20.4.07

ஐந்து பதிவர்களுடன் ஒரே நேரத்தில் உரையாடல்

நடைமுறையில் மிகச் சிரமமான ஒலிப்பதிவொன்றை, சும்மா பரீட்சார்த்த முயற்சியாகச் செய்து பார்த்தோம். வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டு, 5 பதிவர்கள் கலந்து கொள்வதென்பதும், அது ஒலிப்பதிவு செய்யப்படுவதென்பதும் நுட்ப ரீதியில் சாதாரண விடயம் (சிஞ்சா மனுசி கலையகத்திற்கு). ஆனால் நடைமுறையில் அந்த உரையாடல் ஒழுங்கமைக்கப் படுவது கடினமானது.

இருவர் பேசுகின்ற போது ஒருவர் குறிக்கிடுவதென்பது சமாளிக்கக் கூடியது. ஆனால், அதுவே ஐவராகும் போது இறுதியில் அடிபிடிதான் எஞ்சும் எனத் தெரிந்தும் இதையும் செய்து தான் பார்த்து விடுவோமே என்ற ஒரு ஆர்வத்தில் இது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிப்பதிவுகள் இடையூறு இல்லாத, இரைச்சல் இல்லாத, வானொலித் தரத்தில் அமைய வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. அவ்வாறில்லாமல் வெறும் இரைச்சல்களோடும், விக்கி விக்கியும், ஸ்.. என்ற சத்தங்களோடும் ஒலிப்பதிவு செய்யப்பட்டால் அது தொடர்ந்து கேட்கின்ற ஆர்வத்தைக் கொடுக்காது என்று நாமறிவோம்.

இந்த உரையாடல் ஈழத்தின் போர்ச் சூழலில் வெளியான திரைப்படங்கள் குறித்துப் பேசுகின்றது. நமது இளைய நாட்களில், நாம் வாழ்ந்த பிரதேசங்களில் தமிழக சினிமா தடைக்கும், தணிக்கைக்கும் உட்பட்டிருந்த பொழுதுகளில் ஈழத்தில் இருந்து வெளியான திரைப்படங்கள் மீது எமக்கு இயல்பாகவே ஈடுபாடும் ஆர்வமும் இருந்தது. அது குறித்து பேசும் வசந்தன், சிநேகிதி, விஜெ சந்திரன், சயந்தன் இவர்களோடு மலைநாடானும் இணைந்து கொண்டிருக்கிறார். (சோமிதரன் கேரளாவில் படப்பிடிப்புக்களில் இருப்பதனால் அறுவராகி அறுவாராகாமல் தப்பித்தோம்;)

இந்த ஒலிப்பதிவு கடந்த சித்திரைப் பொங்கலுக்கு வர இருந்தது. ஆயினும் இன்று வரை அதன் தொகுப்பு வேலைகள் முடியாத படியால்.. இப்படி ஒன்றைச் செய்தோமென, பிலிம் காட்டவாவது ஒரு முன்னோட்டமாக சில பகுதிகளை வெளியிடுகிறோம். (சிநேகிதியின் உரையாடல் தெளிவின்மையாக இருப்பதனை சி.ம கலையகம் கவலையுடன் உணர்ந்து கொள்கிறது:(


16.4.07

ஒரு பூனையின் வாக்குமூலம் - வீடியோ

தமிழ் இணையச் சூழலில் வீடியோப் பதிவுகள் எவ்வளவு தூரம் பரவல்த் தன்மை கொண்டதென்பது கேள்விக்குரிய ஒன்றாயினும், Google विडो, You tube போன்றவற்றில் கொட்டிக் கிடக்கும் தமிழ் ஒளித் தொகுப்புக்கள் ஓரளவுக்கு அவற்றின் பரவல்த்தன்மையை எடுத்துச் சொல்கின்றன

வீட்டுப் பூனையை வைத்து இரு மாதங்களுக்கு முன்பொரு தடவை செல்லக் கடிகளும் சின்னக் கீறல்களும் என ஒரு ஒளிப்படப் பதிவினை இட்டபோது, இவ்வாறே ஒரு வீடியோ பதிவிட்டால் என்ன எனத் தோன்ற அடுத்த வாரங்களிலேயே பூனையை வைத்து படப்பிடிப்புக்களை மேற்கொண்டிருந்தேன்.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பு, வீடியோ தொகுப்பினை அறிந்து கொண்ட காலங்களில் அதிலிருந்த ஆர்வம் பின்னர் அற்றுப் போனதெனும் நிலை வரை குறைந்து விட்டிருந்தது. அதனால் எடுத்த ஒளிக் காட்சிகளைத் தொகுத்தல், குரல் கொடுத்தல் என அலுப்படித்த வேலைகளில் ஈடுபடாமலே விட்டுவிட்டேன்.

மீண்டும் இப்போ பதிவுலகில் நான் மிச்சம் வைத்ததாக இருக்கக் கூடாது என்ற நினைப்பில் அவற்றைத் தூசி தட்டியிருக்கிறேன் கொஞ்சம் மினக்கெட்டால் இன்னும் நன்றாகச் செய்திருக்க முடியும்

பிற்குறிப்பு: குளோஸ் அப் காட்சிகளில் பூனை மிரண்டு விடாமல் இருக்க நான் வீடியோ எடுப்பதனைத் தவிர்த்து வேஜினியாவிடம் கொடுத்திருந்தேன்। போஸ் கொடுக்கும் காட்சிகளில் பூனையும் ஒத்துழைப்புத் தந்தது. படத்தை தொகுத்து விட்டு பின்னர் ஓட விட்டு, குரலைப் பதிந்தேன். (இதனையும் சிறப்பாக செய்திருக்கலாம்)


10.4.07

இந்திய அரசியலில் ஈழம் பற்றியொரு உரையாடல்

ஈழச் சூழல் பற்றி ஈழத்தவரல்லாத ஒரு தமிழருடன் விரிவாகப் பேசியதில்லை நான். (மெல்பேணில் இருந்த ஆரம்ப காலத்தில் அடுத்த அறையில் அகப்பட்ட கிழக்குத் தீமோர் நண்பர் ஒருவரோடு சற்று அதிகமாகவே கதைத்திருந்த போதும் இப்போது நினைத்துப் பார்த்தால் நான் தனியே விடுதலைப் புலிகளின் வெற்றிகளை மட்டும் அவருக்குப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறேனே தவிர ஈழப்போரின் இன்னொரு அங்கமாகிய மக்கள் பற்றி அவருக்கு எதையும் எடுத்துச் சொல்லவில்லை.(: )

வலைப்பதிவுலகில் அறிமுகமான வரவனையானுடன், அண்மையில் இந்திய சூழலில் ஈழப் பிரச்சனை பற்றி நெடுநேரம் பேசியிருந்தேன். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட அந்த உரையாடலை அவ்வப் போது வெட்டித் தொகுப்பதுவும் பின்னர்.., அது அவருக்குத் தேவையற்ற சிக்கல்களைக் கொண்டு வரலாம் என, அவற்றில் மீண்டும் வெட்டுவதுமாகத் தொடர்ந்து, எஞ்சியவற்றை வெளியிட்டு விடலாம் என்கிற நிலைக்கு இப்போதுள்ள பதிவு வந்துள்ளது.

பேச்சினூடே 95 இல் யாழ்ப்பாண இடம்பெயர்வு நடந்த போது தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்து செய்யப்பட்டது உட்பட பலதடவை சிறை சென்றதை வரவனையான் சொல்லியிருந்தார்.

ஒருவேளை இந்தியாவின் ஜனநாயகச் சூழல் இலங்கையின் ஜனநாயகச் சூழலைவிட ( அப்படியொன்று இருந்தால்) அதிகம் மேன்பட்டதாக இருக்கக் கூடும். ஆயினும் இலங்கைச் சூழலில் எவ்வாறான பேச்செல்லாம் உயிரைப் போக்கவோ, சித்திரவதையை அனுபவிக்கவோ வழிவகுக்கும் என்ற அளவு கோலில் வெட்டித் தொகுத்த இப்பதிவு வேறுபட்ட அனுபவத்தை எனக்குத் தந்தது.


8.4.07

வரவனையான்- சோமி - சயந்தன், வலையுரையாடல்

வலைப் பதிவுலகில் பின்னூட்டமிடும் வசதியென்பது வேறெந்த ஊடகத்திற்கும் கிடைத்திராத பெரும் வாய்ப்புக்களில் ஒன்று. பதிவாளர் முடித்த பதிவு, அதனை வாசிப்பவரிடத்தில் ஆரம்பிக்கும் அவரது சிந்தனையின் தொடர்ச்சியை, தொடர்ந்தும் இறுதி வரை கொண்டு செல்ல உதவும் பின்னூட்ட வசதிகள் சரியான முறையில் தமிழ் வலைப்பதிவுச் சூழலில் பயன்படுத்தப் படுகிறதா..?

பெரும்பாலும் பாராட்டுக்களாகவும் வாழ்த்துக்களாகவும் அல்லது வசைவுகளாகவும் அமைகின்ற பின்னூட்டங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் படுகின்றது..?

ஒருவருடைய எண்ணப் பதிவுகளை வெளியிட, இன்னுமொருவருடைய அனுமதியை வேண்டி நிற்கும் ஊடகச் சூழலில், பெரும் கட்டுடைப்பாக அவரவர்கள் தமது மனப்பதிவுகளை சுதந்திரமாகவும், திறந்த நிலையிலும் வெளியிடும் வாய்ப்பினை வலைப் பதிவு தந்திருக்கிறது. இந்நிலையில் எழுதப் படும் பதிவுகள் ஒருவருடைய மன வெளிப்பாட்டின் பதிவுகளாக அமைவது தவிர்க்க முடியாததாகிற போது, அவை கண்டிப்பாக ஏதாவது மாற்றத்திற்கான, அல்லது வாசகரை ஏதோவொரு விதத்தில் ஒழுங்கமைக்கும் படியாக அமைவது கடைப் பிடிக்கப் படக் கூடியதா..?

இவைபற்றிய கலைந்துரையாடல் இது.



குறிப்பு: இக் கலந்துரையாடலில் சயந்தன், சோமி, வரவனையான் தவிர வேறு சிலரும் குரல் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி ..(அப்பாடா முதல் நன்றி எங்களுடையது.)

6.4.07

மொக்கை ஒன்று குறித்த விளம்பரம்

வலைப் பதிவில், வரப்போகின்ற ஒரு பதிவு குறித்து, இது வரை முன்கூட்டியே யாரேனும் விளம்பரம் கொடுத்திருப்பார்களா எள தெரியவில்லை. இல்லையெனின் அதனையும் முதற்செய்யும் பெருமிதத்தோடு..

இதுவரை உரையாடல்களில், இருவரை மட்டுமே இணைத்திருந்த நிலை மாற்றி மூன்று நபர்களோடு மொக்கையை ஆரம்பிக்கிறோம். வரவனையானுடனான இவ்வுரையாடலில் பல்வேறு பட்ட அவருடைய பார்வைகளை அறிந்து கொள்ள முடிந்தது. வலைப்பதிவுச் சூழல், பின்னூட்டங்களின் போக்கு, நன்றிப் பின்னூட்டங்களின் நாடகத் தன்மை, சமூக நிலையும் மாற்றங்களும் இவற்றோடு, வேறுபட்ட பிரதேசச் சூழல்களில் பேசப்படும் வட்டாரத் தமிழ் என பல தளங்களில் இந்த உரையாடல் விரிந்தது.

முழுமையாக வெட்டிக் கொத்தித் தொகுக்கத் தேவைப்படும் கால இடைவெளி சற்று அதிகமாக இருக்கும். ஆயினும் நாங்க இப்பிடிச் செய்தோமே என ஒரு பிலிம் காட்டும் பதிவு இது. அங்கங்கே வெட்டியெடுத்த துண்டுகளை இணைத்திருக்கிறேன்.

வலைப்பதிவுச் சூழல், பின்னூட்டக் கலாசாரம் என்பது குறித்து கடுமையான வாதப் பிரதி வாதங்கள் நடந்திருக்கிறது. ஆகவே கேட்கத் தவறாதீர்கள்.


5.4.07

அது அடுத்தவன் நெருப்பு!

காலக் கரைதலில் கரைந்து போவது குறித்து அவனுக்கு கவலையெதுவும் இல்லை.
நாளையோ அல்லது பின்னோ அவன் காணாமல் போகலாம்.
ஆயினும் அது வழமையான காணமல் போதல் இல்லை என்பது குறித்து அவன் தெளிவுற்றிருந்தான்.
சன வெள்ளத்தில் அவன் தனித் தீவாயிருந்தான்.
நண்பர்கள் நினைவில் வந்து போனார்கள். நண்பர்களின் கல்லறைகள் வந்து போயின. அவர்களோடு அவைகளோடு பேசினான்.
தனக்கான கல்லறை யார் மனதிலும் வந்து போகாதென்பது அவனுக்குத் தெரியும்.
ஒரு நாளில்
தயாரானான்
புறப்பட்டுப்..
போனான்.. திரும்பவில்லை
+ + +

தடைகள் தகர்த்தெறியப்பட்டன என இவன் தலையங்கம் எழுதினான்.
அக்கு வேறு ஆணி வேராக ஆராய்ந்தான்.
முக்கிய திருப்பங்களை குறித்தான்.
இறந்த நிகழ் மற்றும் எதிர்காலங்களில் இருந்து தரவுகள் சேர்த்தான்.
எழுத்தெங்கும் தன் இராணுவ மற்றும் அரசியல் ஆய்வுத்திறன் வியாப்பித்திருக்க விரும்பினான்.
முடித்து அனுப்பி வந்து சேரும் வாழ்த்து மற்றும் பாராட்டுக்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். -21/07/2002

முதல்ப் பின்னூட்டம் இவ்வாறு ஆரம்பித்தது.
மிக நல்ல ஆய்வு. மிகத் திறமையாக ஆய்வு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இரண்டாவது பின்னூட்டம் இவ்வாறு ஆரம்பித்தது.
உங்கள் ஆய்வு புதிய தகவல்களைத் தந்தது.. உங்களுக்குள் இத்தனை திறமைகளா.. பாராட்டுக்கள்

இவனுக்கு மனது குளிர்ந்தது. இப்போது நன்றிப் பின்னூட்டங்கள் எழுத ஆரம்பித்தான்.
பூச்சியத்துக்கு கீழான குளிரில் உடலும் குளிர்ந்தது. விறகெடுத்து மூட்டி வரும் நெருப்பில் கதகதப்பை உணர்ந்தான்.

அந்த விறகுகள் இவனுடையது இல்லை. - 05/04/2007

4.4.07

கருத்து உருவாக்கமும் ஈழ ஊடகங்களும் - ஒலிப்பத்தி

ஈழத் தமிழ்ச் சூழலில் ஊடகங்கள், சர்வதேச மக்கள் மத்தியிலும், சர்வதேசத்தின் முடிவெடுக்கும் அதிகார மையங்கள் மத்தியிலும், எவ்வளவு தூரம் கருத்துக்களை உருவாக்கும் ஊடகங்களாக செயற்படுகின்றன என்பது குறித்த ஒலிப்பத்தி இது.

புலம் பெயர்ந்த சூழலில், ஈழ நிலை குறித்து, வெளி மக்களுக்கு மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்கக் கூடிய வாய்ப்புக்களும், வசதிகளும் இருந்த போதும், அது பற்றி கிஞ்சித்தும் சிந்தியாது இணையம், பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சியென சகல ஊடகப் பரப்பிலும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் நம் மீதான சுய பார்வை இது.


2.4.07

றீகல் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறீர்களா..?

சாரல் பதிவின் தலைப்பில் இருக்கின்ற படம், யாழ்ப்பாணத்தில் இருந்த சினிமாத் திரையரங்குகளில் ஒன்றான றீகல் தியேட்டரின் முன்தோற்றம்.(அதற்காக பின்தோற்றமெல்லாம் இருக்குமென எதிர்பார்க்க முடியாது. முன்தோற்றம் மட்டும் தான்.) யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் முனியப்பர் கோவிலடிச் சூழலில் அமைந்திருந்த இத் திரையரங்கு, கோட்டைச் சமர்காலத்தின் அத்தனை வடுக்களையும் தாங்கி, இழந்தவை போக மிகுதியாக உள்ள ஒற்றை முன் சுவரோடு, ஏதோ இருந்திட்டு போகிறேன் என்பது போல காட்சியளிக்கிறது.

95 இன் ஒரு காலத்தில், ஒக்ரோபர் இடப்பெயர்வுக்கு சில காலமே முன்பாக, கோட்டையை அண்டிய பகுதிகளில் பதுங்கு குழிகள் வெட்டுவதற்காக, பொடிப்பயல்களாக இருந்த நாமும் போயிருந்தோம். போயிருந்தது மட்டும் தான், மற்றும் படி பராக்குத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். அதிலும் மதியம் புரியாணி தரப்படும் எனச் சொன்னதனால் மதியம் வரை காலங் கடத்த வேண்டிய புறச் சூழ்நிலை வேறு. (கிடைத்தது பாணும் பருப்பும் தான்:()

அப்போது தான் விரிவாக வீரசிங்கம் மண்டபம், றீகல் தியேட்டர், யாழ் நூல்நிலையம் என அச் சூழலில் அமைந்த பகுதிகளை சுற்ற முடிந்தது.

றீகல் தியேட்டரின் முன் சுவரில், 90 இல் (என நினைக்கிறேன்) ஓடிய இறுதித் திரைப்படத்தின் சுவரொட்டி ஒட்டப் பட்டிருந்தது. அது ஒரு ஆங்கிலப் படம். அது தவிர அது ஒரு வயது வந்தோருக்கான திரைப்படம் என்பது கூடுதல் செய்தி.

எடேய்.. இந்த தியேட்டரில இப்பிடிப் படமெல்லாம் போட்டிருக்கிறாங்களடா என நாம் நண்பர்களுடன் பேசிக் கொண்டோம். நம்மில் சிலருக்கு பெருமூச்சுக்களும் வந்தன.

பிற்காலங்களின் அறிதலில் இத் திரையரங்கில் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படங்களே திரையிடப்பட்டன எனவும் அக்கால இளைஞர்கள் தூர இடங்களில் இருந்து கூட இரவுக் காட்சிகளுக்கு வந்து சென்றதாயும் கேள்விப் பட்டேன்.

யாராவது இருக்கிறீங்களா.. :))

(சமாதானத்திற்கான காலத்தில் இச்சூழலை அண்டிய யாழ் நூல் நிலையம் உட்பட பல திருத்தப்பட்டிருந்தன. என் தனிக் கருத்தின் படி 81 இல் சிங்கள மேலாதிக்கத்தால் கொளுத்தி எரிக்கப்பட்டு கரிய கட்டடமாகக் கிடந்த தெற்காசியாவின் தலை சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகம் அவ்வாறே எரிந்த நிலையில் பேணப்பட பிறிதொரு இடத்தில் நூல் நிலையத்தை அமைத்திருக்கலாம்.)