15.1.08

விருப்புக்குரிய புத்தகங்களும் சுவிசில் நூல் நிலையமும்

2005 இன் ஒரு நாள், கொழும்பின் பூபாலசிங்கம் கடையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் இருக்கா எனக் கேட்டதற்கு அங்கு வேலை செய்த அக்கா ஒரு மாதிரியா பார்த்தா. பிறகு அவ காட்டிய இன்னுமொருவர் அது விற்பதில் சில பல பிரச்சனைகள் இருக்கென்று சொல்லவும், பரவாயில்லையெனச் சொல்லி விட்டு சோபா சக்தியின் இரு புத்தகங்களும் தமிழ்க்கவியம்மாவின் ஒரு சில புத்தகங்களும் வாங்கிச் சென்றிருந்தேன். ( விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் புத்தகத்தை கொழும்பில் வாங்கியது புதிய அனுபவம் )

அப்போதைய நிலையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் குறித்த கதையாடல்கள் நிறையவே நடந்ததால் சோமிதரனிடம் இந்தியாவில் அதைப் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தேன். ஏற்பாடு செய்வதாகக் கூறி விட்டு அவனும் மறந்து போயிருந்தான். பிற்பாடு நானும் மறந்து போயிருந்தேன். பின்பொரு காலம் ஒரு தொடராக ஈழப்போராட்டத்தில் எனது பொய்ச் சாட்சியம் என்ற கட்டுரையைப் படித்தேன்.
000 000 000

ண்டார வன்னியன் என்னும் நாடகத்தினை எனது ஐந்தாவது வகுப்பில் எழுதி, அதில் காக்கை வன்னியனாகவும் நடித்திருந்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. பண்டார வன்னியனாக பிரபாகரன் நடித்திருந்தார். (யாரைய்யா அங்கே புருவம் உயர்த்துவது. இது என்னுடைய வகுப்புத் தோழன் த.பிரபாகரன். பின்னாளில் 2003 களில் பல்கலைக்கழக மட்டத்தில் சோமிதரனிடம் பழக்கமாகியிருந்த, இவரைச் சந்திப்பது குறித்து நண்பர்களிடத்தில் பேசும் சோமிதரன், வெகு இயல்பாக, மச்சான் ஒருக்கா கிளிநொச்சி போக வேண்டியிருக்கு. அப்பிடியே பிரபாகரனையும் சந்திச்சிட்டு வரவேணும் என்பார்.)

1996 இல் முல்லைத்தீவில் கற்சிலைமடு அல்லது கரிப்பட்ட முறிப்பு சரியாக நினைவில்லை அங்கு பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு வரக் கிளம்பினோம். அங்கே ஒரு நடுகல்லில் ஆங்கிலத்தில் டிறபேக் என்பவரால் பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் என எழுதியருந்தது. அது டிறபேக்கினால் நடப்பட்ட நடுகல் என்று சொன்னார்கள். ஆனால் பின்னாளில் அவ் நடுகல்லினை 1950 களில் யாரோ ஒரு கிராம சேவையாளர் நிறுவினார் என கேள்வியுற்றேன்.

கலைஞர் கருணாநிதி பாயும் புலி பண்டார வன்னியன் எனும் ஒரு புத்தகத்தினை எழுதியிருக்கிறார் என்ற செய்தி பின்னாளில் எனக்குத் தெரிய வந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் (அதிலும் அரசியல் பிரமுகர்) எழுதியிருக்கும், ஈழ வரலாற்று நூல் என்ற ஒரு விடயத்தில் (மட்டும் என்றும் சொல்லலாம் ) அப்புத்தகம் மீதான ஆர்வம் தொடங்கியது. ஏற்கனவே முல்லை எனத் தொடங்கும் ஒருவர் (யாராவது அறியத்தரலாம் ) எழுதியிருந்த இலங்கையில் தடை செய்யப்பட்ட பண்டார வன்னியன் எனும் நாடக நூலினை வாசித்திருக்கிறேன். ஐந்தாம் வகுப்பில் எழுதிய நாடகத்திற்காக அந் நூலில் இருந்து வரிக்கு வரி சுட்டும் இருக்கின்றேன்.
000 000 000

எஸ் பொ என்பவர் யாரென அறியும் முன்னமே அவரது சடங்கு நூலினை வாசித்திருக்கின்றேன். வீட்டின் ராணி முத்து வாசகர்கள் விபத்தாக, அவர்கள் பாசையில் தெரியாத்தனமாக, எடுத்து வந்துவிட்ட சடங்கு நாவலை, இலங்கைத் தமிழ் நாவல்கள் மேல் இயல்பாக இருந்த விருப்பில், யாழ்ப்பாணத்துப் பதின்ம வயதுக்குரிய பதை பதைப்புடனும் ஒருவித அதிர்வுடனும் வாசித்து முடித்தேன். (சடங்கு ராணி முத்து வெளியீடாக வந்திருந்தது. இதில் விசுக்கோத்து என்பதற்கு நேரே அடைப்புக் குறிக்குள் பிஸ்கட் என.. இவ்வாறு பல சொற்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்கள். )

பின்னர் பாடசாலையில், டேய் அந்தப் புத்தகத்தில இப்பிடியெல்லாம் எழுதியிருக்கடா.. இப்பிடியெல்லாம் செய்வினமடா.. என நான் விபரித்த பாங்கு கண்டு நண்பர்கள் அந்த புத்தகத்திற்காய் ஆலாயப் பறந்தார்கள். அப்போதைய வயது 14 ற்கும் குறைச்சல்தான்.
000 000 000

பொதுவாகவே நூலகம் செல்லுதல் எனது விருப்பிற்குரிய விடயங்களில் ஒன்று. கிராமத்தின் வாசகர் வட்ட நூல் நிலையத்தில், வீட்டின் உறுப்பினர்கள் வேலை செய்த காரணத்தால் அங்கு சென்றிருப்பதுவும் புத்தகங்களைத் துருவுவதும் வழக்கில் வந்திருக்க வேண்டும்.

ஒஸ்ரேலியாவின் சிட்னியில் ஒரு முறை கரன் ஒரு முகவரியில் தமிழ் நூல் நிலையம் இயங்குவதாகச் சொல்லக் கேட்டு ஒரு மாலை முழுதும் தேடி இறுதியில் அவ்வாறான ஒரு நூல் நிலையமே அங்கு இல்லையெனத் தெரியவந்தது. (ஆனால் பல காலங்களுக்கு முன்னர் இயங்கியிருந்தது.)

பின்னர் அங்குள்ள ஒரு அவுஸ்ரேலிய நூல் நிலையத்தில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதாக கேள்விப்பட்டுச் சென்றால்.. ரமணிச் சந்திரனும் லக்ஸ்மியும் தான் நிறைந்திருந்தார்கள். இவற்றுக்கு எதற்காக அங்கத்துவராக வேண்டும் எனத் திரும்பி விட்டேன்.

இங்கே சுவிசில் உள்ள நமது மாநில நூல் நிலையம் ஒன்றில் வேர்ஜினியா அங்கத்துவராக இருக்கின்றார். ஆரம்ப காலங்களில் ஜெர்மன் மொழியில் பயிற்சி பெறுவதற்கான புத்தகங்களைப் பெற, அவர் பெற்ற அங்கத்துவம் அப்படியே இருந்தது. அங்கே தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன என்ற செய்தியும் எனக்குத் தெரியும். ஆனாலும் ரமணிச் சந்திரன்களும், லக்ஸ்மிகளும்தானே என்ற முடிவில் அந்தப் பக்கம் போக வேண்டும் என்ற ஆவல் மேலிட்டதில்லை.

இன்று மாலை வேறொரு தேவைக்காக அங்கு சென்ற போது வாசலிலேயே ஒரு அறிவித்தல், புதிய தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன என ஜெர்மன் மொழியில்..

போய்த்தான் பார்ப்போமே என அப்பகுதிக்குச் சென்றால்.. ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், ஜெயமோகன், சோபா சக்தி, எஸ் பொ என்ற கணக்கில் புத்தகங்கள்.. பெரிய பெரிய குண்டுப் புத்தகங்கள்.. நான் வாசிக்க வேண்டும் என விரும்பிய புத்தகங்கள்..

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூலையும், பாயும் புலி பண்டார வன்னியனையும் எடுத்துக்கொண்டேன். கூடவே சடங்கினையும்..

இன்னும் இருக்கிறது.

அந்த நூலகத்திற்கான தமிழ்மொழி இணைப்பாளர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் அவர் சாதாரணமானவரில்லையெனப் புரிகிறது

11.1.08

நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு.. :)

சற்றே ஓய்ந்து போன சிஞ்சா மனுசிக் கலையகத்தின் ? ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று இந்தப் பாடல். கணணியை மட்டும் உபயோகப்படுத்தி கோர்த்த இசையில் பாடல் வரிகளைப் போட்டுப் பாடுவது நான்தான். (தேவையா இதெல்லாம் ?) இசையமைத்தவர் ராஜ். ஒஸ்ரேலியாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது :)))


10.1.08

பகிரங்கப் படுத்தப்படும் இரகசிய மடல் :)

மின்னஞ்சல் சேவைகளில் உள்ள நாம் அனுப்பும் மின்னஞ்சல்களைச் சேகரித்து வைக்கும் வசதியின் மூலம் பல வருடங்களுக்கு முன்பு நான் அனுப்பிய மடல்கள் படங்கள் என்பவற்றை மீளவும் பார்வைக்கு உட்படுத்துவது எனது வழமைகளில் ஒன்று.

கிட்டத்தட்ட நினைவுகளை மீட்டி சுகத்தில் திளைக்கும் முறைமைதான் இது. ஒவ்வொரு ஓட்டத்தின் போதும் தூக்கிச் செல்ல மறந்த நிறைய புகைப்படங்களை இவ் வசதியினூடு பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது.

இன்று யாகூவில் நுழைந்து ( தற்போது அது என் பாவனையில் இல்லையெனினும் ) பழைய மடல்களை பார்வையுற்றபோது ஒரு திரியில் 2004 செப்டம்பர் 17 இல் ஒரு நண்பர் எழுதிய மடல் கிடைத்தது. அந்தக்காலங்களும் நினைவில் வந்தது. கூடவே சிரிப்புக்களும்..

டேய்.. ----------- நிறைய கவலைப் படுறாள். ப்ளீஸ் உன்னால் முடிந்தால் போன் பண்ணி கதைடா.. பாவம் நிறைய யோசித்து கவலைப்படுறாளடா.. ப்ளீஸ் எனக்கு நிறைய படிப்புடா.. காலை 7 இல் இருந்து மாலை 7 வரை க்ளாஸ். பாய்..

அன்புத்தோழன்
------- (அவன்தான்)

அது ஒரு அழகிய காலமய்யா.. எனக்கில்லை. அவருக்குத்தான் :)))