கறுப்பி மற்றும் துளசிக்காவிற்கு எனது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இரண்டாவது கண்ணாக நான் பேச மன்னிக்கவும் எழுத எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்.. சும்மா போங்கோ.. எனக்கு உப்பிடி எழுதவே வருகுதில்லை. வட்டார மொழிக்கதையள் பிடிக்காத ஆக்களும் என்ரை பதிவுகளை வாசிக்க வேணும் எண்டு விரும்பி வட்டாரமில்லாத கதையளாய் முக்கோணமாரமாய் செவ்வகமாரமாய் எழுதுவம் எண்டு முயற்சிக்கிறன். முடியாமல் கிடக்கு.
உது பத்தாது எண்டு நானும் வசந்தனும் ஒண்டு எண்டு கனபேர் நினைக்கிறதுக்கு என்ரையும் அவற்றையும் பேச்சு மொழி எழுத்து நடை ஒரே மாதிரி கிட்டத்தட்ட இருக்கிறது தான் காரணம் எண்ட படியால பேசாமல் உன்ரை எழுத்து நடையை மாத்து எண்டு நேற்று மனட்சாட்சி வந்து சொல்ல முதல்ல அவனை மாத்தச் சொல்லு பிறகு நான் மாத்துறன் எண்டேதும் சொல்லாமல் மனட்சாட்சிப்படி நடக்க இல்லயில்ல எழுத வெளிக்கிட்டன்.. முடியாமல் கிடக்கு..
நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்கை நிரந்தர வாசி. ஒரே வாசிக்கிறது தான் வேலை. இந்தப்பழக்கம் இயல்பா வந்ததெண்டு சொல்லமாட்டன். எல்லாத்துக்கும் காரணம் என்ரை அத்தான் தான். அவர் ஒரு புத்தக பிரியர். ஊரில இருந்த நூலக பொறுப்பாளரா வேறை அவர் இருந்தவர். வேறை காரணங்கள் என்னெண்டு யோசிச்சால் அந்த நேரம் ரிவியோ படங்களோ இன்ரநெற்றுக்களோ இல்லாத சூழ்நிலையும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
என்ன காரணமெண்டு தெரியாது எனக்கு இலங்கை எழுத்தாளர்களின்ரை கதையள் சரியான விருப்பம். நூலகத்தில இலங்கைப்புத்தகங்களுக்கெண்டு ஒரு தனிப்பிரிவு இருந்தது. பெரும்பாலும் அதுக்குள்ளை நிக்கிறது நானாத்தான் இருப்பன். வீரகேசரி பிரசுரம் எண்டு ஆரம்ப காலங்களில வெளிவந்த கதைகள் பிறகு யாழ்ப்பாணத்தில மீரா பிரசுரம் எண்டு வந்த கதைகள் பிறகு தமிழ்த்தாய் பதிப்பக கதைகள்... ஞாபகப்படுத்தி பாக்கிறன்.. பொறுங்கோ..
நிலக்கிளி எண்டொரு புத்தகம் பாலமனோகரன் எழுதினது..
சுமைகள் இது தாமரைசெல்வி எழுதினது
செங்கையாழியான் எழுதின பெரும்பாலும் எல்லாப் புத்தகங்களும் வாசித்து விட்டன். என்னென்ன நினைவில் நிக்குதெண்டால்...
மழைக்காலம், யானை, ஒரு மைய வட்டங்கள், அக்கினி, கடற்கோட்டை, குவேனி, நந்திக்கடல், ஆறுகால்மடம், சித்திராபெளர்ணமி, யாககுண்டம், ஆச்சி பயணம் போகிறாள், நடந்தாய் வாழி வழுக்கியாறு, இன்னும் நிறைய ஒண்டும் நினைவில்லை..
இதுல முக்கியமான விசயம் என்னெண்டால் இதெல்லாம் 95 க்கு முதல் வாசிச்ச புத்தகங்கள்.
92 இல நான் ஸ்கொலசிப் சோதினை எடுத்தனான். அந்த நேரம் கதைப்புத்தகங்கள் படிக்கிறதை நிப்பாட்ட சொல்லி வீட்டில உத்தரவு எனக்கு. அந்த நேரம் ஊரில புலிகள் ஒரு பரப்புரை கூட்டம் ஒண்டு நடத்தினவை. அங்கை புத்தக விற்பனையும் நடந்தது. சொக்கிலட் கலரில ரஞ்சகுமார் எழுதின மோகவாசல் எண்டொரு சிறுகதை புத்தகம் அங்கை இருந்தது. (அதில கபரகொய்யாக்கள் எண்டொரு சிறுகதையும் இருந்தது.) அது 30 ருபா. எப்பிடியோ அத்தானிடம் காசு வாங்கி அந்த புத்தகத்தை வாங்கினால் வாசிச்சு பார்த்தால் ஒரு கன்றாவியும் எனக்கு விளங்கேல்லை.
இதை எழுதிக்கொண்டு போகும் போது இன்னொரு புத்தகம் நினைவுக்கு வருது. அது தான் போர் உலா. பொதுவா புலிகளின் வெளியீடுகளில் பரப்புரைத் தன்மை இருக்கும். ஆனால் அவ்வாறெதுவும் இல்லாது ஒரு போராளி தனது குறித்த ஒரு போர் குறித்த அனுபவங்களை எழுதிய இந்த நூல் என்னை மிகவும் கவர்ந்தது.
கப்டன் மலரவன் மாங்குளம் சிங்கள ராணுவ முகாம் தகர்ப்பில் தனது அனுபவங்களை இதில் எழுதியிருக்கிறார். இந் நூல் வெளிவரும் போது அவர் உயிரோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு.. யவனராணி எண்டொரு புத்தகம்.. அது ஏன் ஞாபகத்தில நிற்குது எண்டால் அந்த புத்தகத்தை நான் வாசிக்க தொடங்கினது யாழ்ப்பாணத்தில 95ம் ஆண்டு. இடம்பெயர்வோடை அப்பிடியே கொடிகாமம் எழுதுமட்டுவாள் எண்டு அந்த வாசிப்பு தொடர்ந்து வன்னியிலை தான் முடிஞ்சது.
கொழும்பில கொஞ்சக்காலம் பாலகுமாரனோடை காலம் கழித்தேன். 'வேறு ஒரு சிலருக்கும்' பாலகுமாரனைப் பிடித்ததால் புத்தகங்களை கொடுத்து வாங்கிக் கொள்வோம். அதற்காகவே பாலகுமாரனை படித்தன். பிறகு.. பாலகுமாரனின் புத்தகங்கள் எனக்கு பிடிக்காமல் போட்டுது.
அடெல் பாலசிங்கம் எழுதிய சுதந்திரவேட்கையை ஒரு முறை யாழ்ப்பாணத்தில் வாங்கி கொழும்பிற்கு கொண்டு வந்தபோது( அது போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பிறகு) ஓமந்தையில் என் பையில் கைவிட்டுப் பார்த்த ஆமிக்காரன் பைபிளா என்று கேட்டனுப்பினான்.
வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனக்கு முறிந்த பனை வாங்கியனுப்பச் சொல்ல வாங்கி ஓசியில் வாசித்து அனுப்பினேன்.
என்னிடம் இங்கே ஒஸ்ரேலியாவில் புத்தகங்கள் எதுவும் இல்லை. இரவல் தான். குறித்த ஒரு பக்க புத்தகங்கள் தான் கிடைக்கின்றன. பெரும்பாலும் ஈழப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவை தான் அவை. அப்பிடி நான் கடைசியாக படித்த புத்தகம் நெருப்பாற்றில் பத்து ஆண்டுகள். சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி வெளியிட்ட அவர்களது படையணி வரலாறு தொடர்பான ஒரு புத்தகம் அது.
இவையெல்லாவற்றையும் விட, ஒரு சிறுகதைத் தொகுதி எனக்கு நன்றாக பிடிக்கும். கொழும்பில் 2003 இல் சரிநிகர் குழாமினரின் நிகரி வெளியீடாக வந்த அத் தொகுப்பில் மூன்று நான்கு கதைகளைத் தவிர மற்ற சிறுகதைகளை நான் விரும்பி வாசித்தேன். ஏற்கனவே தினக்குரல் மற்றும் வேறு இதழ்களில் வந்த சிறுகதைகள் தான் என்றாலும் புத்தகமாக படிக்கின்ற போது நன்றாக இருந்தது. அந்த புத்தகத்தை எழுதியவர்
சயந்தன்!!!!