25.10.05

கடவுள் ஒருவன் தான்!

ஹி ஹி.. இது ஒண்ணும் மதப் பதிவு இல்லைங்க!

இண்டைக்கு பின்னேரம் போல வகுப்பாலை ரெயினிலை வந்து கொண்டிருந்தன். அடுத்ததோ அதுக்கடுத்ததோ ஒரு ஸ்ரேசனில ஒரு வயசான வெள்ளைக்கார அம்மா வந்து எனக்கு பக்கத்தில இருந்தா. நான் ஒரு பண்பாட்டுக்கு சிரிச்சு வணக்கம் சொல்லிப்போட்டு பக்கத்தில கிடந்த ஓசிப்பேப்பரை எடுத்து படங்கள் பாக்க தொடங்கினன். முக்கியமா எந்தக் கடையிலாவது எந்தச் சாமானாவது மலிவாப் போட்டிருக்கோ எண்டு பாக்கிறது தான் என்ரை வேலை.

பக்கத்தில இரந்த மனிசி ஒரு சின்ன சாப்பாட்டுப் பெட்டியை திறந்து பாத்திட்டு oh.. i dont like it எண்டிச்சு.. நானும் விடுப்பு பாக்கிற அவதியில பேப்பருக்குள்ளாலை தலை எடுத்து என்ன ஏதெண்டு பாத்தன். மனிசி இதுதான் சாட்டெண்டு கதைக்க தொடங்கிட்டுது.

எனக்கு முன்னாலை பின்னாலை பக்கத்திலை எல்லாம் வலு இளம் பெடி பெட்டயள் சிரிச்சு கும்மாளம் அடிச்சு கதைச்சுக் கொண்டு வர, என்ரை விதியை நொந்து கொண்டு நான் இந்த வெள்ளைக்கார ஆச்சி சொல்லுறதை கேக்க தொடங்கினன்.

அவ ஆருக்கோ கேக் செய்து அந்த சின்னப் பெட்டியில குடுத்தவவாம். அதுக்கு அந்தப் பெட்டியை தரேக்கை அவை கொஞ்ச ரொபியளை வைச்சு தந்திருக்கினமாம். தனக்கு உந்தப் பழக்கம் பிடிக்கேல்லை எண்டு அவ சொன்னா.

எனக்கும் உப்பிடியொரு பழக்கம் கொழும்பில புழக்கத்தில இருந்தது தெரியும்.

அதிலை ஒரு ரொபியை எடுத்து எனக்கு தந்தா. ரெயினுக்குள்ளை பழக்கமில்லாதவை ஆர் என்ன தந்தாலும் வாங்க கூடாது எண்டு சொல்லுறவை. எண்டாலும் அவவைப் பாத்தால் என்னை மயங்க வைச்சு களவெடுக்கிற ஆள் மாதிரியோ இல்லாட்டி என்னைக் கடத்திக்கொண்டு போற ஆள் மாதிரியோ தெரியெல்லை எண்ட படியாலை நான் thanx சொல்லி ஒரு ரொபியை வாங்கி சாப்பிட்டன்.

இப்பதான் மனிசிக்கு விசர் ஏறத் தொடங்கினது. முன் சீற்றில ஒரு இளம் பெடியும் பெட்டையும் ஒருத்தரை ஒருவர் கட்டிப்பிடிச்ச படி கொஞ்சுப் படுறதும் குலவுப்படுறதுமா இருந்திச்சினம். நான் என்ரை பாட்டில இருந்தன். வழமையா வாற ஒரு சில பெருமூச்சுக்கள் கூட இல்லை.

ஆனா.. பக்கத்தில இருந்தவ புறுபுறுக்க தொடங்கினா. its too much எண்டா அவ என்னைப்பாத்து.. அதுகள் too much எண்டால் அதுக்கு நான் என்ன செய்யிறது..?

தன்ர காலத்தில தாங்கள் வலு கட்டுப்பாடா இருந்தவையாம். இப்ப எல்லாம் கெட்டுப்போச்சாம் எண்டு சொல்ல எனக்கு ஆச்சரியமாக்கிடந்தது. எட.. எல்லா இடத்திலையும் இதுதான் பிரச்சனையோ..?

நானும் ஏதாவது சொல்ல வேணும் எண்டிட்டு.. உது தலைமுறை மாற்றம் எண்டு சொன்னன். அது மாறேக்க சில பழக்க வழக்கங்களும் மாறும் தானே எண்டும் சொன்னன்.

மனிசிக்கு கோபம் வந்திருக்க வேணும்.. காலம் மாறும்.. ஆக்களும் மாறுவினம்.. ஆனால் கடவுள் ஒராள்தான் அவர் மாறேல்ல.. அவர் எல்லாத்தையும் பாத்துக்கொண்டிருக்கிறார் எண்டு அவ லெக்சர் அடிக்க தொடங்கினா.. நாங்கள் அவரை மதிக்க வேணுமாம்.

கடைசியில நான் என்ர இடம் வந்தோடனை இறங்கிட்டன். ஒண்டை மட்டும் வீடுவரை யோசிச்சு கொண்டு வந்தன்.

அதாவது.. நானோ இல்லாட்டி இண்டைக்கு ரெயினில கொஞ்சிக்கொண்டு போன அந்த இளைஞனோ அல்லது அந்தப் பெண்ணோ.. வயசான பிறகு.. அதாவது கிழடுகள் ஆன பிறகு எங்காவது அகப்படும் ஒரு அப்பாவியிடம் இப்படிச் சொல்லிக் கொள்வோம்..

எங்கடை காலத்தில நாங்கள் வலு கட்டுப்பாடா இருந்தம். இப்ப சுத்த மோசம்!

4 Comments:

Anonymous Anonymous said...

//முன் சீற்றில ஒரு இளம் பெடியும் பெட்டையும் ஒருத்தரை ஒருவர் கட்டிப்பிடிச்ச படி கொஞ்சுப் படுறதும் குலவுப்படுறதுமா இருந்திச்சினம். நான் என்ரை பாட்டில இருந்தன். வழமையா வாற ஒரு சில பெருமூச்சுக்கள் கூட இல்லை.//

சீக்கிரம் கரை சேர்க!

9:50 AM  
Blogger Sri Rangan said...

சயந்தன்,நல்ல தர்க்கரீதியான பதிவு.தலைமுறைக்குத் தலைமுறை சொல்லும் அலுத்துப்போன விதண்டா வாதத்தை-தலைமுறை இடைவெளியைச் சொல்கிறீர்கள்.பதிவு உண்மையிலேயே பலவற்றைச் சொல்கிறது.பப்பாவில் ஏற்றவில்லை,உங்கள் சிந்தனை'ஏன்'எதற்கு,எப்படியென்று சுழல்கிறது.சுவாரசியமாக எழுதுவதும்,ஒரு சின்னப் பொறியைச் சுட்டுவதும்கூட அற்புதமாகப் பதிவாக்கலாமென்பதற்கு -இப் பதிவு உதாரணம்.
அன்புடன்
ஸ்ரீரங்கன்

11:48 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: துளசி கோபால்

//வெள்ளைக்கார ஆச்சி// :-)))))))))

14.25 26.10.2005

6:28 PM  
Blogger Unknown said...

நீங்க எழுதிய பதிவு எனக்கு சற்று புரிய கடினமாகவே இருக்கிறது இருப்பினும் சற்று முட்டி மோதி படித்துவிட்டேன் எல்லா கெழடுங்களுமே இப்படிதான் நம்பலால இப்ப இப்படிஎல்லாம் இருக்கமுடியலே என்ற பொல்லாப்பு அதான் அந்த இலசுகளை பாத்து இப்படி சொல்லுது அதுக்கு நம்ம ஒன்னும் செய்யமுடியாது அது அவங்கலோட இயலாமையை இப்படி வெளிபடுத்தறது.

7:04 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home