29.6.07

நீர் விழுது !

கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் ஆடிச்சாம். என்ன... நீர் விழுதுதானே..

Photobucket - Video and Image Hosting

லுசேர்ண் மாநிலம்

27.6.07

சைவக் கோழி சாப்பிட்டிருக்கீங்களா..

அண்மையில் ஒரு உறவினரின் நிகழ்வொன்றிற்குச் சென்ற போது இப்படியொரு சேவலைச் செய்து வைத்திருந்தார்கள். பார்க்க அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அசப்பில் அசல் போலவே இருக்கிறதல்லவா..

25.6.07

வங்காள மொழியில் என் நட்சத்திரப் பதிவொன்று

கடந்த நட்சத்திர வாரப்பதிவுகளில் நான் எழுதியிருந்த யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது என்ற பதிவினை மதி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து globalvoicesonline.org இணையத்தில் இட்டிருந்தார். இந்த இணைப்பில் கிளிக்கவும்..

அவ் ஆங்கிலப் பதிவிலிருந்து rezwan என்பரால் அது வங்காள மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு இவ் விணைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.

সায়ান্থন হচ্ছেন সুইজারল্যান্ডে বসবাসরত একজন প্রতিভাবান তামিল ব্লগার যিনি তার আন্ন্দদায়ক পডকাষ্টিং এর জন্যে বিখ্যাত। তার ব্লগ সাধারনত মজার মজার ছোট গল্পে পুর্ন থাকে। আজ তিনি একটি চিন্তামুলক লেখা লিখেছেন যেখানে তিনি নবীন শ্রীলন্কানরা দেশের সাম্প্রতিক সংঘাতকে কিভাবে মোকাবেলা করছেন সে সম্পর্কে আলোকপাত করেছেন।

ஆமா.. இது வங்காள மொழி தானே..


24.6.07

நன்றி நவிலலும் புதிய பூனையும்

கடந்த ஒருவாரத்து நட்சத்திரப் பதிவுகளில் வழமைப் பாதையிலிருந்து மாறி ( சிங்கப் பாதை...? ) கொஞ்சம் கனமான விடயங்களை கையாள நினைத்திருந்தேன். அவ்வாறே செய்துமிருந்தேன். ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு விவாதப் புள்ளியைக் கொண்டிருக்கும் என நம்புகிறேன்.

பெரும்பாலும் இவ்வாறான (பொதுவாக ஈழம் குறித்த) கனத்த பதிவுகள் பின்னூட்டங்களால் திரும்பிப் பார்க்கப் படாத நிலையில் வழமையாக சாரலுக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள் கிடைத்தன என்பதில் மகிழ்ச்சி. அதிலும் அவை மொக்கைப் பின்னூட்டங்களாக இல்லாமல் பதிவோடு இணைந்திருந்த வகையில் பதிவை நீட்டித்த வகையில் பெரு மகிழ்ச்சி. - கழுவிகளாயிருத்தலும் கொழுவியாதலும் பதிவுக்கு கூட பதிவோடிணைந்த பின்னூட்டங்கள் வந்ததெனின் பார்த்துக் கொள்ளுங்களேன்..

பின்னூட்ட மட்டுறுத்தல் நான் விரும்பாத ஒன்றாயினும் அண்மைக் காலங்களில் என் மொக்கைப் பதிவுகளால் உண்டான அதே வகைப் பின்னூட்டங்களைத் தவிர்க்க அதனை கொண்டு வரவேண்டியதாய்ப் போனது. ஆனால் இந்த நட்சத்திர வாரத்தில் கிடைக்கப் பெற்ற அத்தனை பின்னூட்டங்களும் வெளியிடப்பட்டன. கேள்வி கேட்பவன் பதில் சொல்பவன் முதலானோருக்கு நன்றி

யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது என்ற பதிவை மதி அக்.. நோ நோ.. மதி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார். அவருக்கும் நன்றி.

இன்னுமொன்று.. இந்த வாரம் முழுதும் சிறப்பாக நிகழ்ந்தேறிய இவ்விழா வரும் வாரமொன்றில் பிறிதொரு இடத்திலும் தொடர இருக்கிறது. அங்கும் உங்கள் மொய்களை இட அன்புடன் அழைக்கின்றோம் -

இங்ஙனம்
விழா உபயகாரர்..

சரி.. இந்தப் பூனை (இது புதுசு கண்ணா..) என்ன சொல்கிறது..


23.6.07

கழுவியாக இருத்தலும் கொழுவியாதலும்

அவ்வப்போது புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களை நோக்கி, தட்டுக் கழுவிகள் என்றோ தூசு தட்டுபவர் எனவோ யாராவது இணையத்தில் எழுதுவார்கள். வலைப் பதிவுச் சூழலில் அனாமதேயப் பின்னூட்டங்களாக பெரும்பாலும் இவை இடம்பெறும். ஏதோவொரு வழியில் அவர்களை ஏளனம் செய்வதற்கும், காழ்ப்புணர்வைக் காட்டவுமே அவ்வாறு சிலரால் சொல்லப்படுகிறது என்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.

கோப்பை கழுவுவதும், தூசி தட்டுவதும் அவர்களின் பார்வையில் கேவலமான தொழில்களாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. மேல்தட்டு வர்க்க நோக்கிலிருந்து ஒருவனின் தொழிலைச் சொல்லி அவனைக் கீழ்நிலைப் படுத்துகின்ற, இன்னும் சொல்லப்போனால் சாதிய வர்க்கப் பிரிப்பின் நீட்சியாக இது அமைகிறது. இன்னொரு வழியில் வெளிநாடுகளுக்கு படித்தவர்கள் மட்டுமே செல்லலாம், ஆகவே படித்த நாங்கள் மட்டுமே செல்லலாம் என்ற அவர்களின் மன ஓட்டத்தின் வெளிப்பாடாகவும் இவை அமையலாம்.

அவையெல்லாவற்றையும் தாண்டி வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் படித்த எங்களால் கொள்ள முடியாத தனி மனித பொருளாதார வளர்ச்சியை, கோப்பை கழுவுகிறவர்களும், தூசி தட்டுபவர்களும் எளிதில் கொண்டு விடுகிறார்களே என்ற ஒரு வித தாழ்வுச் சிக்கலும் இவ்வாறான கருத்துக்களுக்கு காரணமாக இருக்கலாம்.

உண்மையில் இவ்வாறு தொழில் முறையில் இழிவு படுத்துகின்ற, சாதியம் சார்ந்த பழக்கவழக்கம் உள்ள ஒரு (எனது அனுபவத்திற்கு உட்பட்ட வகையில் யாழ்ப்பாண) சமூகம், ஒட்டுமொத்தமாக பிறிதொரு இடத்திலிருந்து இவ்வாறான பார்வைகளைப் பெறுதலென்பது ஒரு வகை முரண் நகைதான். ஆங்காங்கே படித்தவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஈழத் தமிழர்களிடமிருந்து கூட இவ்வாறான கருத்துக்கள் வெளியாவதுண்டு.

யுத்தத்திற்கு பிந்திய காலத்திலிருந்து ஆரம்பித்த, தனியே படித்தவர்கள் என்றில்லாத ஒரு சமூகத்தின் மொத்த இடம்பெயர்வினாலும், அறிந்தேயிருக்காத மொழி பேசும் நாடுகளில் தஞ்சமடைவதாலும், வாழ்வதற்கான உந்துதலில் கிடைத்ததை செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தாலும் ஏற்படக் கூடிய இந்த நிலை, சிந்திக்கும் அறிவுள்ளவர்களால் புரிந்து கொள்ளக் கூடியது. சிலரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புலம் பெயர் தேசங்களில் இதோ அடுத்த தலைமுறை உருவாகி விட்டது. தனியே டொக்டர், எஞ்சினியர், அக்கவுண்டன் என்பவையே உயர் படிப்புக்கள் என்றிருந்த யாழ்ப்பாண சமூக நிலையிலிருந்து விடுபட்டு ஆடை வடிவமைப்பாளர்களாக, உணவுத் தயாரிப்பாளர்களாக, விமானமோட்டிகளாக என பல்வேறு துறைகளில் பரிணமிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இங்கே சுவிற்சர்லாந்தில் எனது மாநிலத்தின் பாராளுமன்றில் இருபத்தைந்து வயது நிரம்பிய ஈழ தமிழ் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இதே போல இன்னுமொரு மாநிலத்து பாராளுமன்றிலும் இளைஞர் ஒருவர் உள்நுழைந்திருக்கிறார். எனது அறிதலுக்குட்பட்ட வகையில் சுவிசின் லுகானோ மாநிலம் தன் சார்பில் அனுப்பும் செயற்கைக் கோளுக்கான செயற்திட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இணைந்திருக்கிறார். சுவிஸ் இராணுவத்தில் கப்டன் தரத்தில் உள்ள தமிழர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன்.

இவ்வாறான நிறைய உதாரணங்கள் பிற நாடுகளிலும் உண்டு. இதிலே ஒரு விடயம் கவனத்திற்குரியது. புலம்பெயர் தேசங்களில் வாழ்வினைத் தொடங்கும் தமிழ்த் தலைமுறையிடம் பெரிய அளவில் தம் மக்கள் மீதான கரிசனை இருக்கப் போவதில்லை என்று (அது இயல்பானதே என்ற ரீதியில்) எதிர்பார்க்கப் பட்ட ஒரு எண்ணத் தோற்றம் நடைமுறையில் முறியடிக்கப் படுவதே அது. மனிதர் மீதான கரிசனை என்ற அளவிலாவது அவர்கள் தம் தேசத்தில் துயருறும் மக்கள் குறித்து சிந்திக்கிறார்கள்.

சமாதானத்திற்கான காலங்களில் பெருமளவில் தமது தாயகப் பிரதேசங்களுக்கு வந்து அங்கே நிர்வாக கட்டமைப்புக்களுக்கும் தொழிற்துறை முயற்சிகளுக்கும் இராணுவ கட்டமைப்புத் தேவைகளுக்காகவும் தமது அறிவு அனுபவ பகிர்தலை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

ஆனால் இளையவர்கள் தானே ஆங்காங்கே குழுத் தாக்குதல்களிலும் தெருச்சண்டைகளிலும் ஈடுபடுகிறார்கள் எனில் ஆம். அதுவும் உண்மைதான். ஏனெனில் இது ஒரு ஒட்டுமொத்தமான இனத்தின் இடப்பெயர்வு. ஆகவே சகல கூறுகளையும் கொண்டிருக்கும். அதுவே இயல்பானதும் கூட.

--அது சரி தலைப்பில் உள்ள கழுவிகள் கட்டுரைக்கு பொருந்துகிறது. அது என்ன கொழுவிகள்.. ?
--அது சும்மா ஒரு எதுகை மோனைக்கு வைத்தது..
--என்ன மோனை..

22.6.07

வெற்றியண்ணை - சிறுகதை

நான் கொஞ்சம் படபடப்பாக படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தேன். ஓடி வந்ததினால் மூச்சு வாங்கியது. ´´ஏன்ரா ஓடுறாய்´´ என வழியில் கேட்ட சுதனண்ணைக்கு, கடைசி விரலைத் தூக்கிக் காட்டி விட்டு வந்ததை நினைக்க சிரிப்பா இருந்தது. பள்ளிக் குடத்தில் இருக்கும் போதே சுற்றிவர நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டது. அப்போதிருந்தே துருதுருவென இருந்தேன். அவ்வப்போது வெளியில் எட்டிப் பார்ப்பதை மனோன்மணி ரீச்சர் (டீச்சர்) வேறு கண்டு விட்டா. ´´என்ன பிரச்சனை உனக்கு.. அடிவாங்கப் போறியோ´´ ´´இல்லை ரீச்சர் வெளியில ஆமிக் காரர்´´

´´அதுக்கென்ன.. உன்னையோ தேடி வந்தவங்கள்? பேசாமல் படத்தைக் கீறு பாப்பம்´´ நான் கடற்கரை என்று தலைப்பிட்டு விட்டு கீழே கொஞ்சம் நீலம், மேலே கொஞ்சம், நீலம் நடுவில் மண்ணிறமென மெழுகு கலரால்த் தேய்த்தேன். மனிதர்களை வரையும் போது அவர்களுக்கு தொப்பியும் போட்டு கையில் துப்பாக்கியும் வரைந்தால் என்ன என மூளை யோசித்தது. வெளியே நாய்கள் ஓய்வதும் குரைப்பதுமாக இருந்தது. மணியடித்ததும் முதலாக வரிசையில் போய் நின்றேன். வழியில் வேலிகளை வெட்டிக் கொண்டு ஆமிக்காரர் கள் நின்றிருந்தார்கள். சிலர் சிரித்தார்கள்.

விறாந்தையில் அம்மம்மா பனையோலைப் பெட்டி செய்து கொண்டிருந்தா. ´´அம்மம்மா வெற்றியண்ணையாக்கள் உள்ளை நிக்கினமோ´´

´´ம்.. ஒரு மணித்தியாலத்துக்கு முதலே போயிட்டாங்கள். இஞ்சை ஒரு பத்துமணி போலவே ரவுண்டப். காலமமை சந்தைக்கு போன சாந்தா இடையில வந்து சொன்னது. பொடியள் அப்பவே போயிட்டாங்கள். ´´ சாந்தாக்கா முன் வீட்டில இருக்கிறவ. அவவுக்கு இஞ்கை பொடியள் வந்து போறது தெரியும். அவவின்ர அம்மாக்குத்தான் பொடியள் வந்து போறது விருப்பமில்லை. ´´என்னத்துக்கு தேவையில்லாத பிரச்சனையள். உதாலை அயலில இருக்கிற எங்களுக்கும் வில்லங்கம் வரும். ´´ என்று ஒரு தடவை அம்மாவிடம் சொல்லியிருக்கிறா. ´

நான் அறைக்குள்ள போனேன். அங்கை தான் வெற்றியண்ணையாக்கள் இருக்கிறவை. நினைச்ச உடனை ஓடிப்போறதுக்கு வசதியான அறையும் கூட. கதவைத் திறந்து சிறியண்ணையின் கிணற்றடி வளவைத் தாண்டினால் போதும் பிறகு அங்காலை குடிமனையற்ற வளவுகளும், வயற்காணிகளும் தான். அதையும் தாண்டினால் அடுத்த கிராமம்.

அந்த அறையை ஒருதடவை நோட்டம் விட்டேன். ஒருமுறை இப்பிடித்தான் இரவு வந்து தங்கியிருந்தார்கள். காலையில் கச்சான் விக்கப் போன அம்மம்மா வியர்வை வழிய படபடப்புடன் ஓடிவந்து கடகத்தை இறக்கினா. ´´ஒழுங்கை.. ஒழுங்கை வாசலில ஆமி.. அறுவாங்கள் காலைமையே வந்திட்டாங்கள் போல.. ஓடிப்போங்கோடா..´´ அவாவுக்கு குரல் ஒரு சீராக வரவில்லை. விக்கி விக்கித் தான் கதைத்தா.

வெற்றியண்ணையோடு இன்னும் இரண்டு பேர் தங்கியிருந்தார்கள். சடசடவெண்டு துவக்குகளை உரைப்பையில் திணித்து விட்டு கட்டியிருந்த சாரத்தை கழட்டிவிட்டு ஓட்டமெடுத்தார்கள். தெருவில் நாய்கள் குரைப்பது அதிகமானது. ´´உள்ளை வருவாங்கள் போலத்தான் கிடக்கு´´ என்றா அம்மா. ´´இந்த சாரங்களை என்ன செய்யிறது? இதை யார் கட்டுறது எண்டு கேட்டா என்ன சொல்லுறது.. எட்டு வயது பொடியன் கட்டுறது எண்டு சொன்னால் நம்புவாங்களோ..´´ அது கொஞ்சம் மிகையான பயம்போலத்தான் இருந்தது. ஆனாலும் குப்பைகளையே கிளறிப் பார்ப்பவர்கள் அவர்கள்.

அம்மம்மா சாரங்களை சுருட்டி எடுத்துக் கொண்டா. ´´இஞ்சை விடு பிள்ளை.. நான் கட்டியிருக்கிறன். கேட்டா என்ரை சாரம் எண்டு சொல்லுறன்´´

அன்று இராணுவம் வீட்டுக்குள் வரவில்லை. வீதிகளில் ரவுண்டப் செய்து யாரையோ கைது செய்து கொண்டு போனார்களாம். அவர் கிட்டடியிலதான் கல்யாணம் கட்டியவர் என வீட்டில் பேசிக்கொண்டார்கள்.

´´வெற்றியண்ணை வீணா ஓடினது.. பேசாமல் வீட்டிலயே இருந்திருக்கலாம்´´ என நான் நினைத்துக் கொண்டேன். வாரத்தில் ஒருதடவையேனும் அவர்கள் வீட்டிற்கு வருவார்கள். சில நாட்களில் இரவுகளிலும் தங்குவதுண்டு. சுவர்களில் சாத்தப்பட்டிருக்கும் துப்பாக்கிகள் பெரும்பாலும் உரப் பையின் வெளியே தலை நீட்டிக் கொண்டிருக்கும். கிரேனைட்டுக்கள் பெல்ட்டுக்களில் பொருத்தப் பட்டிருக்கும். வெற்றியண்ணையிடம் ஒரு அல்பம் இருந்தது. அதில் அவரது சிறு வயதுப் படங்கள், அவரது அம்மா அப்பா சகோதரங்களுடனான படங்கள் முதல் பயிற்சியெடுக்கின்ற படங்கள் வரை இருக்கும். அப்பா அம்மாவுடனான படங்களை அவர் அதிக நேரம் பார்ப்பதை நான் கண்டுகொண்டிருக்கிறேன்.

மற்ற ரண்டு பேரும் நிறைய அமைதியானவர்கள். அதிகம் பேச மாட்டார்கள். நான் ஆர்வத்தில் கேட்கும் கேள்விகளுக்குக் கூட சிலசமயங்களில் அவர்களிடமிருந்து பதில் வராது. ஆனால் வெற்றியண்ணை அப்படியில்லை. ஏதாவது பேசிக்கொண்டு இருப்பதுதான் அவருக்கு பழக்கம். என்னோடும் நல்ல வாரப்பாடு. ´´வோக்கி டோக்கியென்பதும் ரெலிபோனும் ஒண்டு தானோ.. இதில யாரோடும் கதைக்கலாமோ.. எவ்வளவு தூரத்திலிருந்தாலும் கதைக்கலாமோ.. ´´ இப்படி நானும் ஏதாவது கேட்டுக்கொண்டிருப்பேன்.

ஒருமுறை ´´ஆமிக் காரர் வைச்சிருக்கிற துவக்கில எல்லாப் பக்கமும் ஓட்டை இருக்கே.. அதெல்லாத்தாலையும் குண்டு வருமோ´´ என்று கேட்டதுக்கு ´´ம் அதாலை தான் பக்கத்தில நிக்கிற சனமெல்லாம் சாகுது´´ என்றவர் கொஞ்சக் காலத்துக்குப் பிறகு ´´எங்களிட்டையும் எல்லாப் பக்கத்தாலையும் குண்டு வாற துவக்கு இருக்கு பாக்கப் போறியோ எண்டு கேட்டுக் காட்டினார்.

´´யார் தந்தது உது´´

´´ஒரு ஆமிக்காரர் தனக்குத் தேவையில்லையெண்டு எடுக்கச் சொன்னவர்´´

இப்போதெல்லாம் பாடசாலை விட்டு வரும்போதே வாசலில் வைத்து வெற்றியண்ணை வந்தவரோ எனக் கேட்டு வருவது என் வழக்கமாகி விட்டிருந்தது. ஆரம்பத்தில் ஒரு வித இடைவெளியுடன் பழகியவர்கள் இப்போது குடும்பத்தில் மிக நெருக்கமாகிப் போனார்கள்.

எனக்கு ஞாபகமிருக்கிறது. கொஞ்சக் காலத்திற்கு முதல், இரண்டு மூன்று பேர் கொஞ்ச மூட்டைகளுடன் வந்து தயங்கித் தயங்கி கேட்டார்கள். ´´அக்கா உங்கடை கிணத்தில குளிச்சிட்டு போகலாமோ.´´ அம்மா மோட்டரைப் போட்டு தொட்டியில் நீர் நிரப்பி விட்டா. எல்லோரும் வெளியே நின்று குளிக்க, ஒருவர் மட்டும் உள்ளே ஏறிக் குதித்து கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார். தண்ணியில் சட சட வென கைகளால் அடிப்பதும், வாயில் தண்ணியெடுத்து அதை மேலே பாய்ச்சுவதுமென ஏதோ என் வயதொத்தவர்கள் போல இருந்தது அவரது செய்கைகள்.

குளித்து முடித்தபிறகும் அவர்கள் தயங்கித் தயங்கி நின்றார்கள். ´´தம்பி அம்மாவைக் கூப்பிடும்´´

´´அக்கா சரியா பசிக்குது. எங்களிட்டை பாண் வாங்க காசிருக்கு. கறி ஏதாவது தருவியளே..´´ அம்மாவின் கண்களில் நீர் கசிந்ததை நான் பார்த்தேன். ´´கறி வைக்கிறன்..இருந்து சாப்பிட்டுட்டு போங்கோ.. ம்.. ஆராவது கோழி உரிப்பியளே..´´

´´நான் உரிப்பன் அக்கா´´ என்று சொன்னவர் தானாகவே தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். ´´என்ரை பேர் வெற்றி.. ´´

அதற்குப் பிறகு அவர்கள் வருவதும், போவதும் சில சமயங்களில் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவதும் வழமையாகி விட்டது.

பாடசாலை விட்டோ ரியுசன் முடிந்தோ வரும் வழிகளில் எந்த வீட்டிலிருந்தாவது சமையல் தாளிக்கும் வாசம் வந்தாலும் அது சப்பாத்தியெண்ணை வாசமா என மணந்து பார்க்கின்ற பழக்கமொன்று எனக்கு கொஞ்சக் காலமாகவே வந்துவிட்டிருந்தது. வீட்டில் அன்று வெற்றியண்ணையாக்கள் இருந்தார்கள். வெற்றியண்ணை நிலத்தில் படுத்திருந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் புத்தகங்களில் மூழ்கியிருந்தனர்.

´´எனக்கும் ஒரு வீடியோ கேம் அப்பா அனுப்பறவர் எண்டு எழுதினவர்´´ நான் வெற்றியைப் பாத்துச் சொன்னேன். ´´அவர் சும்மா எழுதியிருப்பார். இருந்து பார் அனுப்ப மாட்டார்.´´ நான் அதை பெரிசா எடுத்துக் கொள்ளவில்லை.

´´உதுவும் யாரும் ஆமிக்காரர் தேவையில்லையெண்டு தந்ததோ´´ எனக் கேட்டேன். எனக்கு வீடியோ கேம் ஒன்று வைத்திருக்கவேண்டும் என்று நிறைய நாள் ஆசையிருந்தது. பக்கத்து வீட்டு செல்வன் அண்ணைக்கு அவரின்ர அப்பா ஒன்று அனுப்பியிருந்தவர். ஒரிரண்டு தடவைகள் அவரிடம் வாங்கி விளையாடியிருப்பேன். ஆனால் பெரும்பாலான நேரம் நான் அவர்கள் வீட்டுக்கு போனதும் அவர் அதை எடுத்து விளையாடத் தொடங்கிவிடுவார். பிறகு எப்படிக் கேட்பது என்ற தயக்கம் எனக்குள் ஏற்பட்டு விடும். எனக்கும் ஒரு வீடியோ கேம் வேணுமென்று அப்பாக்கு எழுதிவிட்டு நிறைய நாளாயிற்று. அதை யாருக்கும் குறிப்பா செல்வன் அண்ணைக்கு கொடுப்பதில்லையென்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தேன்.

செல்வமண்ணையிட்டை வீடியோ கேம் இருக்கு. இப்ப வெற்றியண்ணையிட்டையும் இருக்கு. எனக்குத் தான் இன்னமும் இல்லை என்று மனசுக்குள் ஓடிய ஏமாற்ற உணர்வு என் முகங்களிலும் தெரிந்திருக்க வேண்டும்.

´´இஞ்சை வாடா .. உன்ரை கொப்பர் தான் அனுப்பினவர் இது. ஆரோ கொண்டந்து தந்திட்டு போகினம். நான் பொழுது போகேல்லையெண்டு வாங்கி விளையாடுறன். இந்தா..´´

அன்று முழுவதும் நான் அதோடையே இருந்தன். அது ஒரு சின்னக் கறுப்பு வெள்ளைக் கேம். மேலே இருந்து பாயும் தவளைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வளவும் தான்.

மாலை வெற்றியண்ணை அதை கேட்டபோது எதுவும் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்தது ஏன் என்று இரவு முழுதும் யோசித்தேன். அவசரப் பட்டு குடுத்திட்டேனோ என்று இருந்தது. அம்மாக்கும், அம்மம்மாவிற்கும் கூட சரியான ஆச்சரியம். அதற்குப் பிறகு நிறைய நாட்கள் வெற்றியண்ணையைக் காணவில்லை. அவர் மீது எரிச்சல் எரிச்சலாக வந்தது.

பறாளாய் முருகன் கோவில் திருவிழா ஒன்றில் வெற்றியண்ணையைக் கண்டேன். வேட்டி கட்டி, கைகளுக்கும் நெஞ்சுக்கும் சந்தனம் பூசி ஆளை அடையாளமே தெரியவில்லை. ´´என்ரை வீடியோ கேம் எங்கை.. ´´ என்று கேட்டது அம்மாவுக்குப் பிடிக்கவில்லைப் போலிருந்தது. ´´இருக்கு இருக்கு.. கொஞ்சம் அவசர வேலையள். கொண்டு வந்து தாறன்´´ வெற்றியண்ணை கூட்டத்தோடு கலந்து போனார்.

பாடசாலை நண்பர்களிடம் எனக்கொரு வீடியோ கேம் வந்ததாக சொல்லிவிட்டு, நாளைக்கு கொண்டு வருகிறேன் நாளைக்கு கொண்டு வருகிறேன் என நாட்களைக் கடத்தினேன். ´´நீ சும்மா புளுகிறாய். உன்னட்டை அப்பிடியொண்டும் இல்லை´´ என்று நண்பர்கள் கேலி செய்த போது வெற்றியண்ணை மீது கோபம் கோபமாக வந்தது. ஒரு நாள் வீட்டை சண்டை பிடிப்பதென்ற முடிவுடன் தான் வந்தேன். வீட்டில பெரியப்பா இருந்தார். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

´´சண்டை நடந்ததாம். எல்லாம் முடிஞ்சுதெண்டு அவங்களை சரண்டர் பண்ணச் சொல்லி வெற்றி வெளியில வந்தவனாம். சுட்டுப் போட்டாங்கள். அந்த இடத்திலேயே சரி. அவசரப்பட்டிட்டான் போல´´

நான் மரணம் ஒன்றிற்காக முதன் முதலில் அழத் தொடங்கினேன்.

அதற்கடுத்த நாட்களில் வீடியோ கேம் எங்கு என்ற கேட்ட நண்பர்களுக்குச் சொன்னேன். ´´ஓம்.. நான் சும்மாதான் சொன்னனான். அப்பா எனக்கு அப்பிடியொண்டும் அனுப்பவில்லை. எனக்கு அதில பெரிசா விருப்பமும் இல்லை. ´´

21.6.07

இது எவருடைய தவறாய் இருக்கலாம் ?

விமர்சனங்கள் எந்த அடிப்படையில் உருவாகின்றன என்பதற்கு பொருத்தமான இரண்டு வழிகளைச் சொல்ல முடியும். அவை நேரடி அனுபவத்தின் ஊடான தர்க்க ரீதியான சிந்தனையின் அடிப்படையில் உருவாகின்றனவாகவும், இன்னொரு வழியில் நேரடியான அனுபவமோ தொடர்போ அற்ற நிலையில் அது குறித்து அறியப்படும் செய்திகளினூடு உருவாக்கிக் கொள்ளும் கருத்துருக்களாகவும் அமைகின்றன. இவற்றோடு தனி விருப்பங்களும் இணைவதுண்டு.

இன்னொரு வழியில் ஏற்கனவே எடுத்து விட்ட முடிவின் அடிப்படையில் விமர்சனங்களை உருவாக்கிக் கொள்வோரும் உண்டு. அவர்கள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் தமக்கிருக்கும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.

ஆயினும் மேற்சொன்ன இருவழிகளில் ஒன்றான செய்திகளின் அடிப்படையில் தமக்கான கருத்துருவாக்கங்களை உருவாக்கிக் கொள்ளுதல் என்பது, அவர்கள் அறிந்து கொள்ளும் செய்திகளில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டு மேலே செல்லலாம்.

பொதுவாக ஈழப் போராட்டம் தொடர்பாக தமிழில் சொல்லப்படும், எழுதப்படும், அளவுகளில் வேற்று மொழிகளில் சொல்லப்படுவதில்லை என்ற ஆதங்கத்தினை நான் பலரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நான் உட்பட பலரும் அவற்றிற்கான முழு முயற்சிகளில் இது வரை இயங்கியதாக இல்லை. அதிலும் குறிப்பாக, அறிந்த பிற மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருந்தது என்ற நிலை மாறி குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவில், இன்று பல நாடுகளில் வாழும் இளைஞர்களுக்கு பிற மொழிகள் தெரிந்திருக்கும் நிலையில் அதற்கான முன் முயல்வுகள் என்பது அசாதாரண வேகம் எனச் சொல்லக் கூடிய அளவிற்கு இல்லை.

உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழும் தமிழர் அல்லாதவருக்கு, ஊடகங்கள் சென்றடையும் ஒருவருக்கு, அரச இயந்திரமொன்றில் சம்பந்தமற்ற ஒருவருக்கு இலங்கை தமிழர்கள், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள், அதற்கான முடிவுகள் குறித்து பரந்த அளவில் தெரியாத நிலையில் நமது போராட்டம் உலக மயமாகி விட்டது எனச் சொல்லி விட முடியுமா..? என்ற கேள்விகள் என்னிடம் உண்டு.

இவை, தமிழர்களுக்கு போதுமான அளவு சொல்லியாகி விட்டது என்ற எண்ணத்திலும், தொடர்ந்தும் நமக்குள்ளேயே சொல்வதும், எழுதுவதும் ஒரு வித ஒப்பாரி நிலையைத் தோற்றுவிக்கிறது என்ற நிலைப்பாட்டிலும் எனக்குள் ஏற்பட்ட கருத்துக்களாயினும், அவற்றை மீள்பரிசீலனை செய்ய வேண்டியேற்பட்ட அனுபவம் ஒன்றைக் குறித்துச் சொல்ல வேண்டும்.

அண்மையில் ஒரு தமிழ் களத்தில் தமிழக நண்பர் ஒருவர் கேட்டிருந்த சில கேள்விகள், ஈழத் தமிழரின் நியாயங்கள் மட்டுமல்ல.. ஈழத் தமிழர் குறித்த பொதுவான செய்திகளே இன்னும் தமிழர்களிடத்தில் சென்று சேரவில்லையென்ற சோர்வு நிலையை எனக்குள் தோற்றுவித்தது. அயலிலே வெறும் முப்பது கிலோ மீற்றர்கள் தூரத்தில் இருந்து கொண்டு மொழியால், பண்பாட்டுத் தொடர்புகளால் ஒத்திசைவு உள்ள ஒரு இனத்திடம் கூட நம்மைப் பற்றிய செய்திகள் சென்று சேரவில்லையே.. இந்த லட்சணத்தில் உலகின் பார்வைக்கு நம்மைப் பற்றிக் கொண்டு செல்வதா என்ற ஏமாற்ற உணர்வினை நான் அனுபவித்தேன்.

இணையத்தில் இப்போதும் பார்வைக்கிருக்கும் அக் கேள்விகளை இங்கே மீளப் பதிப்பிப்பதென்பது யாரையும் புண்படுத்தவோ, குத்திக்காட்டவோ இல்லையென்பதை அனைவரும் புரிவீர்கள் என நம்புகிறேன். அந்த நண்பரின் கேள்விகளில் விவரிக்க முடியாத அதிர்ச்சியையும் ஒருவித அயர்ச்சியையும் ஒருங்கே தந்த கேள்விகள் இவைதான்.

1. வாழச் சென்ற நாம் தனி இடம், அரசாங்கம் கேட்பது நியாயமா?

2. 50 வருடங்களுக்கு முன் நாம் கலிபோர்னியா மாகாணத்தில் குடியேறி, இன்று கலிபோர்னியா மாகாணம் மட்டும் நமக்கு தனியாக கொடுத்து, சுய ஆட்சி தரவேண்டும் என்று சொன்னால் அமெரிக்கா ஒப்புக் கொள்ளுமா. நீங்கள் அமெரிக்கராக இருந்தால் உங்கள் நாட்டிற்கு வந்தவர்களுக்காக ஒரு பகுதியை வெட்டி தானம் செய்வீர்களா?

3. குடியேற சென்ற தமிழர்கள் இலங்கை முழுவதும் பரவி, அவர்களுடைய கலாச்சாரத்தில் கலந்திருந்தால் இந்த பிரச்சனை நேர்ந்திருக்குமா. தமக்கென்று தனியே ஒரு இடத்தை அமைத்து அதில் வாழ முற்பட்டதாலேயே இந்த தனியிட கோரிக்கைகளும், தமிழர் இருக்கும் இடம் பார்த்து அவர்கள் தாக்க முடிவதும்

4. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக் செல்பவர்கள் தொழிலுக்காக சென்ற அந்த நாட்டிலிருந்தே ஒரு பகுதியை கேட்பது நியாயமா?

ஈழத்திலே 50 வருட கால இனமுரணும், இருபத்தைந்து வருட கால ஆயுதப்போரும் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அவர்களின் இருப்பு என்ன எனவும், அவர்களது பூர்வீகம் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பும், வெறும் ஐம்பது வருட வரலாற்றினையே அவர்களுக்கு கொடுக்கும் இக் கேள்விகள் குறித்து என்ன உணர்கிறீர்கள்.

ஆரம்பம் தொட்டே ஈழத்தில் தமிழ் பூர்வீகக் குடிகள் இருந்தனவென்பதும், சிங்கள மேலாதிக்க வரலாற்று அல்லது புராண நூலான மகாவம்சம் கூட சிங்களவர்கள் இலங்கை நாட்டிற்கு ( இந்தியாவிலிருந்து) வந்த போது அங்கு ஆதிக் குடியினம் ஒன்று இருந்ததாகச் சொல்லும் செய்திகளும் எப்படிக் கடலைக் கடக்காமல் போயின?

தமிழகத்தில் இருந்து அவ்வப்போது நடத்தப்பட்ட படையெடுப்புக்களினால் ஏற்கனவே அங்கிருந்த மக்கட் கூட்டத்தினோடு சில திருமண உறவுத் தொடர்புகள், பண்பாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டனவே தவிர படையெடுப்புக்களினூடு மக்கள் சென்று குடியேற்றப் பட்டார்கள் என்ற செய்திகளை நான் அறிந்திருக்க வில்லை. தவிரவும் ஈழத்தில் நடந்த பல தொல்லியல் ஆய்வுகளும் தமிழர் பகுதிகளில் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்திருக்கின்றன.

உண்மையில் இக் கேள்விகளை ஏதோ திட்டமிட்ட விசமத்தனமான கேள்விகள் என நான் கருதவில்லை. ஒருவர் தான் அறிந்து கொண்ட செய்திகளின் அடிப்படையில் தனக்கான ஒரு கருதுகோளை எடுத்ததன் வடிவமே இது. அதாவது தமிழர் போராட்டம் நியாயமானதா அற்றதா என்பதற்கு அவர் அறிந்து கொண்ட செய்திகளினூடு முடிவினை எடுத்துக் கொள்கிறார். இங்கேதான் உண்மையானதும் சரியானதுமான செய்திகளின் தேவை முதன்மை பெறுகிறது.

ஆரம்பத்தில், ஒரு சிலரிடம் மட்டுமே இவ்வாறான நிலைப்பாடுகள் இருக்கலாம் என்றிருந்த எனக்கு, அண்மையில் ரவிசங்கர் ஒரு ஒலிப்பதிவிலும், பாரி அரசு ஒரு பின்னூட்டத்தில் மிகப்பரந்து பட்ட அளவில் இந்த எண்ணம் தமிழகத்தில் உள்ளதாகச் சொன்னார்கள்.

ஓர் அறியும் ஆர்வத்திற்காக இந்தக் கேள்வி. தமிழகத்தின் தமிழர்களின் அதே வரலாற்றுக் காலம் தொடக்கம் ஈழத்திலும் தமிழர்கள் இருந்தார்கள் என்பதை ஏற்கனவே நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா.. ? இல்லையெனில் ஐம்பது வருடங்களிற்கு முன்னர் சென்றவர்கள் போன்ற செய்திகளை எப்படி அறிந்து கொண்டீர்கள்..?

(இங்கே ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களிற்கு வேலைக்காக கூட்டிச் செல்லப்பட்ட தமிழர்கள் குறித்த குழப்பங்களும் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் ஈழத்தில் தமிழரின் பாரம்பரிய நிலங்களான வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து நேரடி நிலத் தொடர்பற்ற மத்திய பகுதிகளில் தமக்கென தனியான அரசியல் தலைமைகளுடன் செயற்படுகிறார்கள். நடந்து முடிந்த சில பல கலவரங்கள் காரணமாக அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று இன்று தமிழர் போராட்டத்தின் பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் ஆகி விட்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்டத்தில் நேரடிப் பங்களிப்பவராகவும் உள்ளார்கள்.)

இந்த மாதிரியான தவறான முடிவுகளுக்கான தவறான செய்திகளுக்கு என்ன காரணம்..?
சரியான செய்திகளை கொண்டு வராதவர்களின் தவறா?
சரியான செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வமற்றவர்களின் தவறா..?

அல்லது இவ்வாறான செய்திகளை வேண்டுமென்றே திட்டமிட்டுப் பரப்பும் சில அதிகாரங்களா..?

20.6.07

திருச்சிக் காரங்க யாராவது இருக்கீங்களா

யுத்தம் எங்களை ஒவ்வொரு இடத்திலிருந்தும் தூக்கித் தூக்கி எறிந்தது என்று சொல்வதை, யுத்தம் எங்களுக்கு புதிய புதிய இடங்களை அறிமுகப் படுத்தியது என்று சொல் என்றார் ஒருவர். தனி விருப்பற்ற சமயத்தில், தக்க காரணங்கள் ஏதுமின்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதுப் புது இடங்களுக்கு அலைவதை நேர் எண்ணத்தில் நினைப்பதை எந்த வகைக்குள் அடக்குவது எனத் தெரியவில்லை.

ஆனாலும் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்துக்குள் கிடந்த என்னை, பாடசாலைக்குக் காலை வருவதும் மதியம் திரும்புவதுமென வாழ்ந்த என்னை, எப்போதாவது யாரோடாவது ஐஸ்கிரீம் குடிக்கவும் உடுப்புக்கள் வாங்கவும் மட்டுமே நகரத்துக்கு வந்து போன என்னை, கிளாலி கடநீரேரிக்கு அப்பால் உலகொன்றிருப்பது குறித்து எந்த அக்கறையும் இன்றிக் கிடந்த என்னை என்னைப் போன்றோரை, யுத்தம் தூக்கி ஒவ்வொரு ஊராகத் துரத்தியதென்பது, துயரும் வலியும் நிறைந்ததெனினும் அதுவே மற்றுமொரு வகையில் புதிய அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய நினைவுகளை எனக்குள் தந்தது என்பதையும் குறித்தாக வேண்டும்.

இல்லாவிட்டால் காடுகளிலிருந்து தோட்டங்களுக்குள் நுழையும் யானைகளை கலைப்பது எப்படி என தெரிந்திருக்க முடியுமா? முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா..? இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா..? ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா..?

1997 இல் மண்டபம் முகாமில் குறிப்பிடத் தக்க காலம் இருந்த பிறகு, திருச்சி சென்று குடியேற விண்ணப்பித்திருந்தோம். ஆனாலும் அதற்கான விசாரணைகள், வில்லங்கங்கள் என கொஞ்சக் காலம் இழுத்தடித்த பிறகும், மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் திருச்சி செல்ல அனுமதித்தார்கள். அந்தக் காலத்தில்த் தான் இந்தியன் தாத்தாவின் வருகையினால் எல்லோரும் லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்தியிருந்தார்கள் இந்தியன் படத்தில். ஆமாங்க படத்தில்த் தான்.

திருச்சிக்கு செல்வதற்கு முன் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்களில் ஓரளவு வெளிநாட்டு உறவகளின் பணபலம் உள்ளவர்களாலேயே அவர்கள் விரும்புகின்ற சிலவற்றைச் சாதித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அந்தவாறான எந்த உதவியுமற்று சின்னச் சின்னக் கூலி வேலைகள் செய்தும், முகாமில் கொடுக்கின்ற மலிவு விலை உணவுப்பொருட்களையும் பணத்தையும் மட்டுமே நம்பியும் வாழ்க்கையை இன்னமும் கொண்டு நடாத்துகிறார்கள். தினமும் கடலை வெறித்த படி பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்க்க வலிக்கும். உயிரை மட்டுமே வைத்திருப்பது தான் வாழ்க்கையா.. ?

(இவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் போன்ற ஏதாவது அமைப்புகளினூடாக உதவிகள் செய்ய முடியாதா என்பதற்கு அதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகச் சொன்னார்கள். விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். )

நீண்ட காலத்திற்குப் பிறகு நிலையான மின்சாரம், தொலை பேசிப் பாவனை, கணணியை நேரே பார்த்தது, திரையரங்குகளில் புதிய படங்கள் என பல முதன்முதல் அனுபவங்களை (வேறை ஒண்ணும் இல்லைப்பா) திருச்சி எனக்குத் தந்தது. நாங்கள் காஜாமலைக் colony என்ற இடத்தில் குடியிருந்தோம். காஜாமலை என்பது ஒரு கற்குன்று. அவ்வாறான ஒரு உயர்ந்த கற்குன்றை மலையைக் கூடப் பார்ப்பது அப்போது தான் முதற்தடவை.

திருச்சியின் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 88 ம் இலக்க பஸ் எடுக்க வேண்டும். வரும் வழியில் சிம்கோ மீட்டர் கம்பனிக்கு முதல் ஸ்டாப்.. யாருக்காவது தெரியுமா..?

திருச்சியில் எனது பாடசாலைக்கு இணையும் முயற்சிகள், பாடசாலைகளின் விதிப்படியும், எனது தலைவிதிப்படியும் தள்ளித் தள்ளியே போனது. பாடசாலை விடுகைப் பத்திரம் என்னிடமிருக்க வில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரவில் ஓடிவரும் போது விடுகைப்பத்திரத்திற்கு எங்கு போக முடியும்? அந்த இடம் பெயர்வின் சன சமுத்திரத்தில் நமது பாடசாலை அதிபரைக் கூட கண்டிருக்கிறேன். அவரும் தனது குடும்பம் குழந்தைகளுடன் இடம் பெயர்ந்து கொண்டிருந்தார். அன்றைக்கு அவரிடம் கேட்டிருக்கலாமோ..?

முல்லைத் தீவின் உடையார் கட்டு மகாவித்தியாலத்தில் நான் உட்பட இடம்பெயர்ந்த எவரும் உத்தியோக பூர்வமாக இணையவில்லை. 95 இல் எந்த வகுப்பு படித்துக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்டு விட்டு 96 இல் அதற்கடுத்த வகுப்பில் இருந்து படியுங்கள் (உண்மையிலேயே இருந்து தான் - நிலத்தில் ) என விட்டார்கள்.

சரி..TC தான் இந்தப் பாடு படுத்துகிறதே என்றால் சாதிச் சான்றிதழ் அடுத்த கொளுக்கி போட்டுப் பிடித்தது. அதை நான் யாரிடம் எடுப்பது..? எப்படி எடுப்பது..? அதற்கு என்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு கோதாரியும் எனக்கு விளங்கியிருக்கவில்லை. ஒரு பாடசாலையில் அதனை எமது சொந்த ஊரிலிருந்து வாங்கித் தரும் படி சொன்னார்கள். ஊரிலையெண்டால் விதானையிடம் தான் கேட்க வேண்டும். கேட்கிறவரை விதானை இயக்கத்திடம் பிடித்துக் கொடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்..:))

இப்படி இது ஒரு பக்கத்தால் நடந்தாலும், நாங்கள் வந்த காலப்பகுதியிலேயே வந்து, திருச்சியில் தங்கியிருந்த இரண்டு அண்ணன்களைப் பழக்கம் பிடித்து காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கா ஒவ்வொரு திரையரங்குகளிலும் புதுப்படங்கள் பார்ப்பதை வாடிக்கையாக்கியிருந்தேன். பெரிய இடத்து மாப்பிளை, சூரிய வம்சம், நேருக்கு நேர் இவையெல்லாம் உடன் நினைவுக்கு வருகின்ற படங்கள். மீனா மோனா என்ற ஒரேயிடத்தில் அமைந்த ஒரு தியேட்டர் ஞாபகத்தில் உள்ளது.

உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வாராவாரம் செல்வது வழமை. மேலே உச்சியில் நின்று கொண்டு அடிக்கும் காற்றிலிருக்கும் குளிரை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம்.

ஆடிப் பெருக்கொன்றின் போது காவேரிக் (காவேரிதானே..) கரைக்கு சென்றிருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் கிடையாது. வழுக்கையாறு என்ற ஒரு நீரோட்டம் மழைக் காலங்களில் இருக்கும். அது கூட யாழ்த் தாய் சத்திரசிகிச்சையில் பெற்றெடுத்த குழந்தையென்று சொல்வார்கள்.

திருச்சியில் அப்போது ஒரு ரூபாய்க்கு சாம்பார் கறிக்கு தேவையான அனைத்து மரக்கறிகளையும் வாங்கலாமென்றிருந்தது எனக்குப் பெரிய அதிசயம் தான். அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே பொருட்களின் விலைகள் நமக்கு அதுவரை பழக்கத்திலிருந்த விலைப் பெறுமதிகளிலிருந்து பெருமளவு வேறு பட்டிருந்தன. நான் வழமையாக செல்லும் கடைக்காரர் எனனைச் சிலோன் தம்பி என்பார். அவரைப் போன்றோருடன் பேசும் போது நானும் தமிழக பேச்சு வழக்கில் பேச முயற்சித்தேன்.

திருச்சியில் பெருமளவிலான இலங்கைத் தமிழர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஒருமுறை இலங்கையர் ஒருவரின் திருமண நிகழ்வொன்றில், இருவரைக் காட்டி அதோ அவங்கள் தான் தலைவரின் அப்பாவும் அம்மாவும் எனக் காட்டினார்கள். அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்.

ஆயினும் இந்தவாறான எதிர்காலம் என்னவென்று தெரியாத வாழ்க்கை மீது கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு வரத் தொடங்கி விட்டது. பாடசாலைக்கான அனுமதிகள் மறுக்கப் பட்டு விட்டன. எரிச்சல் மெதுவாக கிளம்பத் தொடங்கியது. கனவுகள் கலைந்து விட்ட ஏமாற்றம் தான் எஞ்சியது. ஆரம்பத்திலிருந்த சுற்றித் திரியும் ஆர்வம் அற்றுப் போய் வீட்டில் முடங்கத் தொடங்கினேன்.

யாருக்குப் பயந்து வந்தோமோ அவர்களின் கோட்டையான கொழும்புக்கே போய் விடலாம் என்ற அடுத்த முடிவுக்கு காலம் துரத்தியது. சென்னை விமான நிலையத்தில் வைத்து அகதிகள் முகாமிலிருந்து அனுமதியின்றி செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.

நன்றி திருச்சி
நன்றி இந்தியா

(ஒரு கற்பனைக்கு.. திருச்சியில் எங்கேனும் பாடசாலை அனுமதி கிடைத்திருந்தால் எல்லாப் பாதைகளும் மாறி ஒரு வேளை நான் இப்பொது அங்கேயே செட்டில் (ஆமாங்க செட்டில்..) ஆகி விட்டிருப்பேனோ என்னவோ.. :))

19.6.07

யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது

வலைப் பதிவுகளில் நானும் சோமியும் அவ்வப் போது ஐந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத ஏதாவது ஒன்றைப் பற்றி, நகைச்சுவையை மட்டும் மையப்படுத்தி அளவளாவுவோம். என்னை ஒரு மொக்கைப் பதிவு மன்னன் ஆகப் பிரகடனப்படுத்தும் அளவிற்கு அவை இருந்து வந்துள்ளன. இது குறித்து அவ்வப் போது சில பெரியவர்கள் நமக்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கூறுவார்கள். உங்களிடமிருந்து வரவேண்டியவை இவ்வாறான ஒலிப்பதிவுகள் அல்ல எனவும், இப்படியான பம்பல்களை விட்டுவிட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யலாம் எனவும் அவர்களிடமிருந்து அறிவுறுத்தல்கள் வருவதுண்டு.

ஆனால் இதன் அடிப்படையில் என்ன உளவியல் காரணமுண்டு என்பதை யாராவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இடை நடுவில் பிரித்தெறியப்பட்டு எங்கெங்கோ தேசங்களில் இன்று சிதறுண்டு போய்க் கிடக்கும் இள வயதுள்ளவர்கள் ஏதோ ஒரு வழியில் இணையும் போது அங்கே கூத்தும் கும்மாளமுமே முதன்மையாய்த் தோன்றுவதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா..?

இவை குறித்து மேலும் பேசுவதற்கு முன்னர் ஈழத்தில் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த சுமுக நிலை குறித்து பார்த்து விடலாம். அப்போதே அரசியல் ரீதியான முரண்கள் இருந்த போதும் இயல்பு நிலையென்பது பேணப்பட்டது.

இன்றைய பெரியவர்களாக இருக்கின்ற அன்றைய இளைஞர்கள் தம் வயதுக்கே உரிய அத்தனை கைங்கரியங்களையும் செய்திருப்பார்கள். பாடசாலைக் காலத்திலிருந்தே பிரியாத ஒரு நட்புக் கூட்டம் அவர்களுக்கு இருந்திருக்கும். அவர்கள் பூங்காக்களுக்கு நண்பர்களுடன் சென்றிருப்பார்கள். கடற்கரைகளுக்குச் சென்றிருப்பார்கள். ஒன்றாகத் திரையரங்குகளிற்கு சென்று படம் பார்த்திருப்பார்கள். நண்பர்கள் கூடி அரட்டையடித்திருப்பார்கள். நடுச் சாமத்தில் எந்தத் துப்பாக்கிப் பயமும் அற்று உலவியிருப்பார்கள்.

நமக்கு அந்த வாய்ப்புக்கள் கிடைத்தனவா..?
நாங்கள் பிறந்த போதே நிலம் எரிந்து கொண்டிருந்தது. பாலர் பாடசாலைக்குப் போகும் போதே ஊரடங்கு ஏதாவது உள்ளதா என ஆராய்ந்து தானே போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு இடப் பெயர்வுகளிலும் புதிது புதிதாக வந்து சேரும் நண்பர்கள் அடுத்தடுத்த வருடங்களில் பிரிந்து சென்று கொண்டிருப்பார்கள்.

மின்சாரமற்ற பத்துக்கும் மேலான வருடங்கள், எட்டுமணிக்கெல்லாம் அடங்கிவிடும் ஊர்கள், சிதைந்து போன திரையரங்குகள், உயிரின் நிச்சயமற்ற நாட்களென இந்த லட்சணத்தில் எங்கள் தலைமுறை எதை அனுபவித்திருக்க முடியும் ?

ஆயினும் இளமைக் காலத்தை இவ்வாறு இழந்த வருத்தமெதுவும் எனக்கு இருக்கவில்லை, கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் சமாதானத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் வரை.

2004 இன் நடுக்காலப் பகுதி

நான், சோமிதரன், நண்பர்கள் ஒரு சிலர் யாழ்ப்பாணத்தில் நிற்கின்றோம். அது என்றும் நான் பார்த்திராத யாழ்ப்பாணம். முற்றான சமாதானமென்றில்லாவிட்டாலும் சமாதானம் மீதான நம்பிக்கைகளே அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

நாங்கள் கடற்கரைகளுக்குச் சென்று பாணும் இறைச்சியும் சாப்பிட்டோம். எவரும் பிடித்து விட மாட்டார் என்ற நம்பிக்கையில் இராணுவ முகாம்களைக் கடந்தோம். ஏதாவது ஒரு உள்நுழைவில் ஒன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த புலிகள் மற்றும் இராணுவத்தினரைக் கண்டு ஆனந்தம் கொண்டோம். அடையாள அட்டை கேட்காத இராணுவத்தை நட்பாகப் பார்த்தோம்.

நடு இரவுகளில் கள்ளுக் குடித்தோம். கிழக்கு வானம் சிவக்கும் நேரம் என பாடிக்கொண்டு இரவின் வீதிகளில் எந்தப் பயமுமற்றுத் திரிந்தோம்.

அது போலவே கொழும்பில் சோதனைச் சாவடியற்ற பிரயாணங்களை அனுபவித்தோம். காலி முகத் திடல் கடற்கரையில் சாமம் தாண்டியும் கதைகள் பேசினோம். பொலிஸ் பதிவுகளை தூக்கி வீசியெறிந்தோம்.

அந்த ஒன்றிரண்டு நாட்களின் அனுபவங்களில் யுத்தமற்ற வாழ்வு எத்தனை மகிழ்ச்சியானது என்பதை அறிந்து கொண்டேன். இவையெதுவுமற்று இழந்த வருடங்களை எண்ணி வருந்தினேன். தங்கள் காலங்களை மகிழ்ச்சியாகக் களித்த அன்றைய இளைஞர்கள் மீது பொறாமை வந்தது.

வயதின் குறும்புகளுக்கு இடம் கொடுக்காத காலம் எங்களது. அந்த அனுபவங்களையெல்லாம் யுத்தம் எங்களிடமிருந்து அடித்துப் பறித்தது.

இதோ அந்த வயதுகளைக் கடந்து அடுத்த கட்டங்களிற்குள் உள் நுழைந்து விட்ட போதும் எப்போதாவது சிதறிக் கிடக்கின்ற நண்பர்களைக் காணுகின்ற போது கடந்த காலத்தினை அனுபவிக்கத் துடிக்கிறது மனது. அந்த அரட்டைகள், அந்த நக்கல்கள், கேலிப் பேச்சுக்கள் என மீண்டும் சிறு பையன்களாகி விடுகிறோம். அது நண்பர்கள் இணைந்த எந்த நிகழ்விலும் வெளித் தெரிகிறது. தவிர்க்கவும் முடியாதது.

சமாதானம் மீண்டும் தன் முகத்தை மறைத்துக் கொண்டு விட்டது. மீண்டும் யுத்தம், சாவு, கடத்தல்கள், அடையாள அட்டை, குண்டு வீச்சுக்கள், செல்லடி. அடுத்த தலைமுறையும் எங்களைப் போலவே வாழ வேண்டுமென்ற விதியாகி விட்டது அங்கே. அவர்களும் நட்பை இழந்து, அரட்டைகளை இழந்து, கடற்கரைகளை இழந்து, பூங்காக்களை இழந்து .....

யுத்தமற்ற நிமிர்ந்த வாழ்வு எவ்வளவு அழகானது..

18.6.07

ரஜினியைப் புறக்கணியுங்கள் - சில கேள்விகள்

வசந்தன் பின்னூட்டமொன்றில் சொன்னது போலவே, தமிழ் வலைப்பதிவுலகம் சிவாஜி நோயால் பாதிக்கப் பட்டுத் தான் இருக்கிறது. சிவாஜி என்ற சொல் அற்ற தமிழ்மண முகப்புப் படத்தை படம் பிடித்து தருபவருக்கு பரிசு அறிவிக்கலாம் என்ற அளவிற்கு இருக்கிறது நிலைமை. புத்தக மீமி, திரைப்பட மீமீ போன்ற சங்கிலித் தொடர் பதிவுகள் போல, அடுத்து நான் சிவாஜி பற்றி எழுத அழைக்கும் ஐந்து நபர்கள் இவர்கள் என்பது போன்ற தோற்றத்தில் சுற்று நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

சிவாஜி திரைப்படம் குறித்து விமர்சனங்கள், பார்வைகள் என்ற பதிவுகளினூடே சிவாஜி திரைப்படத்தினை புறக்கணிப்பதற்கான அழைப்புக்களும் பதிவுகளாக வந்து கொண்டிருந்தன. இவ்வாறான ஒரு புறக்கணிப்பிற்கான அழைப்புக்களிற் சில, வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களை நோக்கியும் எழுப்பப் பட்டிருந்தன.

சகல புறக்கணிப்புக் கோருகைகளிலும் ரஜினியின் முன்னாள் தமிழர் விரோதப் போக்கு, அவர் தமிழகத்தில் உழைத்து கர்நாடகத்தில் முதலிடல் போன்ற, சகல தமிழருக்கும் பொதுவான விடயங்களைத் தாண்டி முழுமையாக ஈழத்தமிழர்களை நோக்கியதான சில காரணங்கள் மேலதிகமாகச் சொல்லப் பட்டிருந்தன. அவற்றில் ஒரு சில மீதான எனது கேள்விகளை சொல்வதற்கு முன்னர் அவை யாவையென பார்க்கலாம்.

1. ரஜினி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லையென்பதாலும் அவர் ஈழத் தமிழருக்கு உதவிகள் செய்வதில்லையென்பதாலும் சிவாஜி புறக்கணிக்கப் பட வேண்டியது.

2. ரஜினியின் சிவாஜி திரைப்படத்திற்கு கொடுக்கும் பணத்தினை ஈழ விடுதலைப் போருக்கு அளித்தால் அது இன்னும் பல புதிய உள்நுழைவுகளை களத்திற்கு கொண்டு வரும்.

முதலில் ரஜினி எமக்கு உதவவில்லையென்பதை ஒரு தெளிவான பார்வையாக என்னால் நோக்க முடியவில்லை. ரஜினி ஏன் எமக்கு உதவ வேண்டும்? ரஜினி போலவே இன்னும் நிறைய தொழிலதிபர்கள் பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஒருவர் நிறைய பணம் சம்பாதித்தாரெனின் அவரிடம் இருந்து எமக்கும் தாவென எதிர்பார்ப்பது எந்த வகையான மனநிலையென எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவர் ரசிகர்களான எங்களிமிருந்து தான் பணம் பெறுகிறார் எங்களில்த் தான் தங்கியுள்ளார் என்பது மறு வளத்துப் பதிலானால் நடிப்பு என்பது ஒரு தொழிலெனக் கருதுவதனூடாக எமது பணத்திற்கான தனது தொழிலை அவர் செய்கிறார் என்று தானே அர்த்தம்.

எவராவது ஒருவர் எமக்கு ஆதரவாகப் பேசுவாரா என ஏங்கி எதிர்பார்க்குமளவிற்கும் யாராவது ஒருவர் எமக்கு உதவி செய்வாரா என இரந்து கெஞ்சும் நிலைக்கும் ஈழத் தமிழர்கள் போய்விட்டார்களா என்ன..?

இரண்டாவது காரணம் அர்த்தம் பொதிந்தது தான். தற்போதைய நெருக்கடிச் சூழ் நிலையில் இவ்வாறு வெளிச் செல்லும் பணம் ஒன்றிணைக்கப் பட்டால் அது ஈழத்தில் வாழும் மக்கள் சார்ந்த தேவைகளுக்கும், அல்லது போராட்டத் தேவைகளுக்கும் குறிப்பிடத் தக்கவொரு பெறுமதியாகவே இருக்கும்.

ஆனால் இந்த நோக்கத்திற்காக அமைந்த கோரிக்கையெனில் அது ஒட்டு மொத்த தமிழக சினிமாவையும் புறக்கணிக்கச் சொல்லுவதாகவே அமைந்திருக்க வேண்டும். விஜய் படங்களுக்கும், சீமான் படங்களுக்கும், திரிசா படங்களுக்கும் சனம் அள்ளிக் கொடுத்த போது எங்கள் பணம் வெளிச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டிய இத்தகைய கோரிக்கைகள், இப்போது ரஜினிக்கு மட்டும் வெளிவருவதன் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒருவேளை விஜய் நம்ம ஊரு மருமகன் என்பதனாலும், சீமான் நமக்கு ஆதரவானவர் என்பதாலும் அவற்றைப் புறக்கணியாது பார்ப்பதற்கான நியாயப் பாடுகள் இருக்கக் கூடும் :)) சீமானின் இயக்கத்தில் வெளியான தம்பி திரைப்படம், தம்பி பிரபாகரனின் வாழ்க்கைத் திரைப்படம் என்ற மாயை ஒன்று தோற்றுவிக்கப் பட்டு பரவலாக வெளிநாடுகளில் ஓடியது என்பது இதன் காரணமாயும் இருக்கலாம். (நமக்கு ஆதரவானவர்களின் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று யாராவது சொல்லும் போது எனக்கு மடித்துக் கட்டிய வேட்டியுடன் வீராசாமி தான் வந்து பயமுறுத்துகிறார். என்ன கொடுமை சாமி இது.. )

இவையெல்லாம் தவிர தமிழகத் திரைப் படங்கள் ஈழத் தமிழர்களினால்த்தான் இலாபம் சம்பாதிக்கின்றது என்ற பெரும் பனிக் கட்டியொன்றையும் நம்மில் சிலர் சுமக்கின்றார்கள். இது குறித்தும் நான் மேற்சொன்ன எனது கேள்விகள் தொடர்பாகவும் பதிவர் ரவிசங்கருடனான உரையாடல் ஒன்றை இங்கே கேளுங்கள்.

இவையெல்லாவற்றையும் விட நல்ல படங்களை ஆதரியுங்கள் மற்றவற்றைப் புறக்கணியுங்கள் என கோரிக்கை விடுக்கலாம். ஆனால் என்ன.. சகல படங்களுமே புறக்கணிக்கப் பட்டுப் போகும். :(


17.6.07

ஒபரேசன் பூமாலை - அந்த நாள் நினைவுகள்

அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு.

1987 யூன் 4 இந்தியா யாழ் குடாநாட்டின் பகுதிகள் மீது உணவுப் பொட்டலங்களை இட்டு இப்போது 20 வருடங்களாகி விட்டன. ஒபரேசன் பூமாலை என்ற இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய இராணுவத் தரப்புக்கள், அப்போதைய இந்திய பத்திரிகைகள் என்ன சொல்லின?, அது பற்றி தகவல்கள் என்ன என்பன குறித்து, இன்னுமொரு தேவைக்காக தகவல்கள் திரட்டியபோது bharat-rakshak என்னும் இந்திய இராணுவத்தின் இணையத்தளம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் தமிழ் வடிவம் இது.

இக் கட்டுரையின் இடையில் வரும் இப்பந்தியினை வாசித்து விட்டு முழுவதையும் படியுங்கள்.

கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.


நாள்: யூன் 3 1987

இடம்: இந்திய விமானப் படையின் மிராஜ் ரக விமானங்கள் தரித்து நின்ற, மிக முக்கிய தளங்களில் ஒன்றான க்வாலியருக்கு (Gwalior) அருகில் மகாராஜ்பூர் விமானப் படை நிலையம்.
நேரம்: காலை 5.30,

No 7 படைத்தொகுதியின் (The Battle Axes) கட்டளையிடும் அதிகாரி அஜித் பவ்னானி (Wing Commander Ajit Bhavnani) அந்த மிக முக்கிய செய்தியை பெற்றுக் கொண்ட போது வெளிச்சம் இன்னும் முற்றாகப் பரவியிருக்கவில்லை. செய்தியில் தேவையான நபர்களுடன் சில விமானங்களை நாட்டின் தெற்கே, பெங்களூரின் ஹால் (Hal) விமான நிலையத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லும் படி அறிவுறுத்தப் பட்டிருந்தது.
மதியத்திற்கு சற்று முன்னர் 11.30க்கு பவ்னானி தன் மிராஜ் 2000 இலும், கூடவே 5 சிறப்பு அனுபவம் பெற்ற விமானிகள் வேறு விமானங்களிலும் பறப்பை ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு யெலஹங்கா (Yelahanka) விமானத் தளத்தில் தரையிறங்கும் படி அறிவுறுத்தப் பட்டது.

இரவு 9 மணியளவில் விமானிகள் தமது நடவடிக்கைக்கான அறிவுறுத்லை பெறும் வரையில் தமக்கான செயற்திட்ட விபரமெதனையும் பெற்றிருக்கவில்லை. இப்போது சொல்லப்பட்ட அறிவுறுத்தலின் படி அவர்கள் இலங்கையின் வடபகுதி மக்களுக்கான உணவு மற்றும் உதவிப் பொருட்களை வானிலிருந்து விநியோகிக்க உள்ள An-32 விமானத்திற்கு துணையாக செல்ல இருக்கின்றனர்.

இதற்கிடையில் நாட்டின் வடக்கில் ஆக்ராவில் (Agra ) PTS (Paratroopers Training School) தளத்தில் ஐந்து An - 32 விமானங்களில் உதவிப் பொருட்களை நிரப்பும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். பொதுவாக இங்கு பரா றெஜிமென்டில் (Para regiment) உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு பரசூட் பயிற்சியே வழங்கப் படுகின்ற போதும், இன்று காலை அஜித் பவ்னானி குழுவினர் பெற்றதைப் போன்ற எதிர்பாரா அறிவுறுத்தலுக்கமைய, அவர்கள் உதவிப் பொருட்களையும் முடிந்தளவான மரக்கறி வகைகளையும் அட்டைப்பெட்டிகளிலும் பொலீத்தீன் பைகளிலும் அடைத்து அவற்றை பரசூட்டுகளுடன் இணைத்துக் கொண்டிருந்தார்கள்.

1971 போருக்குப் பின்னர் முதற் தடவையாக இன்னொரு நாட்டின் வான் பரப்பினுள் நுழைந்து நடாத்த இருந்த இந் நடவடிக்கைக்கு ஓபரேசன் பூமாலை என பெயரிடப்பட்டது.

கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.

கடந்த மே மாதம் இலங்கை அரசுக்கு அறிவிக்கப் பட்டு கப்பல் மூலமாக மனிதாபிமான நோக்கில் எடுத்துச் செல்லப்பட்ட 1000 தொன்களுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் தடுத்தி நிறுத்தி திருப்பியனுப் பட்டன. இந்நிகழ்வும், அதனை கொழும்பு அரசு தனக்கான வெற்றியெனக் கொண்டாடிய விதமும், இந்திய இரசு இந்த விடயத்தை இலகுவில் விட்டுவிடப் போவதில்லையென்பதனைத் தெளிவாக்கின. தற்போதைய ஆகாய மார்க்கமான உணவு விநியோகத்தின் கால்கோலாகவும் அது அமைந்தது.

யூன் 4

ஆக்ராவில் உதவிப் பொருட்களை விமானத்தில் ஏற்றும் பணியாளர்கள் இராணுவ வீரர்களின் உதவியுடன் அதனை முடித்தனர். பொருட்களுடன் தயாராய் நின்ற An - 32 விமானம், பகல் வெளிச்சம் ஏற்பட்ட பின்னர் சுமார் 8 மணியளவில் பெங்களூரை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. விமானத் தலைமையகத்திலிருந்து பெங்களூரிற்கு வந்திருந்த எயர் வைஸ் மார்ஸல் டென்சில் கீலொர் ( Air vice marshal Denzil Keelor) இறுதி நேர அறிவுறுத்தல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மதியம் தாண்டிய 3 மணி, புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் வெளிவிவகார அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார். நான்கு மணியளவில் இந்தியாவின் ஏதோ ஒரு இடத்திலிருந்து புறப்படும் விமானங்கள் யாழ்ப்பாணப் பகுதிகளில் ஆகாய மார்க்கமான உணவு விநியோகத்தில் ஈடுபடும் என்ற செய்தி திரு நட்வார் சிங் அவர்களினால் இலங்கைத் தூதுவருக்கு அங்கு வைத்துச் சொல்லப்பட்டது. கூடவே இந் நடவடிக்கை முழுமையாக செய்து முடிக்கப் படும் என தாம் எதிர் பார்ப்பதாகவும் ஏதாவது எதிர் நடவடிக்கைகள் இலங்கை இராணுவ தரப்பில் இருந்து வெளிப்பட்டால், அவை மிராஜ் 2000 விமானங்கள் மூலம் இராணுவ வழியில் எதிர் கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கப் பட்டது.

ஆயினும் அந்த எச்சரிக்கை தேவையற்றதாக இருந்தது. இலங்கை விமானப் படை வசம் அப்போதிருந்த சியாமசெட்டி ரக விமானங்களால் இந்திய விமானங்களை வானில் வைத்து எதிர் கொள்வதென்பது சாத்தியமற்றதாயிருந்தது. அப்படி ஏதாவது எதிர் நடவடிக்கைகள் இலங்கைத் தரப்பிலிருந்து வருமானால் அது நிலத்திலிருந்து வரும் சூடுகளாகவே இருக்க முடியும்.

அதே நேரத்தில் பெங்களுரில் இறுதிக் கட்ட சோதனைகள் முடிந்திருந்தன. உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர்களையும் An-32 விமானத்தில் அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டு 35 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு குழுவில் 7 நபர்களாக ஐந்து விமானங்களிலும் அவர்கள் ஏற்றப் பட்டனர்.

மாலை 3.55

முதலாவது An-32 விமானம் கப்டன் சுந்தர் மற்றும் ஸ்வாரப் ( Flt Lt SR Swarup ) ஆகியோரின் வழி நடத்தலில் மேலெழுந்தது.யாழ்ப்பாணம் சென்று மீளும் 900 Km தூரத்தைக் கொண்ட ஒரு சுற்றுப் பறப்பாக இது அமையும். இதற்கிடையில் நான்கு மிராஜ் விமானங்கள் பவ்னானி தலைமையில் பறப்பில் இருந்தன. இலங்கை விமானப் படைகள், வான் எதிர்ப்பில் ஈடுபட்டால் பயன்படுத்துவதற்காக இரண்டு மத்ரா மஜிக் II(Matra Magic) வானிலிருந்து வானுக்கான ஏவுகணைகள் அவற்றில் பொருத்தப் பட்டிருந்தன. ஆயினும் அவை தேவைப் படவில்லை.

பாக்கு நீரிணையை கடந்து முடித்த An-32 விமானங்களிலிருந்து 1000 அடி மேலே மிராஜ் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டன. ஐந்தாவது மிராஜ் இந்தியக் கரையோரமாக வான் அலைத் தொடர்புக்கான இணைப்புக்காக பறந்து கொண்டிருந்தது. தவிர இரண்டு An - 32 விமானங்களும் பெங்களூருக்கான றேடியோத் தொடர்பின் இடை இணைப்பிற்காக பறந்தன.

இந் நடவடிக்கையின் வழி நடத்தல் அதிகாரி கப்டன் சுந்தர் 4.47 அளவில் கொழும்பிற்கான றேடியோத் தொடர்பினை ஏற்படுத்த முயற்சித்தார். அது கை கூடவில்லையாயினும் ஒன்றினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது கொழும்பு ATC (Air-traffic control) றேடியோத் தொடர்புகளைக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆயினும் பதிலெதனையும் தரவில்லை.

நேரம் மாலை 4.50

விமானங்கள் யாழ் குடாநாட்டின் வான் பரப்பைத் தொட்டன. An-32 தனது பறப்பின் உயரத்தை 1500 அடி வரை குறைத்தது. கட்டளைக்கு ஏற்ப கதவுகள் திறக்கப் பட்டு உதவிப் பொருட்கள் கீழே போடப்பட்டன. வெள்ளை நிற பரசூட்கள் உடனுக்குடன் விரிந்து தீர்மானிக்கப்பட்ட பகுதிகளில் சென்று இறங்கின.

நடவடிக்கை பூரணப்படுத்தப்பட்டது. விமானங்கள் வடபகுதியில் அமைந்த இலங்கை விமானப் படைத் தளமான பலாலிக்குச் சமீபமாக பறப்பில் ஈடுபட நேர்ந்தாலும் இலங்கை இராணுவப் படைகளிடமிருந்து நிலத்திலிருந்தோ வானிலிருந்தோ எதிர்ப்பெதுவும் வரவில்லை.

மாலை 6.13 அளவில் விமானங்கள் பெங்களூரில் சென்று தரையிறங்கின. விமான தளத்தில் விமானிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.பிரதமர் அலுவலகத்திலிருந்து வாழ்த்து செய்திகள் அனுப்பப் பட்டன.

இலங்கை இந்நடவடிக்கையை அரச மற்றும் இராணுவ வன்முறைச் செயல் என கண்டித்தது. அமெரிக்கா கவலை மட்டும் தெரிவித்தது. மேலதிக கருத்துக்களைச் சொல்ல மறுத்தது.

விநியோகிக்கப் பட்ட உதவிப் பொருட்டகள் 23 தொன்களை விட அதிகமில்லையென்பதோடு முழுமையானவையுமல்ல. ஆனால் வலுப்பெறும் சிவில் யுத்தத்தினை இந்தியா ஒரு போதும் ஒரு பார்வையாளராக இருந்து பார்க்காது என்ற செய்தியினை இலங்கை அரசுக்கு இந்த நடவடிக்கை சொன்னது.

If it was against the interests of the ethnic Tamil minorities, then it would be against Indian interests as well as there would be corresponding repercussions in its own indigenous tamil population.

அண்மைய செய்தி - யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்காக பழ நெடுமாறன் தலைமையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது.
Sources: www.
bharat-rakshak.com

நட்சத்திர வார அழைப்பு

அன்புடையீர்

நிகழும் மங்களகரமான சர்வசித்து வருடம் ஆனித் திங்கள் 18ம் நாள் முதல் 25ம் நாள் வரையிலான அக்னி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுப காலப் பகுதியான ஒரு வாரத்திற்கு சயந்தனாகிய என்னை இறைவன் திருவருள் துணை கொண்டு நட்சத்திர பதிவராய் நியமிக்க பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதரராய் சாரல் பக்கத்திற்கு வருகை தந்து படித்து கேட்டு பார்த்து வாரத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
சயந்தன்

விழா நடைபெறும் இடம்
www.sayanthan.blogspot.com

பிற்குறிப்பு: மொய் ஏற்றுக் கொள்ளப்படும். ஏற்கனவே வாங்கிய மொய்களைத் திருப்பித் தருபவர்கள் தவிர புதிதாகத் தர விரும்புகிறவர்களும் தரலாம். அவை பின்னர் தவணை முறையில் திருப்பிச் செலுத்தப் படும்.

14.6.07

Cherry பழம் போல் சிவந்த..

சிறு வயதுகளில் கடைகளுக்குச் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடும் போது அதன் மேலே தனித்த இனிப்புடைய சிவந்த பழமொன்றை வைத்திருப்பார்கள். சில கேக் வகைகளிலும் அந்தப் பழம் இருப்பதுண்டு. அவை cherry பழங்கள் என தெரியும். இங்கே கீழ்வரும் பழங்களும் cherry (ஜெர்மன் மொழியில் Kirshe)எனப்படுகின்றன. சிவப்பாகிப் பின்னர் சாப்பிடக் கூடிய நிலையில் ஒரு வித கருஞ் சிவப்பு நிறத்திற்கு வருகின்றன. சுவையில் கூட ஊரின் நாவற் பழத்தை நினைவு படுத்தும் விதத்தில் கொஞ்சம் புளிப்பாக இருக்கின்றன.

உறுதிப் படுத்தப் படாத தகவல்களின் படி.. (களத்தில நின்றால் உறுதிப் படுத்திச் சொல்லலாம் :))இரண்டும் ஒரே வகைதான் எனவும் இப் பழங்கள் உள் விதையெடுக்கப்பட்டு இனிப்பில் பதப்படுத்தப் பட்ட பின்னர் மேற் சொன்ன வகைப் பழமாகிறது எனவும் சொன்னார்கள். இது பற்றி ஏதும் தெரிந்தால் சொல்லுங்களேன்..

இவை வீட்டு சூழலில் விளைந்தவை.