31.3.05

தமிழனின் பறப்பு முயற்சிகள்

யாழ்ப்பாணத்தில் நவாலி வட்டுக்கோட்டை இணையுமிடத்தில் களையோடை அம்மன் கோவில் என்கிற ஒரு சின்ன அம்மன் கோவில் இருக்கிறது. எனது ஊரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் அந்த அம்மன் கோவிலைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் எனது கண் அங்கே அந்தக் கோவில் வளாகத்தில் நின்ற ஒரு மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்ற ஒரு சிறிய ரக விமானத்தை நோக்கும்.

ஆம். அது பறப்பதற்கு முயற்சி செய்து பலன் தராது விட்ட ஒரு சிறிய விமானம்.

85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்க தொடங்கி விட்டார்களாம்.

யாழ்ப்பாணத்தையும் வலிகாமம் மேற்கையும் இணைக்கும் கல்லுண்டாய் வெளி ஒரு நீள் வீதி. அதிகம் பாவனைக்குள்ளாகாத அந்த வீதி ஒரு விமான ஓடுபாதைக்கு உரிய ஆகக் குறைந்த தகுதிகளை கொண்டிருந்தது. வெளிநாட்டு வீதிகளில் சோறு போட்டு சாப்பிடலாம் என்றால், சோறும் போட்டு சொதியும் விட்டு சாப்பிடக் கூடியதான (அவ்வளவு குழிகள்) யாழ்ப்பாண வீதிகளில் கல்லுண்டாய் வீதி ஒப்பீட்டளவில் பரவாயில்லை.

அந்த வீதியினை நம்பித் தானாம் விமானங்கள் கட்டப்பட்டன.

அவ்வகையான விமானங்கள் இரண்டடியோ நாலடியோ மேலெழுந்ததோடு தங்கள் பணியை முடித்துக் கொண்டு விட்டன. பிறகு களையோடை அம்மன் கோவில் போன்ற இடங்களில் ஏதாவது மரத்தில் பறந்து கொண்டிருந்தன.

கிட்டத்தட்ட சாத்தியமாகாத விடயமாகவே அது அனைவர் மனதிலும் தங்கி விட்டது.

94 என்று நினைக்கின்றேன். கோண்டாவில் பகுதி ஒன்றில் புலிகள் முகாமில் ஹெலிகொப்ரர் ஒன்று அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சாதாரண பொதுமக்கள் அறியக் கூடியதாக அதன் கட்டமைப்புக்கள் நடந்தன. அது என்ன, எதற்கு என அறிந்து கொள்ளாமலே புலிகள் விமானம் செய்கிறார்கள் செய்தி உலவத்தொடங்கி சீக்கிரமே முடிவுக்கு வந்தது.

அது புலிகள் பலாலி இராணுவ தளத்தில் உள்நுழைந்து ஹெலிகொப்ரர் ஒன்றை அழித்த தாக்குதல் தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு குறுந்திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதாக சொன்னார்கள்.

மீண்டும் 98 இல் இந்தக் கதை சூடு பிடிக்க தொடங்கியது. இலங்கை இராணுவம் தன் ரேடாரில் தெரிகிறது, சத்தம் கேட்கிறது என கதையைக் கிளப்பியது.

முத்தாய்ப்பாக 98 மாவீரர் தினத்தில் புலிகள் தம்மிடமுள்ள விமானப் படை குறித்து பிரகடனம் செய்தனர். மாவீரர் துயிலும் இல்லமொன்றில் விமானம் ஒன்று மலர் தூவியதாக கொழும்பில் அப்போதைய தினமுரசு செய்தி வெளியிட்டது.

வானமேறினான் தமிழன் என்ற கருத்துப்பட புதுவை இரத்தினதுரையின் ஒரு பெருமிதக் கவியை வாசித்த நினைவும் இருக்கிறது.

அது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் அப்போதே அரசு செய்யத்தொடங்கி விட்டது. அரச மையங்கள் மீது விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்டன. 98 இலேயே அது பற்றி அறிந்து கொண்டு அதற்கான ஆயத்தங்களையும் செய்து விட்டு மீண்டும் இப்போது 2005 இல் இலங்கை அரசு புலிகளின் விமானங்கள் குறித்து கத்துவதற்கான காரணம் வெளிநாடுகளிடம் புலிகளை போட்டுக் கொடுக்கவும் சிங்கள மக்களுக்கு புலிகள் தொடர்பாய் அச்ச உணர்வை ஏற்படுத்தவுமே..

எங்களிடம் விமானப் படை இருப்பது பழைய விடயம் தான் என புலிகளும் கேட்பவர் அனைவருக்கும் சொல்லி வருகிறார்கள்.

98 இல் மாவீரர் தினத்தின் போது விமானப் பிரசன்னத்தை நேரில் பார்த்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுகிறார்கள் அப்போது சந்தோச மேகங்கள் தலை தடவிப் போனதாம்.

கல்லுண்டாய் வெளியில் ஓடித் திரிந்து எவ்வளவு முயன்றும் மேலேற முடியாமல் போன பறப்பு முயற்சிகள் தொடர்பாக சில தகவல்களும் படங்களும் பதியும் எண்ணமிருக்கிறது.

இப்போது எந்தக் காரணமும் அற்று இந்த தலைப்புக்கு பொருத்தமாய்..(ஒரு தமிழனின் பறப்பு முயற்சிகள்) ஒரு படம் போடப் போறன்.

இதிலை பறக்கிறதுக்கு முயற்சி செய்யிறது நான் தான்.

Image hosted by Photobucket.com

7 Comments:

Anonymous Anonymous said...

ம்... பதிவு நல்லாயிருக்கு.
98 இல புலியளின்ர விமானத்த நேரில கண்ட தமிழரில நானுமொருவன் எண்ட பெருமயிருக்கு. அந்த அனுபவங்கள எழுத எண்ணமிருக்கு. பிறகு பாப்பம். நீங்கள் கட்டித்தூக்கிவிட்ட அந்த விமானங்கப் பாக்கத்தான் குடுத்து வச்சனியள்.

7:56 AM  
Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

1:05 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: சீலன்

எழுதிக்கொள்வது: சீலன்

வன்னியன் அது பற்றி எழுதுங்கள். நேரில் பார்க்கத்தான் முடியவில்லை. படித்தாவது தெரிந்து கொள்வோம்.

7.5 1.4.2005

7.7 1.4.2005

1:08 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Shiyam Shunthar

வன்னியன் நீங்கள் பார்த்தது கிளைடர் விமானமா? அல்லது ஹெலிகொப்ற்றரா? பூத்துவியது பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

18.18 1.4.2005

6:21 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Sayanthan

பரிசோதனை

3.48 3.4.2005

9:48 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: வன்னியன்

நான் பாத்தது ஹெலிதான். இப்ப நிறைய வேல இருக்கிறதால ஆறுதலா எழுதிறன்.


12.51 5.4.2005

7:53 PM  
Blogger மு. மயூரன் said...

வாழ்த்துக்கள் சார்!!

1:36 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home