9.4.05

பாஞ்சாலியும் ஹெலியும்

ஊரில சிவராத்திரி மற்றது நவராத்திரி இந்த ரண்டுக்கும் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடக்கும். நாடகங்கள், பட்டிமன்றங்கள் எண்டு அந்த இரவு கழியும். தவிர மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளும் இவ்வாறாக நடக்கும். 90 ஆண்டு மாவீரர் தினம் ஊர் முழுக்க வளைவுகள் வைத்து பெரிசா நடந்தது. கடைசி நாள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

ஊரில நாலு திசைக்கும், ஆக்களை அனுப்பி விட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏதாவது பிளேன் சத்தமோ, ஹெலிச்சத்தமோ கேட்டால் அவர் ஓடிவந்து சொல்லுவார். உடனை லைற் எல்லாத்தையும் நிப்பாட்டி விட்டு ஊர் இருண்டு போய்விடும். சிலர் வீடுகளுக்கும் போயிடுவினம். உப்பிடித்தான் ஒரு சிவராத்திரிக்கு நான் பொம்பிளை வேசம் போட்டு நாடகம் நடிச்சுக் கொண்டிருந்தன். பாஞ்சாலி சபதம் நாடகம். நான் தான் பாஞ்சாலி.

திடீரென்று ஹெலிச்சத்தம் கேட்கத் தொடங்கிட்டுது. பலாலியிலிருந்து காரைநகருக்கு போற ஹெலி எங்கடை ஊர் தாண்டித்தான் போறது. உடனை இங்கை லைற் எல்லாம் நிப்பாட்டியாச்சு. லைற்றைக் கண்டால் கட்டாயம் சுடுவான். அதனாலை போன பிறகு நிகழ்ச்சியை தொடரலாம் எண்டு இருந்தம்.

எங்கடை கஸ்ர காலம் ஹெலி என்ன அசுமாத்தம் கண்டிச்சோ.. சுடத் தொடங்கிட்டான். நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சுடவில்லை. அவன் வேறு எங்கோ சுட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் இருந்த இடத்தில இருந்து பாக்க நல்ல கிளியரா தெரியுது சுடுறது. அதுவும் இருட்டில சுடுறதை பாக்க வடிவா இருக்கும்.

நாடகம் பாக்க வந்த சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடத் தொடங்கிட்டுதுகள். நான் பாஞ்சாலிக்காக நீலக்கலர் சீலையும் கட்டி நல்லா மேக்கப் எல்லாம் போட்டிருந்தன். எங்கடை அம்மம்மா என்னை ஒரு கையில இழுத்துக்கொண்டு வீட்டை ஓடத்தொடங்கினா.

'கட்டின சீலையோடை ஓடுறது' எண்டு சொல்லுவினமே அப்பிடி நானும் ஓடுறன். சீலையோடு ஓட கஸ்ரமாகவும் கிடந்தது. மடிச்சுக் கட்டிப்போட்டு ஒரே ஓட்டம்.

ஹெலி சுட்டுட்டு போயிட்டுது. நான் வீட்டை இருக்கிறன். ஓடி வரும்போது தலைமுடி எங்கேயோ றோட்டிலை விழுந்திட்டுது. எனக்கு கவலையாயிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாசம் பழகினது. உண்மையா எனக்கு பொம்பிளை வேசம் போட்டு நடிக்க விருப்பம் இல்லை. என்ன செய்யிறது. நாடகம் பழக்கிறவர் வீட்டுக்கு தெரிஞ்ச ஆள். அவர் கேட்டா வீட்டில ஓம் எண்டு விடுவினம். நானும் வேண்டா வெறுப்பாப்பாத்தான் பழகிறனான். எண்டாலும் பழகின பிறகு நடிக்க முடியெல்லை எண்ட நினைக்க கவலையாயிருந்தது.

திரும்ப நிகழ்ச்சி தொடங்கிற சத்தம் கேட்குது. வீட்டில இருக்க எனக்கு கேட்குது. பாஞ்சாலி சபதம் மீண்டும் தொடரும் எண்டுகினம். எப்பிடித் தொடரும். பாஞ்சாலி வீட்டிலயெல்லோ இருக்கிறாள்.

காரைநகருக்கு போன ஹெலி திரும்பவும் பலாலிக்கு போகும் எண்ட படியாலை வீட்டில ஒருத்தரும் விரும்பவில்லை திரும்பி நாடகத்துக்கு போறதை.

அப்ப எனக்கு நாடகம் பழக்கினவர் வீட்டை சைக்கிளில் ஓடிவாறார்.

அங்கை நாடகம் தொடங்கிட்டுது. நீ இங்கை இருக்கிறாய். கெதியிலை வந்து சைக்கிளிலை ஏறு. எண்டார்.

என்ரை சீலை எல்லாம் குலைஞ்சு போய் கிடந்தது. ஏதோ அப்பிடியும் இப்பிடியும் செய்து சரியாக்கி விட்டார்.

'சேர் என்ரை தலைமுடி எங்கேயோ விழுந்திட்டுது' எண்டு சொன்னன். பரவாயில்லை ஏறு எண்டு என்னைக் கொண்டு போனார். ஒரு வேளை 'நவீன பாஞ்சாலி' எண்டு பேரை மாத்தப் போறாரோ எண்டு நினைச்சுக் கொண்டு போனன்.

பிறகென்ன நீளக் கூந்தல் எதுவும் இல்லாமல் ஒட்ட வெட்டின என்ரை தலையோடை நான் பாஞ்சாலியாக நடிச்சன். அதுக்கு பிறகு என்னை எல்லாரும் ஆம்பிளை பாஞ்சாலி எண்டு தான் கூப்பிடத் தொடங்கிட்டாங்கள்.

பாஞ்சாலிப் படம் இப்ப கைவசம் இல்லையெண்ட படியாலை இன்னொரு பொம்பிளை வேசம் போட்ட நாடகத்தில இருந்து எடுக்கப்பட்ட படமொண்டை போடுறன். பாருங்கோ

Image hosted by Photobucket.com

16 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: kulakaddan

கி கி கி நல்லா தான் இர்க்கு................

16.55 9.4.2005

7:59 AM  
Anonymous Anonymous said...

இந்தப் படத்திலும் கூந்தலைக் காணவில்லையே. ஒரு வேளை அது தான் உமக்கு பொருத்தம் என்று விட்டு விட்டார்களோ தெரியவில்லை

8:53 AM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

மெய்யாலுமே உது நீர் தானோ?

9:38 AM  
Anonymous Anonymous said...

//'கட்டின சீலையோடை ஓடுறது' எண்டு சொல்லுவினமே அப்பிடி நானும் ஓடுறன்.//
:)))

11:42 AM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அந்த மாதிரி இருக்கீங்க சயந்தன். ;)

---

இலகு தமிழில் அனுபவப் பதிவுகள் மனதில் பல நாட் தங்கும்.

உங்கள் அனுபவங்களை இப்படிப் பதிந்து வையுங்கள் சயந்தன்.

என்னைப்பொருத்தவரையில் இந்தப் பதிவெல்லாம் மிகவும் முக்கியமானவை. நேரடி அனுபவப் பதிவுகளின் தாக்கம் மிக முக்கியம்.

12:10 PM  
Blogger வன்னியன் said...

உப்பிடி நிகழ்ச்சயள் நடக்கேக்க குழப்பிறதுக்கெண்டே சிலர் இருப்பினம். அவயள் தெரிவுசெய்யிற விசயம் உந்த ஹெலிதான். சில நேரம் சீ-பிளேனும் வரும். திடீரெண்டு ஹெலி ஹெலி எண்டு புரளியக் கிளப்பிவிட, சனம் வெருண்டடிச்சு ஓட, நிகழ்ச்சியள் குழம்பிப்போகும். ஆனா அங்க ஒரு ஹெலியும் வந்திருக்காது. ஹெலி அடிச்சாக்கூட பிறகு நிகழ்ச்சியள் நடந்து முடியும். இப்பிடி புரளி கிழப்பிள கோஷ்டிய கஸ்டப்பட்டு எங்கட ஊர் விழிப்புக்குழு கண்டுபிடிச்சிட்டுது. பிறகென்ன சாம்புசாம்பெண்டு சாம்பினதுதான்.
இப்பிடியான நிகழ்ச்சியள் நடக்கேக்க போகஸ் லைற்றுகளை மேல கட்டுறேல. எல்லாம் நிலத்தில தான். ஒவ்வொரு ஆக்கள் அதுகளுக்குப் பக்கத்தில நிப்பினம், உடன கவுட்டு வக்கிறதுக்கு.

5:13 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Eswar

Well done sayanthan. You look very gorgeous in the
photo.Without knowing that you are a male someone
would have loved you.I enjoyed your writings.Looking for your next one.

22.46 8.4.2005

8:01 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: கவி

//'கட்டின சீலையோடை ஓடுறது' எண்டு சொல்லுவினமே அப்பிடி நானும் ஓடுறன்.//

ஹா ஹா.....



19.6 10.4.2005

2:09 AM  
Anonymous Anonymous said...

அழகாயிருக்கிறாய்.. பயமாயிருக்கிறது

6:19 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: அருணன்

நீர் ரோட்டில விழுத்தின நீளக்கூந்தலுக்கு எங்கட வழக்கத்தில முடிமயிர் எண்டு சொல்லிறது.ஏனடா சர்ச்சை எண்டு அந்த சொல்லை தவிர்த்திட்டீரோ?

எண்டாலும் அருமையான பதிவு எங்கட சனம் எப்பிடி வாய வயித்தைக்கட்டி சீவிச்சது எண்டு எல்லாருக்கும் விளங்க வேணும்.

15.59 11.4.2005

11:03 PM  
Blogger சயந்தன் said...

ம்.. தலை முடியை இயல்பாக மயிர் என்று சொல்வது தான் வழமை. இந்தியா சென்ற பின்னர் அதை மாற்றிக் கொண்டாயிற்று. ஆனால் இப்ப முடி என்று சொல்வதே பழகிக்கொண்டு விட்டது.

அதே போல சின்னப் பிள்ளையிலிருந்து பழகிய இன்னுமொரு சொல்லு 'புக்கை.' கொழும்பு வந்த பின்னர் மாற்றிக்கொள்ள வேணடியதாய்ப் போனது. ஆனாலும் என்ன 'பொங்கல்' என்று சொல்வதும் நன்றாகத் தானே இருக்கிறது.

12:29 AM  
Anonymous Anonymous said...

//இந்தியா சென்ற பின்னர் அதை மாற்றிக் கொண்டாயிற்று//

மற்றவர்களுக்காக உங்கள் பழக்கத்தை ஏன் மாற்றிக் கொள்கிறீர்கள் ச் சே.. வெட்கம். வெட்கம்..

6:22 AM  
Anonymous Anonymous said...

அல்வாசிட்டி சம்மி, குண்டு போட்ட அடுத்த மணித்தியாலமே சிதறிய உடல்களை கூட்டி அள்ளிக் கொழுத்தி விட்டு அடுத்த வேலையை பார்க்க போகின்ற அளவுக்கு எல்லாம் பழகிவிட்டது. அல்லது மரத்து விட்டது. இனியொரு சண்டை விருப்பமே இல்லை. அப்படி வந்தாலும் என்ன? கூட்டி அள்ளி கொழுத்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான். இருப்பினும் எமது வலியை அறிந்தவர்களாய் உங்களைப்போல சிலர் அருகிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.

சயந்தன் தொடர்ந்து எழுதுங்கள்.

9:16 AM  
Anonymous Anonymous said...

நாயகன் படத்தில் கேட்டது போல கேட்கிறேன்.
நீங்க சயந்தனா..? வசந்தனா..?

6:28 AM  
Blogger சயந்தன் said...

நாயகன் படத்தில சொன்னது போலவே நானும் சொல்லுறன்
தெரியல்லயேப்பா...

2:53 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: NanPan

நீங்கள் சின்னனிலை வடிவா இருந்தனியளோ ?

12.13 13.4.2005

9:14 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home