் அறிந்து கொண்ட போது, அவை கதைக்கு சுவாரசியம் சேர்க்கச் சொல்லப்படுகின்றன எனத்தான் நம்பியிருந்தேன். கதைகளிலும், படங்களிலும் பெண் பார்க்கும் நிகழ்வில் சில சமாசாரங்கள் எப்போதும் நடைமுறையில் இருக்கும். பஜ்ஜி சொஜ்ஜி, பெண்ணைப் பாடச் சொல்லி கேட்பது, நேரடியான சீதனப் பேச்சுக்கள், வீட்டுக்குப் போய் கடிதம் போடுகிறோம் என்பவையே அவை. அதிலும் குறிப்பாக பெண்ணைப் பாடச்சொல்லிக் கேட்பதெல்லாம் நடைமுறை வாழ்வில் நடக்குமா என்ற சந்தேகத்திலேயே இது வெறும் கதையாயிருக்கும் என நினைத்ததுண்டு.

ஆனால் பெண் பார்க்கச் செல்லும் பழக்கம் அங்கு பெரும்பாலும் நடைமுறையில் உண்டென்பதை சில நண்பர்கள் மூலமாகவும், தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நேயர்களிடமிருந்தும் பின்னாளில் அறிந்து கொண்டேன்.

ஈழத்தில் இவ்வாறான பெண் பார்க்கச் செல்லும் நடைமுறை தற்போதைய வழக்கில் இல்லை. நிறையப் பண்பாட்டுத் தொடர்புடைய தமிழகத்திடமிருந்து இந்த வழக்கம், நமக்கும் முன்பு நடைமுறையிலிருந்து பின்னர் அருகியற்றதா, அல்லது இந்த நடைமுறை அறவே இல்லையா என்பதை பழம்பெரும் பதிவர்களான மலைநாடன், சின்னக்குட்டி, கானா பிரபா போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும்.

ஈழத்தில் திருமணம் நிச்சயிக்கப் பட்ட பின்னர் வேண்டுமானால் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு செல்வதுண்டே தவிர பெண் வீட்டுக்குப் போய் அங்கு வைத்து பிடித்தால் நிச்சயம் செய்யலாம் என்ற நடைமுறையில்லை.

நிறுவன ரீதியான திருமண முகவர்கள், மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் எனப் பரவலாக அங்கும் நடைமுறை வந்துவிட்டாலும் அவற்றின் மூலம் கிடைக்கப் பெற்ற சாத்தியமான இடங்களுக்கு தமது உற்றார், உறவினர், அன்புச் சித்தப்பா, ஆசை மாமா என ஒட்டுமொத்தமாய்ச் சென்று, பொண்ணுக்குப் பாடத்தெரியுமா என்று எவரும் ஈழத்தில் கேட்காமல் விட்டதேன் என யோசிக்கிறேன்.

பெரும்பாலும் மூன்றாவது நபர் ஒருவர் இருதரப்புக்கும் இடையில் உறவினைப் பேணுவார். நிறுவன முகவர்கள் தவிர, இடை உறவினைப் பேணும் இவர்களைத் தரகர் என முடியுமா தெரியவில்லை. கிராமப் புறங்களில் நாலு பேருக்கு நல்லது செய்யலாம் என நினைக்கும் யாராவது ஒருவர் தான் இந்தப் பணியில் ஈடுபடுவார். பெட்டையின்ர படம் ஒண்டு தரட்டாம் எண்டதில இருந்து பிடிச்சிருக்காம் சாதகம் தரட்டாம் என்பது வரை எல்லாம் இவர் ஊடாகத் தான் பேசி முடிக்கப்படும். வெறும் மீடியேற்றர் என்றாலும் கூட அவ்வப்போது கிளம்புகின்ற சின்ன சின்னப் பிரச்சனைகளை சமரசம் செய்ய உதவுவார்.

ஒருவேளை பெண்ணை நேரடியாப் பார்க்கும் தேவையிருந்தால்க் கூட கோயில்களிலேயோ வேறெங்காவது வீடுகளிலோ பார்த்து விடுவார்கள்.

இரு வீட்டுக்கும் இணக்கப் பாட்டுக்கு வருவதை ஈழத்தில் முற்றாக்கியாச்சு என்று குறிப்பிடுவர். இணக்கம் எட்டப்பட்டுப் பின்னர் முறிந்தால் சம்பந்தம் கலைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. சம்பந்தம் குழைக்கிறது என்று ஒன்றும் உள்ளது. நான் நினைப்பது சரியானால் அது இது தான். இரு தரப்பும் இணக்கம் ஏற்பட்டால் அதாவது முற்றாக்கினால் மாப்பிள்ளை வீடு தனது சுற்றம் சூழ பெண் வீட்டுக்குச் சென்று அளவளாவும். அன்று ஒரு முருங்கை மரம் கூட பெண் வீட்டில் நட்டு வைப்பார்கள். (எல்லாம் திட்டத்தோடு தானோ..:)

என்னிடம் உள்ளது இரு கேள்விகள்.
பெண்களை நேரடியாக வீட்டில் சென்று பார்த்து முடிவெடுக்கும் வழக்கம் அங்கு சாதாரண நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம் தானா..? அல்லது திரைப்படங்கள் அவற்றை ஊதிப்பெருப்பித்துக் காட்டுகின்றனவா..?

ஈழத்தில் எப்போதாவது இவ்வாறான பெண்பார்க்கும் நடைமுறை வழக்கில் இருந்ததா..

முடிந்தால் ஈழத்துக் கல்யாண வழக்கில் உள்ள விசேட சொற்களையும் குறிப்பிடுங்களேன். உதாரணமாக முற்றாக்கியாச்சு.. சம்மந்தம் குழைத்தல்..

2.3.07

என் காதல் கதை


ஏதோ மின்னல் ஏதோ மின்னல் தேகம் தொடுகிறதே
பூட்டிப் போட்ட தாழம் பூவில் பூட்டு உடைகிறதே
சல்லாப வெயில் அடிக்க கள்ளூறும் புயல் அடிக்க
ஆசை மொட்டுவிட நாணம் கட்டிவிட கூந்தல் கூடச் சுடுதே
பார்வை பின்னலிட ஜாடை ஜன்னலிட தாகம் மூட்டி விடுதே..


செல்லக்கடிகளும் சின்னக் கீறல்களுமெனும் பூனைக் கதையை வாசித்த நண்பர் ஒருவர் அனுப்பிய நாய்க்காதற்கதை இது. அத்தோடு இன்னொரு விடயம், என் காதல் கதை எழுதுவது நாயாகிய நான் என தலைப்பினைத் திருத்தி வாசித்துக் கொள்ளவும்.

wweeeeeeeeeee

wweeeeeeeeeee

1.3.07

தமிழ்மணத் தடையினை உடைத்தவன் நான்

என்ன பாக்கிறீங்க.. ஆச்சரியமா இருக்கா.. இவனுக்கு மட்டும் எப்பிடி 34 வது பின்னூட்டத்தினையும் தமிழ்மணம் திரட்டுது என்று தானே ஆச்சரியப் படுறீங்க.? தடைகள் தாண்டப்பட வேண்டியவை அல்ல.. தகர்த்தெறியப்பட வேண்டியவை என்று என்ர ஆசிரியர் அடிக்கடி சொல்லுவார். அதனால என்ர அறிவைப் ? பாவிச்சு .... ... இந்த இடத்தில நீங்க கண்டு பிடிச்சிடுவீங்க. இவன் சுத்துறான் எண்டு.

சத்தியமா எனக்கொண்ணும் தெரியாதுங்க. வெறும் 8 பின்னூட்டத்தை 34 பின்னூட்டம் எண்டு காட்டுறதில எனக்கொண்டும் பிரச்சனையில்லைத்தான். ஆனா என்ர கவலையெல்லாம் இனி வாற 9வது 10வது பின்னூட்டங்கள் காட்டப்படுமா இல்லாட்டி 35 வது பின்னூட்டம் வரைக்கும் காத்திருந்து பிறகு தான் திரட்டுமா என்பது தான். (அப்பிடிப் பாத்தால் கூட 35 என்ற எண் 30 க்கு பிறகு வாறதாலை தமிழ்மணத்தில வராதே..)