13.4.05

வருசப்பிறப்பு - ஒரு கலவைப் பதிவு

வருசப்பிறப்பு தமிழர்களுடையது இல்லை என சொல்லியாயிற்று. நல்லது. அது யாருக்கு வருடப்பிறப்பாக இருக்கிறதோ, எவரெல்லாம் (தமிழர்களேயாயினும்) அதனைத் தம் வருடப்பிறப்பாக கொள்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் எனது வாழ்த்துக்கள்.

சென்ற முறை இந்த வருடப்பிறப்பு நாள், நான் யாழ்ப்பாணத்தில் ஊரில் நின்றேன். சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களை ஊக்குவிக்கும் பரிசில் வழங்கும் நிகழ்வு ஒன்று, அன்று என் ஊரில் நிகழ்ந்தது. தவிர சில நிகழ்ச்சிகளும் நடந்தன. இறுதியில் நடந்தது இசை நிகழ்வு ஒன்று.

நீண்ட காலத்திற்கு பிறகு ஊரில் நான் மேடையேறினேன். ம். அந்த இசை நிகழ்வில் நான் அறிவிப்பாளனாக இருந்தேன்.

மேடையில் நின்று பார்த்தபோது அதிர்ச்சியாய் இருந்தது. 95 க்கு முதல் ஒரு நிகழ்வென்றால் வரும் சனக்கூட்டத்தின் பத்தில் ஒரு பங்கினரும் வந்திருக்கவில்லை. காரணம் தொலைக்காட்சி. அதிலும் அன்று சன் டிவியில் Boys படம் போட்டிருந்தார்கள்.

பெரிதாக நிகழ்ச்சியை நீட்டிப்பதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. வந்திருக்கின்ற பத்துப் பதினைந்து பேருக்காக இங்கே பாடிக்கொண்டிருப்பதிலும் பார்க்க வீட்டுக்கு போனால் Boys படம் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன்.

நிகழ்வு முடியும் நேரத்தில்தான் அந்த ஆசை எனக்கு வந்தது. ம்..

என்னாலும் பாட முடியுமா என்பதை அங்கே சோதிக்கலாமா என்று நினைத்தேன்.

இறுதிப்பாடல்.. 'இதைப் பாட நான் அழைப்பது' என்ற பீடிகையுடன் என்னை நானே அழைத்து பாடத் தொடங்கினேன்.

'சொல்லத் தான் நினைக்கிறேன்.. சொல்லாமல் தவிக்கிறேன்..' என்ற பாடல் அது. (நிறைய நாளுக்குப் பின்னர் ஊருக்கு வந்த சயந்தன் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் இந்தப் பாடலைப் பாடுகிறான் என எனது அத்தான் நினைத்தாராம்.)

என்னால் பாட முடியவேயில்லை. அதுவும் இசையுடன் இணைந்து பாட முடியவேயில்லை. இசை மெதுவாகப் போகின்ற நேரங்களில் நான் வேகமாக பாடினேன். 'அடடா இசை மெதுவாகப் போகின்றதே' என உணர்ந்து நான் பாடலின் வேகம் குறைக்க இசை வேகமானது.

பாடலுக்கு இடையிலான ஒரு இசை ஒலிக்கும் நேரம். பிரதான கீபோட் வாசித்துக் கொண்டிருந்தவர் என்னை கண்களால் அழைத்து காதுக்குள் 'மெதுவாக என்னோடை சேர்ந்து வாரும்.. என்னோடை வாரும்..' என்றார்.

'இவர் ஏன் என்னை தன்னோடு வரச் சொல்கிறார்' என யோசித்தேன். 'ஒரு வேளை நிகழ்ச்சி முடிந்த பிறகு சாமான் கட்டுறதுக்கு ஆள் தேவையென்ற படியால் கேட்கிறாரோ' என்ற நினைப்பில் சரியான ரைமிங்கில் பாடவேண்டிய சரணத்தை விட்டு விட்டேன்.

இசை தொடர்ந்தது. பிறகும் ஏதோ ஒரு கட்டத்தில் பாடத் தொடங்கி... மொத்தத்தில் சொதப்பி முடித்தேன்..

அதுவே இறுதிப்பாடல் என்ற படியால் பெரிதாக பிரச்சனையில்லை. முடிக்கும் போதும் 'என்னாலும் பாட முடியுமா என பரிசோதித்துப் பார்த்தேன். அதற்கு உங்களைப் பலிக்கடா ஆக்கியதற்கு மன்னிக்க வேண்டும்' என சொல்லித் தான் முடித்தேன்.

இறங்கி வரும் போதே யாரோ சொன்னார்கள்.. 'நாய்க்கேன் போர்த்தேங்காய்..'

மேடையில் நான் பாடும் போது அழைத்து 'தன்னோடு வரும்படி' சொன்னவரிடம் போய்.. 'என்ன உங்களோடை வரச் சொன்னனியள்.. ஏதாவது உதவி வேணுமோ' என்று கேட்டேன்.

அவர் தலையில் கை வைத்தார்.. 'என்னோடு.. எனது இசையோடு வரச் சொன்னதாக' சொல்லி அவர் சிரித்தார். ஆனாலும் நான், 'இவன் வாசித்தால் எனக்கென்ன' என்ற ரீதியில் பாடியதாகவும் சொன்னார்.

ஒருவித அவமானம் தான். ஆனாலும் என்ன.. நான் பாட மாட்டேன் என்று எனக்கும் எல்லோருக்கும் உணர வைத்ததே அந்த நிகழ்வு தானே..

அன்றைய தினம் சன் டிவியில் Boys போட்டதாக சொன்னேனில்லையா.. யாழ்ப்பாணத்தில் boys படத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்தப் படம் திரையிட்ட ஒரு காட்சியுடன் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. அத்தோடு உத்தியோகப்பற்றற்ற முறையில் முழுவதுமாக தடை செய்யப்பட்டு விட்டது.

இது சரியானதா தவறானதா என்பவற்றுக்கு அப்பால் இந்த தடை, அதன் நோக்கத்தை எந்தளவிற்கு நிறைவேற்றியது என்றால் 'நிறைவேற்றவில்லை'யென்பதே பதில்

ஏனெனில் யாழ்ப்பாணத்திலிருந்து Boys படம் பார்க்க யார் யார் எல்லாம் விரும்பினார்களோ, அவர்களெல்லாம் அந்த படத்தை பார்த்து விட்டார்கள். இளைஞர்களாக, பிரத்தியேகமாக வாகன ஒழுங்கு செய்து கொழும்பு வந்து அந்தப் படத்தைப் பார்த்துப் போன இளைஞர்களை அறிந்திருக்கிறேன்.

இதுவே நிலைமையாயிருக்க அவ்வாறான ஒரு தடை அதன் நோக்கத்தை எட்டவேயில்லை என்பதே உண்மை.

தவிர புதுவருட தினத்தன்று சக்தி தொலைக்காட்சியில் Boys படம் திரையிட்டார்கள். கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் சக்தி, யாழ்ப்பாணத்திற்கென தனியான கோபுரம் அமைத்து யாழ்ப்பாணத்திற்கும் சேவை நடத்துகிறது.

திரைப்படம் தொடங்கி சில நிமிட நேரங்களில் யாழ்ப்பாணத்தில் படம் நிறுத்தப் பட்டு விட்டது. ஆனால் கொழும்பில் ஒளிபரப்பு தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் அதற்கு பதிலாக ராதிகாவின் சிறகுகள் படம் போட்டார்கள்.

ஆனால் அன்றிரவே சன் தொலைக்காட்சியில் அந்த திரைப்படத்தினை போட்டார்கள். அதுவும் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் கேபிள் ரி வி க்களின் வரவில் எல்லா வீடுகளிலும் சன் உடபட செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் கிடைக்கின்றன.

காலையில் படத்தை நிறுத்தியதன் நோக்கம் மாலையில் அடிபட்டுப் போனதே...

இவ்வாறான தடையுத்தரவுகள் பண்பாடு தொடர்பான கடும் நடவடிக்கைகளின் ஒரு அடையாளமாக இருக்குமே தவிர நடைமுறையில் அதுவும் தற்போது சாத்தியப்பட போவதில்லை.

புலிகளால் திரைப்படங்கள் தடைசெய்யப்பட்ட காலத்தில் அது குறித்த உடன்பாடில்லாத கருத்தினை தெரிவித்தவர்கள் பலர். விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவி அடேல் பாலசிங்கம் அவர்கள் தனது நூலில் புலிகளின் இந்த முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

10 Comments:

Blogger கறுப்பி said...

நல்லா முசுப்பாத்தியா எழுதிறீங்கள் சயந்தன். அந்தப்பாடலை தாங்கள் கொன்று பாடியதற்கு ஏதாவது உள் நோக்கம் இருக்கா? இருந்திருந்தாலும் பாட்டைக் கேட்டிருந்தால் கோட்டை விட்டிருப்பியள்.
கறுப்பியும் கொஞ்சம் பாடுவாள். இப்பிடித்தான் ஒரு பார்ட்டிகளில கரியோக்கியோட சேந்து நான் "வசீகரா" பாடினனான். அதுக்குப் பிறகு நண்பர்கள் வீட்டில நடக்கிற எல்லாப் பார்டிகளிலையும் பாத்திரங்களைக் கவிட்டு வைச்சு மேளம் அடிச்சு கறுப்பி "வசீகரா" பாடுங்கோ எண்டு கேப்பீனம். எனக்கு அந்தப் பாட்டுப்பாடி அலுத்துப் போச்சு. ஒருநாள் நான் சொன்னன் எனக்கு வேற பாட்டும் பாட வரும் எண்டிட்டு "ஒன்றா ரெண்டா ஆசைகள்" பாடினனான். அது முடியத் திரும்ப வசீகரா பாடுங்கோ ஒண்டு ஒரே தொல்லை நான் ஏனெண்டு கேட்டன். நீங்கள் வசீகராவை ஒழுங்காப் பாடமட்டும் நாங்கள் விடமாட்டம் எண்டு சொல்லிச்சீனம். இப்ப கறுப்பி பாடுறதையே விட்டிட்டாள்

9:34 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: k.kumuthan.thavady.yarlppanam

நீ ஒரு துரோகியடா மடையா

23.44 15.4.2005

10:46 AM  
Anonymous Anonymous said...

nallai irukku....
vazhththukkal.
somee

12:56 PM  
Anonymous Anonymous said...

nallai irukku....
vazhththukkal.
somee

12:56 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Sri Rangan

சயந்தன் தங்கள் குறிப்புகள் மனிதரை மனம் விட்டுச் சிரிக்கத்தூண்டுகிறது.மிக அற்புதமாக உங்களுக்கு எழுதவருகிறது.இப்படி நகைச்சுவையோடு எழுதும் ஆற்றல் எல்லோருக்கும் வராது.எனது நண்பன் பார்தஇதிபன் இப்படிப் பல சிறுகதைகள் எழுதியுள்ளான்.அதற்குப் பின் நீங்கள் அந்த நடையில் எழுதுகிறீர்கள்.நீங்கள் பார்த்திபனை வாசித்திருக்கமாட்டீர்கள்.ஆனால் உங்களிடமும் அதே ஆற்றறலுண்டு.நீங்கள் எழுத்துத் துறையில் பெரிதாகச் சாதிப்பீர்களென நம்புகிறேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்

22.19 13.4.2005

1:22 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

ம்!
யாழ்ப்பாணத்தில நானும் இப்ப அவதானிச்ச விசயம் இது. முந்தி இடப்பெயர்வுக்கு முதல் இசைக்குழு எண்டு ஒண்டு நடந்தா ஆயிரக்கணக்கில சனம் வரும். விடியும் மட்டும் இருந்து முழுக்கப் பாத்திட்டுப் போகும். ஒவ்வொரு பாட்டு முடியவும் கைதட்டலும் விசிலடியும் செவிள் பறக்கும். ஆனா இப்ப இசைக்குழுவுக்குப் போற சனத்த நினைச்சா சரிப்பாத்தான் இருக்கு. அது பிரபல்யமான குழுவென்றால்கூட. அதோட ஒவ்வொரு பாட்டு முடியவும் "எங்கே உங்கள் கைதட்டல்கள்" என்று அறிவிப்பாளர் கெஞ்ச வேண்டியிருக்கிறது. அப்படிப் போகிறது யாழ்;ப்பாண நிலைமை. இப்போது இசைக்குழு ரெண்டு, ரெண்டரை மணித்தியாலத்துக்குக் கூட நடத்த ஏலாது. எல்லாம் மினி எண்ட வடிவத்த எடுத்திட்டுது. நான் கூத்துக்கள் பற்றி என்ர அவதானத்த எழுதிற திட்டமிருக்கு. அதுவும் மிகமிக அவலமான நிலையிலேயே இருக்கிறது.

6:08 PM  
Anonymous Anonymous said...

ஆட்டைப்பற்றி எழுதச்சொன்னா ஆட்டைக்கொண்டுவந்து பனையில கட்டிப்போட்டு பனையப்பற்றி எழுதின கதைமாதிரி புதுவருஷம் எண்டு தொடங்கினவுடன என்னடா இந்த முறை ஆள் சொதப்பப்போகுது எண்டு நினைச்சுக்கொண்டு வாசிக்கத்தொடங்கினால் வழமையான பாணியில் கலக்கியிருக்கிறீர்.ஆக்கம் அருமை.

அந்தக்காலத்தில(இந்த சொல்லப்பாத்ததும் பழசு எண்டு எடைபோடவேண்டாம் என்பது எனது பணிவான விண்ணபப்பம்) சாந்தன் சுகுமார் கோஷ்டி எண்டா எவ்வளவு சந்தோஷம்.எந்தச்சாமம் ஆனாலும் வசந்தன் சொன்னமாதிரி மரத்தில எங்கயாவது வெளவால் மாதிரி தொங்கிக்கொண்டாவது பாத்து விசிலடிக்கிறது.அது மட்டுமே கனலில் கருவாகி பாட்டு தொடங்கு மட்டும் சாந்தனை பாடவிடாமல் கத்திறது தனி சுகம்.

இப்ப அதெல்லாம் யாழ்ப்பாணத்தில எங்க பாக்கிறது.எல்லாம் சித்தி மெட்டி ஒலி எண்டுகொண்டெல்லோ அலையுதுகள்.இதைப்பற்றி கதைச்சா கதைச்சுக்கொண்டே இருக்கலாம்.சரி விடுவம்.

நீர் ஏற்றுக்கொள்கிறீரோ இல்லையோ சயந்தன் உமக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

11:04 PM  
Anonymous Anonymous said...

உங்கள்ள கருத்துடன் இணங்க முடியாது. நீலப்படங்களையும் தான் புலிகள் தடைசெய்திருக்கிறார்கள். ஆயினும் அதனையும் தாண்டி (வன்னியூடாக அவற்றை கொண்டு செல்ல முடியாதாயினும் வான் மார்க்கமாக) யாழ்ப்பாணத்தில் அவை புழக்கத்தில் இருக்கின்றன. இதற்காக அவற்றின் மீதான தடையை நீக்கிவிட முடியுமா?

8:32 AM  
Anonymous Anonymous said...

“பெரும்பாலான தமிழ்ச்சினிமாப் படங்கள் மெய்யான யதார்த்த வாழ்க்கையை கொச்சைப்படுத்தவதோடு மக்களின் மனநிலையை மாசுபடுத்துவதாக புலிகளின் தலைமைப்பீடம் கருதியது. ஆனால் மக்கள் அவ்வாறு கருதவில்லை. நானும் மக்களின் கருத்தே சரியென நினைத்தேன்.” -அடேல் பாலசிங்கம்-

இதைத்தானே குறிப்பிட்டிருக்கிறீர்கள்??

அடேல் பாலசிங்கம் வேற்று நாட்டவர் தானே. என்ன தான் தமிழ் மக்களோடு தமிழ் மகளாக இருந்தாலும் அவர் கொண்டிருக்கும் கருத்தில் வேறு பாதிப்பும் இருக்கத்தான் செய்யும். அவரிற்கு உடன்பாடு இருக்கவில்லை என்பதை இதில குறிப்பிட்டு நீங்க என்ன சொல்ல வாறீங்க?

(அதே அடேல் சீதன முறைமை தொடர்பாக கொண்டிருந்த கருத்தையிட்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன. எங்கட மக்களாலேயே சரியாக புரிந்து கொள்ள முடியாத ஒரு விடயத்தை எங்கிருந்தோ வந்து ஆய்வு செய்து அதை மக்களுக்கு புரிய வைக்க முயற்சித்த அவர் உண்மையிலேயே ஒரு பசநயவ pநசளழn)

தேவையற்ற ஒன்றை விரும்பும் மகனுக்கு அதை வாங்கிக் கொடுக்காதது தந்தை செய்த பிழையாகுமா?
மக்களுக்கு அந்த போர்க்கால சூழ்நிலையில் திரைப்படங்கள் (மெய்யான யதார்த்த வாழ்க்கையை கொச்சைப்படுத்தும்.. மக்களின் மனநிலையை மாசுபடுத்தும்.. திரைப்படங்கள்) தேவையற்றனவே.

வேறு எந்த சிந்தனையுமில்லாமல் தமிழரெல்லாம் ஒன்றுபட்டு போராடியிருந்தால் இன்டைக்கு இருக்கிற நிலையே வேறு. தான் தன் சுகம் என்று வாழ்ந்து போட்டு… வாழ்ந்து கொண்டு…..

7:50 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: NaNbAn

ஒரு கருத்தைச் சொல்பவர் அதற்கான காரணம் சொல்வது நன்று..
'துரோகி' என்று கூறியவர் ஏன் என்று கூறாமல் தன்னைத்தானே பித்தன் ஆக்கிக் கொண்டார்..
"குழந்தைப் பிள்ளைத் தனமா எல்லே இருக்கு...."

10.37 17.4.2005

7:44 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home