30.6.05

யாழ்ப்பாணத்து காட்சிகள்

Image hosted by Photobucket.com
கிட்டு பூங்கா. சிதைந்த நிலையில் இருக்கிறது.

Image hosted by Photobucket.com
யாழ்ப்பாணத்தின் ஒரு வீதியில்

Image hosted by Photobucket.com
யாழ் நூலகம் முன்பாக இராணுவ வாகனம்

29.6.05

யாழ்ப்பாணத்து ஐஸ்கிரீம்


Image hosted by Photobucket.com

24.6.05

பொதுக்கட்டமைப்பு கைச்சாத்து

புலி வருது.. புலி வருது கதையாக இறுதியில் புலி வந்தே விட்டது. இன்று சுனாமி நிவாரண பங்கீட்டுக்கான புலிகளுடன் இணைந்து பணியாற்றும் கட்டமைப்பில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப்புலிகளும் கைச்சாத்திட்டு விட்டனர்.

சிங்கள இனவாத அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்கள் ஆரம்பம் முதலே இதற்கு இருந்து வந்தது. இன்றும் காலை பாராளுமன்றத்திற்கு அண்மையாக மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

பொதுக்கட்டமைப்பு கையெழுத்திடப்பட்டிருக்கிறது. அவ்வளவே. இனி வரும் காலங்களில் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்ää ஒத்துழையாமை குறித்த ஒவ்வொரு தரப்பினதும் குற்றச்சாட்டுக்கள் வர கூடும்.

ஏற்கனவே சிரான் என்ற ஒரு புனர்வாழ்வு அமைப்பு அமைக்கப்பட்டு தற்போது செயல் இழந்து கிடக்கிறது.

எதுவோ.. இதனை நடைமுறைப்படுத்தல் என்ற வெறியுடன் அதனூடாக பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைத்தல் என்ற உண்மையான அக்கறையுடன் இலங்கை அரசு இக்கட்டமைப்பில் கையெழுத்து இட்டிருந்தால் அரசுக்கும் அதன் தலைவி சந்திரிகாவிற்கும் நன்றி சொல்வதில் எந்த விதமான துரோகமும் இல்லை.

ஆனால் முழுமையான நம்பிக்கையை கடந்த கால வரலாறுகள் தமிழ் மக்களுக்கு வழங்க வில்லையென்பதே உண்மை.

22.6.05

மெல்பேண் To கொழும்பு

இன்று அதிகாலை கொழும்பில் வீட்டுக்கதவினை தட்டி ( வழமையாக இது இலங்கை இராணுவம் செய்கின்ற வேலை.) அம்மாவை தூக்கத்திலிருந்து எழுப்பி எனது வருகை குறித்த அதிர்ச்சி மகிழ்ச்சியினை கொடுத்த போது நேரம் 2 மணி.

மெல்பேணில் புறப்பட்ட விமானம் சிங்கையை வந்தடைந்த போது சிங்கை நேரம் இரவு 9.15. மீண்டும் சிங்கையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட போது நேரம் 10.40.

ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த, நண்பர்கள் எனது வீட்டிற்கு எந்த விதமான தகவல் கசிவும் விடாதபடி கன கச்சிதமாக என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்து செல்ல வந்திருந்தார்கள்.

எல்லாம் திட்டமிட்ட படி முடித்தாயிற்று. அம்மாவிற்கு இன்னும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் தீரவில்லை. நண்பர்களுக்கு நன்றி.

சிங்கை. பிரமிக்க வைத்த விடயம்.
சிங்கை விமான நிலையத்தோடு ஒப்பிட்டால் மெல்பேண் நிலையம் குடிசை. கொட்டில்.

சிங்கை. கவலையுற வைத்த விடயம்.
சிங்கை விமான நிலையத்தில் லோக்கல் அழைப்புக்களுக்கு இலவசம் என்பது முன்னமே தெரிந்திருந்தால் ஈழநாதனின் தொலைபேசி இலக்கத்தை கொண்டு வந்து அலட்டியிருக்கலாம்.

இந்த பயணத்தின் நோக்கங்கள் அல்லாத ஒன்று
நானும் வசந்தனும் வேறு நபர்கள் என்பதனை உணர்த்துதல்.


சந்திக்கலாம்.

16.6.05

இலங்கை அரசின் எதிர்காலம்?

ஜே.வி.பி விலகி விட்டது.

இலங்கையின் தமிழர் பகுதிகளுக்கு சுனாமி நிவாரண உதவிகளை பங்கிடுதல் தொடர்பான புலிகளுடன் இணைந்து பணியாற்றும் கட்டமைப்பு யோசனையை கைவிடுமாறு அது சந்திரிகாவிற்கு கொடுத்திருந்த காலக் கெடு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இன்று அரசிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

கடந்த வாரங்களில் கொழும்பின் அரசியல் பரபரப்புடையதாக இருந்தது. ஜே.வி.பி அரசிலிருந்து விலகுமா என்றும் சந்திரிகா ஜே.வி.பியின் நிபந்தனையை ஏற்றுக் கொள்வாரா என்றும் பலவாறான கேள்விகள் அங்கு இருந்தன.

பொதுக்கட்டமைப்பு என்பது ஒரு நிவாரண உதவி அமைப்பு. ஆயினும் அதற்கான எதிர்ப்புகளும் கோசங்களும் ஏதோ தனிநாட்டிற்கு எதிரான கோசங்களுக்கு ஒப்பானதாயிருந்தன. பெளத்த பிக்குகள் உண்ணாவிரதமிருந்தனர். ஊர்வலம் போயினர். தம்மீது பெற்றோல் ஊற்றினர். கண்ணீர் புகை குண்டுகளுக்கிடையில் சிக்கி கண்ணீர் விட்டனர்.

ஜே.வி.பி யும் தன் பங்குக்கு புலிகளுடன் வெற்றுக்காகிதத்தில் கூட கையெழுத்து இட கூடாது என்றது. காலக்கெடு விதித்தது. இறுதியில் அரசிலிருந்து விலகியிருக்கிறது.

சந்திரிகாவிற்கு இது ஒரு மானப்பிரச்சனையாக இருந்திருக்க வேண்டும். பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியை ஜே.வி.பியினர் ஆட்டிப்படைப்பதை அவர் விரும்பியிருக்காது இருக்க கூடும்.

உலக அரங்கில் புலிகளின் தரத்தை உயர்த்தி விடும் என்பதனாலும் அவர்களுக்கான அங்கீகாரம் ஒன்றினை வழங்கி விடும் என்பதனாலுமே சிங்கள இனவாத அமைப்புக்கள் இந்த பொதுக்கட்டமைப்பை விரும்பவில்லை என்பது தெளிவு. ஆனால் பெரும்பாலான உலக நாடுகள் புலிகளுடனான பொதுக்கட்டமைப்பினை ஆதரிக்கின்றன. விரைவில் அதனை நடைமுறைப்படுத்துமாறு வேண்டு கோள் விடுக்கின்றன.

இது ஆகக்குறைந்தது பாதிக்கப்பட்ட பகுதிகளில் புலிகளின் நிர்வாகம் என்ற யதார்த்தத்தினை அந்த நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை குறிக்கிறது.

பொதுக்கட்டமைப்பு தொடர்பில் சிங்கள இனவாத அமைப்புக்கள் நடந்து கொண்ட முறையே உலக நாடுகள் இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பில் இன்றைய யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள போதுமானது.

ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தினை பங்கிடுகின்ற சாதாரண ஒரு அமைப்புக்கு இத்தனை எதிர்ப்பு சிங்கள தேசத்தில் கிளம்புமென்றால் இடைக்கால நிர்வாக சபைக்கு, சமஷ்டி முறையிலான நிரந்தர தீர்வுக்கு சிங்கள தேசத்தின் இனவாதம் எத்தனை தூரம் கொந்தளிக்கும் என்பதை உலகு உணர்ந்திருக்கும்.

20 வருடங்களுக்கு மேலான தமிழர்களின் போராட்டத்திற்கு நியாயம் இருந்திருக்கிறது என்பதை இன்று சிங்கள இனவாதம் தானாகவே உணர்த்தி கொண்டிருக்கிறது.

10.6.05

இந்தாங்கோ நான் படிக்கிற புத்தகங்கள்

கறுப்பி மற்றும் துளசிக்காவிற்கு எனது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இரண்டாவது கண்ணாக நான் பேச மன்னிக்கவும் எழுத எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்.. சும்மா போங்கோ.. எனக்கு உப்பிடி எழுதவே வருகுதில்லை. வட்டார மொழிக்கதையள் பிடிக்காத ஆக்களும் என்ரை பதிவுகளை வாசிக்க வேணும் எண்டு விரும்பி வட்டாரமில்லாத கதையளாய் முக்கோணமாரமாய் செவ்வகமாரமாய் எழுதுவம் எண்டு முயற்சிக்கிறன். முடியாமல் கிடக்கு.

உது பத்தாது எண்டு நானும் வசந்தனும் ஒண்டு எண்டு கனபேர் நினைக்கிறதுக்கு என்ரையும் அவற்றையும் பேச்சு மொழி எழுத்து நடை ஒரே மாதிரி கிட்டத்தட்ட இருக்கிறது தான் காரணம் எண்ட படியால பேசாமல் உன்ரை எழுத்து நடையை மாத்து எண்டு நேற்று மனட்சாட்சி வந்து சொல்ல முதல்ல அவனை மாத்தச் சொல்லு பிறகு நான் மாத்துறன் எண்டேதும் சொல்லாமல் மனட்சாட்சிப்படி நடக்க இல்லயில்ல எழுத வெளிக்கிட்டன்.. முடியாமல் கிடக்கு..

நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்கை நிரந்தர வாசி. ஒரே வாசிக்கிறது தான் வேலை. இந்தப்பழக்கம் இயல்பா வந்ததெண்டு சொல்லமாட்டன். எல்லாத்துக்கும் காரணம் என்ரை அத்தான் தான். அவர் ஒரு புத்தக பிரியர். ஊரில இருந்த நூலக பொறுப்பாளரா வேறை அவர் இருந்தவர். வேறை காரணங்கள் என்னெண்டு யோசிச்சால் அந்த நேரம் ரிவியோ படங்களோ இன்ரநெற்றுக்களோ இல்லாத சூழ்நிலையும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

என்ன காரணமெண்டு தெரியாது எனக்கு இலங்கை எழுத்தாளர்களின்ரை கதையள் சரியான விருப்பம். நூலகத்தில இலங்கைப்புத்தகங்களுக்கெண்டு ஒரு தனிப்பிரிவு இருந்தது. பெரும்பாலும் அதுக்குள்ளை நிக்கிறது நானாத்தான் இருப்பன். வீரகேசரி பிரசுரம் எண்டு ஆரம்ப காலங்களில வெளிவந்த கதைகள் பிறகு யாழ்ப்பாணத்தில மீரா பிரசுரம் எண்டு வந்த கதைகள் பிறகு தமிழ்த்தாய் பதிப்பக கதைகள்... ஞாபகப்படுத்தி பாக்கிறன்.. பொறுங்கோ..

நிலக்கிளி எண்டொரு புத்தகம் பாலமனோகரன் எழுதினது..

சுமைகள் இது தாமரைசெல்வி எழுதினது

செங்கையாழியான் எழுதின பெரும்பாலும் எல்லாப் புத்தகங்களும் வாசித்து விட்டன். என்னென்ன நினைவில் நிக்குதெண்டால்...

மழைக்காலம், யானை, ஒரு மைய வட்டங்கள், அக்கினி, கடற்கோட்டை, குவேனி, நந்திக்கடல், ஆறுகால்மடம், சித்திராபெளர்ணமி, யாககுண்டம், ஆச்சி பயணம் போகிறாள், நடந்தாய் வாழி வழுக்கியாறு, இன்னும் நிறைய ஒண்டும் நினைவில்லை..

இதுல முக்கியமான விசயம் என்னெண்டால் இதெல்லாம் 95 க்கு முதல் வாசிச்ச புத்தகங்கள்.

92 இல நான் ஸ்கொலசிப் சோதினை எடுத்தனான். அந்த நேரம் கதைப்புத்தகங்கள் படிக்கிறதை நிப்பாட்ட சொல்லி வீட்டில உத்தரவு எனக்கு. அந்த நேரம் ஊரில புலிகள் ஒரு பரப்புரை கூட்டம் ஒண்டு நடத்தினவை. அங்கை புத்தக விற்பனையும் நடந்தது. சொக்கிலட் கலரில ரஞ்சகுமார் எழுதின மோகவாசல் எண்டொரு சிறுகதை புத்தகம் அங்கை இருந்தது. (அதில கபரகொய்யாக்கள் எண்டொரு சிறுகதையும் இருந்தது.) அது 30 ருபா. எப்பிடியோ அத்தானிடம் காசு வாங்கி அந்த புத்தகத்தை வாங்கினால் வாசிச்சு பார்த்தால் ஒரு கன்றாவியும் எனக்கு விளங்கேல்லை.

இதை எழுதிக்கொண்டு போகும் போது இன்னொரு புத்தகம் நினைவுக்கு வருது. அது தான் போர் உலா. பொதுவா புலிகளின் வெளியீடுகளில் பரப்புரைத் தன்மை இருக்கும். ஆனால் அவ்வாறெதுவும் இல்லாது ஒரு போராளி தனது குறித்த ஒரு போர் குறித்த அனுபவங்களை எழுதிய இந்த நூல் என்னை மிகவும் கவர்ந்தது.

கப்டன் மலரவன் மாங்குளம் சிங்கள ராணுவ முகாம் தகர்ப்பில் தனது அனுபவங்களை இதில் எழுதியிருக்கிறார். இந் நூல் வெளிவரும் போது அவர் உயிரோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு.. யவனராணி எண்டொரு புத்தகம்.. அது ஏன் ஞாபகத்தில நிற்குது எண்டால் அந்த புத்தகத்தை நான் வாசிக்க தொடங்கினது யாழ்ப்பாணத்தில 95ம் ஆண்டு. இடம்பெயர்வோடை அப்பிடியே கொடிகாமம் எழுதுமட்டுவாள் எண்டு அந்த வாசிப்பு தொடர்ந்து வன்னியிலை தான் முடிஞ்சது.

கொழும்பில கொஞ்சக்காலம் பாலகுமாரனோடை காலம் கழித்தேன். 'வேறு ஒரு சிலருக்கும்' பாலகுமாரனைப் பிடித்ததால் புத்தகங்களை கொடுத்து வாங்கிக் கொள்வோம். அதற்காகவே பாலகுமாரனை படித்தன். பிறகு.. பாலகுமாரனின் புத்தகங்கள் எனக்கு பிடிக்காமல் போட்டுது.

அடெல் பாலசிங்கம் எழுதிய சுதந்திரவேட்கையை ஒரு முறை யாழ்ப்பாணத்தில் வாங்கி கொழும்பிற்கு கொண்டு வந்தபோது( அது போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பிறகு) ஓமந்தையில் என் பையில் கைவிட்டுப் பார்த்த ஆமிக்காரன் பைபிளா என்று கேட்டனுப்பினான்.

வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனக்கு முறிந்த பனை வாங்கியனுப்பச் சொல்ல வாங்கி ஓசியில் வாசித்து அனுப்பினேன்.

என்னிடம் இங்கே ஒஸ்ரேலியாவில் புத்தகங்கள் எதுவும் இல்லை. இரவல் தான். குறித்த ஒரு பக்க புத்தகங்கள் தான் கிடைக்கின்றன. பெரும்பாலும் ஈழப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவை தான் அவை. அப்பிடி நான் கடைசியாக படித்த புத்தகம் நெருப்பாற்றில் பத்து ஆண்டுகள். சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி வெளியிட்ட அவர்களது படையணி வரலாறு தொடர்பான ஒரு புத்தகம் அது.

இவையெல்லாவற்றையும் விட, ஒரு சிறுகதைத் தொகுதி எனக்கு நன்றாக பிடிக்கும். கொழும்பில் 2003 இல் சரிநிகர் குழாமினரின் நிகரி வெளியீடாக வந்த அத் தொகுப்பில் மூன்று நான்கு கதைகளைத் தவிர மற்ற சிறுகதைகளை நான் விரும்பி வாசித்தேன். ஏற்கனவே தினக்குரல் மற்றும் வேறு இதழ்களில் வந்த சிறுகதைகள் தான் என்றாலும் புத்தகமாக படிக்கின்ற போது நன்றாக இருந்தது. அந்த புத்தகத்தை எழுதியவர்

சயந்தன்!!!!

2.6.05

இந்திய விடுதலைப்போரும் ஈழமும்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது ஆரம்ப கால நாட்களில், விடுதலை உணர்வுக்கு வித்திட்டவையில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறுகளும் அவை தொடர்பான நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன என்கிறார். ஏலவே பல செவ்விகளில் இது பற்றி சொல்லியிருந்த அவரது கருத்தினை இங்கு அவரது குரலிலேயே கேட்கலாம்.




இந்த சுட்டியிலும் அல்லது இந்த சுட்டியிலும் தரவிறக்கி கேட்கலாம். நிச்சயமில்லை.:(
நன்றி விடுதலைத் தீப்பொறி