14.1.07

பொங்கல் நினைவுகளும் சோமிதரனும்

84 இல் அத்திவாரக் கல்லிட்ட எங்கள் வீடு முழுமை பெற்று முடிந்தது 94 இல் சந்திரிகா கொண்டு வந்த அரையாண்டுச் சமாதான காலத்தில்த் தான் என்றாலும், 88 களிலேயே பூச்சற்ற சுவர்களுடனும், ஒன்றிரண்டு பிரதான கதவுகள் தவிர மொட்டையாக நின்ற வாசல்களுடனும் இருந்த வீட்டினில் நாங்கள் குடி வந்திருந்தோம். ஆயினும் 95 வரை எங்கள் வீட்டீல் எத்தனை தடவை பொங்கல் கொண்டாடியிருக்கிறோம் என்றால் எனக்கு நினைவு தெரிய இரண்டு அல்லது மூன்று தடவைதான்.

அந்தக் காலங்களில் அதிகம் பொங்கல் கொண்டாடியது எனது பெரியப்பா வீட்டில்த் தான். பொங்கலுக்கு முன்னைய இரவில் வந்து அவர் அழைத்துச் செல்வார். மின்சாரமற்ற அப்போதைய யாழ்ப்பாணம் எட்டு மணிக்கெல்லாம் உறங்கி விடும். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கிணற்றில் சில் என்ற தண்ணீரில் முழுகி விட்டுத் திரும்பினால் பெரியப்பா தனது வேட்டியொன்றைக் கட்டி விடுவார்.

அப்போது வெடிகள் வெடிக்கின்ற வழக்கம் எல்லாம் இல்லை. பட்டாசுகளைப் பயன்படுத்திப் புலிகள் ஏவுகணைகளைத் தயாரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அவை யாழ்ப்பாணத்துக்கு தடை செய்யப் பட்டிருந்தன.

(பிற்காலத்தில் இதற்கான மாற்றீடு ஒன்றினை நானே தயாரித்துப் பயன்படுத்தியிருக்கிறேன். அப்போதைய, காலத்துக்கு உதவாத தொலைக்காட்சி அன்ரனாவின் உணர் கம்பிகளை சிறிய அளவில் வெட்டி உள்ளே தீக்குச்சி மருந்துகளை அடைந்து இரண்டு பக்கத்தினையும் குறட்டினால் அமத்தி மூடிவிட்டு அதனை துணி கொண்டு சுற்ற வேணும். அதனை ஒரு தடவை மண்ணெண்ணையில் தோய்த்து எடுத்து விட்டு எங்காவது தூர இடத்தில் - இது முக்கியம் - வைத்து தீ மூட்டினால் சில நிமிடங்களில் டமார். பின்னர் குண்டு வெடித்த இடத்திற்குச் சென்று வெடித்துச் சிதறிய அன்ரனா கம்பியின் சிதறல்களைத் தேடி எடுப்பதுவும், அது எப்படிச் சிதறியிருக்கிறது என ஆராய்வதும் இன்னொரு பொழுது போக்கு. சில வேளைகளில் வெடிக்காது. அடைக்கப்பட்ட கம்பி ஏதாவதொரு பக்கத்தால் திறந்து புஸ் ஆகிவிடும். அது Mission Fail)

கோலங்களில் புள்ளிகள் கோடுகள் வளைவுகள் என பலவகை உள்ளன என்பதை நான் அறிந்து கொண்டது பிறகு தான். முன்னைய காலங்களில் எனக்கு தெரிந்த ஒரேயொரு கோலம் நீள் சதுரத்தில் வரைந்து ஒவ்வொரு மூலைகளிலும் வளைவுகள் போடும் கோலம் தான். ஒவ்வொரு பக்கத்திலும் வாசல் வேறு வைப்பார்கள்.

உலக்கையொன்றினைப் பயன்படுத்தி அதன் நடுவில் மாவினை இட்டு வர அது Double border கோலமாகும்.

பொங்கலுக்கான அடுப்பு இரு வாரங்களுக்கு முன்னரே தயாராகி விடும். பெரும்பாலும் ஒவ்வொருவரும் தமக்கென செய்து கொள்வார்கள். வாளிகளில் மண் குழைத்து அவற்றின் அச்சில் செய்யப்படும் அடுப்பு பின்னர் மாட்டுச் சாணம் கொண்டு பூசி மெழுகப்படும். எங்களுக்கான விசேட அடுப்பக்களை தயாரிப்பதற்கு டம்ளர் பயன்படுத்தப்படும்.

Photobucket - Video and Image Hosting

நான் கோலம் போடுவதற்கு சில தடவைகள் முயற்சித்திருக்கிறேன். முடியாத காரணத்தினால் பெரும்பாலும் உலக்கையை ஆடாமல் அசையாமல் பிடிக்கும் பொறுப்புத்தான் வரும். அதுபோலவே வீபுதி பூசிய அடுப்பிற்கு சந்தனப் பொட்டிடும் வேலையும் வரும்.

எல்லாம் சரியாகத்தான் போகும். ஆயினும் அடுத்த ஒரு விடயத்தினை நினைத்து பயந்து பயந்து மனம் இருக்கும். அது தேவாரம் பாடுவது. பொங்கலின் ஒரு கட்டத்தில் தேவாரம் பாட வேண்டும். அந்த நிகழ்வைக் கடக்கும் மட்டும், எங்கே என்னைத் தனிய பாட விட்டு விடுவார்களோ என லப் டப் அடித்துக் கொண்டேயிருக்கும். நாலைந்து பேரோடு சேர்ந்து பாடினால் கும்பலில கோவிந்தா போடலாம்.

பொங்கல் சூரியன் உதிக்கும் திசை நோக்கித்தான் பொங்கி வழியும் எனச் சொல்லி விட்டு அந்தத் திசையிலேயே பானையைச் சற்றுச் சரித்து வைப்பார்கள். பொங்கல் முடிய படையல் - அது முடிய எனக்கு எப்போதும் பிடித்தமான - நாவிற்கு சுவையை அடுத்தடுத்து மாற்றித் தரும் - புக்கை + வடை

-----இந்த இடத்தில கட் பண்ணி 2003 இல ஓப்பின் பண்ணுறம்-----

தீவில் சமாதான காலம். தைப்பொங்கல் 2003

யாழ்ப்பாணத்திற்கான பாதை திறக்கப்பட்டது. பட்டாசுகள் யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய பகுதிகளுக்கும் சென்றன. என்னோடு எனது வீட்டில் தங்கியிருந்தார் நண்பர் சோமிதரன். அப்போது சில வெளிநாட்டு வானொலிகளின் யாழ்ப்பாணச் செய்தியாளர் அவர். அன்றைய இரவு ஒரு வானொலியிலிருந்து சோமிதரனைக் கேட்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழா எப்படி இருந்தது?

சோமிதரன் ஆரம்பிக்கிறார்.

மிக நீண்ட காலத்தின் பின்னர் மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் மக்கள் கொண்டாடினார்கள். இங்கே இப்போதும் வெளியே வாண வேடிக்கைகளும் வெடிச் சத்தங்களும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.யாழ் நகரம் மிக பரபரப்பாக இருக்கிறதை காணக் கூடியதாக உள்ளது. உண்மையில் யாழ்ப்பாண மக்கள் மிக நிறைவுடன் தைப்பொங்கலை கொண்டாடியிருக்கிறார்கள். .............. ......... செய்திகளுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சோமிதரன்

நான் சோமியை ஆச்சரியமாகப் பார்த்தேன்.

இங்கை கட் பண்ணுற நாங்கள் வேறெங்கும் ஓப்பின் பண்ணப்போறதில்லை. இனி வருவது இயக்குனர் குரல்

2006 தைப்பொங்கலையொட்டிய காலம்தான். ஒஸ்ரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் தமிழகம் குறித்த ஒரு செய்தி ஆய்விற்காக சோமிதரனைச் செவ்வி கண்டு கொண்டிருந்தேன். அவர் அப்போது உண்மையிலேயே தமிழகத்தில் இருந்தார்.

நன்றி - அருச்சுனா இணையம்

5 Comments:

Anonymous Anonymous said...

என்னைய்யா.. அங்கே வசந்தனுடன் கலந்துரையாடல் நடத்திறதா செய்தி வருகுது. இங்கை அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் நீர் உம்மடை பாடு..?

சோமிதரன் இப்பவும் யாழ்ப்பாண செய்தியாளரோ..:)

4:34 PM  
Anonymous Anonymous said...

நீர்தானோ என முதலில் நினைத்தேன்.. படத்தில்

9:33 PM  
Anonymous Anonymous said...

:)

1:41 AM  
Blogger சயந்தன் said...

//என்னைய்யா.. அங்கே வசந்தனுடன் கலந்துரையாடல் நடத்திறதா செய்தி வருகுது. இங்கை அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் நீர் உம்மடை பாடு..?//

நன்றி நாலும் தெரிஞ்சவன். ஓமோம்.. தவற விடாமல் கேளுங்கோ..

2:23 AM  
Anonymous Anonymous said...

நல்லதொரு பொங்கல் பதிவு
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

மீண்டும் ஒரு நிறைவான பொங்கலை தமிழர்கள் கொண்டாடும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

2:31 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home