8.3.05

ஆமியும் அரிசியும்

இந்திய ராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் யாழ்ப்பாணத்திலை ஒரு குறிப்பிட்ட காலத்தில உணவுத் தட்டுப்பாடு இருந்தது. முருங்கைக்காய் கறி, இலைக் கஞ்சி இப்படி ஏதாவது ஒன்று கண்டிப்பாக எல்லோரது சமையலிலும் இருக்கும்.

பாணுக்காக அதிகாலையிலேயே எழுந்து ஓட வேண்டியிருக்கும்!
ஆட்டுக்கால் விசுக்கோத்து (பிஸ்கற் என்பதன் சரியான தமிழ் வடிவம் என்ன என்று யாருக்காவது தெரியுமா?) என்ற ஒரு வகைப் பாண் அப்ப ரொம்ப பிரபல்யம். கொஞ்சம் பிந்திப் போனாலும் பாண் முடிந்து அந்த ஆட்டுக் கால் விசுக்கோத்துத் தான் கிடைக்கும்.

எனது பெரியப்பா விடிய வெள்ளனவே என்னையும் ஏற்றிக் கொண்டு சைக்கிளில் பறப்பார். சில வேளைகளில் பாண் கிடைக்கும். சில வேளைகளில் ஆட்டுக்கால் விசுக்கோத்துத்தான்.

இதற்கிடையில் பங்கீட்டு அடிப்படையில் இந்திய ராணுவமே உணவு வழங்க தொடங்கியது. அரிசி மா சீனி பருப்பு மற்றும் எண்ணெய் என்பன வழங்கப்பட்டன.

பொதுவாக இள வயதுள்ளவர்கள் இவற்றை வாங்க செல்வதில்லை. வயது போனவர்கள் தான் அதிகம் போவார்கள்.

எப்போதெல்லாம் ஆமி சாமான் குடுக்குதாம் என்று கேள்விப் படுகிறோமோ ( ஒழுங்கு முறையில் வழங்கப்படுவதில்லை.) ரண்டு மூன்று பைகளை எடுத்துக் கொண்டு ஓடுவது தான் எங்களுக்கு வேலை.

அப்ப சிறுவர்கள் தான் ரொம்ப Busy..

யாராவது இளம் வயதுள்ளவர்.. அல்லது கொஞ்சம் வலுவான தோற்றமுள்ளவர் எங்காவது தூர இடங்களுக்கு போவதென்றால் ஒரு சிறுவனையோ சிறுமியையோ தன்னுடன் கூட்டி செல்வார்.

அப்ப தான் ஆமி ஒண்டும் செய்யாது எண்ட ஒரு ஐதீகம்!!!

எங்காவது ஒரு சந்தியில் ஆமி எல்லாரையும் மறிக்கும். எல்லாரும் இறங்கி உருட்டிச் செல்ல வேணும். ஒரு இடத்தில ஒருவர் முகத்தை முழுவதுமாக மறைத்து நிற்பார். அவரைப் பார்த்தவாறு நடந்து செல்ல வேண்டும்.
அவர் இல்லை என்று தலையாட்டினால் மேற்கொண்டு போகலாம். ஆம் என்றால் அவ்வளவும் தான்.

அப்படி தலையாட்டுபவரை தலையாட்டி என்று செல்லமாக கூப்பிடுவோம்.

சந்தியிலை தலையாட்டி நிற்குதாம் வேறை றோட்டாலை போங்கோ இப்படி அடிக்கடி யாராவது சொல்ல கேட்கலாம்.

அந்தத் தலையாட்டி தன்னுடைய எந்த சொந்தப் பிரச்சனையை - அது காணிப் பிரச்சனையோ ,வேலிப் பிரச்சனையோ - மனசில் வைச்சும் தலையாட்டலாம். அப்படி தலையாட்டினால் அதுவே முடிந்த முடிவு.

இவ்வாறான ஒரு அதி நம்பகத்தன்மை வாய்ந்த எதிரிகளைக் கண்டறியும் (கண்டறியாத!!!) முறையினை ராணுவம் பயன்படுத்திக் கொண்டிருந்தது.

சிலர் சிறுவர்களை விட குழந்தைகள் இன்னும் பிரயோசனமானவர்கள் என்று கருதி யாருடை குழந்தைகளையாவது தூக்கி செல்வதுமுண்டு.

வெயிலில் குழந்தைகள் அழ கூடிய சீக்கிரம் தங்களை ஆமி விடும் என்கிற ஒரு நம்பிக்கை!

இவ்வாறான ஒரு புறச் சூழ்நிலையில் !!! நானும் ஆமியிடம் சாமான் வாங்க போனேன்.

வழமையாக நானும் பெரியப்பாவும் தான் போவது வழக்கம். சில நேரங்களில் அம்மம்மாவும் வருவா.

வட்டுக் கோட்டைச் சந்தியில் சாமான் குடுத்துக் கொண்டிருந்தார்கள்.

நீண்ட வரிசை

ஒரு ஆமி மா குடுக்கும். (அவர் முழுதும் வெள்ளையாய் நிற்பார்). இன்னொருவர் அரிசி. (இப்பிடி அரிசி எண்டு எழுதும் போது பசிக்கு அரிசி என்ற பதமும் வாய்க்கு அரிசி என்ற பதமும் சேர்ந்தே நினைவுக்கு வருகிறது.)

நாங்கள் ஒரு ரண்டு மணித்தியாலமா வரிசையில நிற்கிறம். எங்கடை முறை வர இன்னும் நேரமிருக்கு. இதுக் கிடையில எங்கட அம்மம்மா ஆமிக்கு கிட்ட போய் என்னைக் காட்டி சின்னப் பிள்ளையோடு வந்திருக்கிறன். (அப்ப நான் சின்னப் பிள்ளை !) கெதியா விட முடியுமோ எண்டு கேட்டா. அதுக்கு அந்த ஆமி மற்ற எல்லாரையும் காட்டி ஏதோ சொன்னான்.

ம்.. வந்திருந்த முக்கால்வாசிப் பேர் குழந்தைகளோடும் சிறுவர்களோடும் தான் வந்திருந்தவை.

கொஞ்சம் கொஞ்சமாய்க் கிட்ட வந்திட்டம். எனக்கு கால் வேறை உளையுது. நான் சிணுங்க பெரியப்பா சினக்கிறார்.

சரியா கிட்ட வராட்டிலும் இண்டைக்கு சாமான் வாங்கிடுவம் எண்டு நம்பிற அளவுக்கு கிட்ட வந்தாச்சு.

திடீரென்று ஒரு ஜீப்பொண்டு வந்து நிண்டது. அதிலை இருந்து பட படவெண்டு குதிச்சினம். எல்லாம் இழுத்துப் பூட்டிச்சினம்.
அந்தக் காம்பிற்கு அடுத்த காம்பில பொடியள் கிரேணைட் எறிஞ்சு ரண்டோ மூண்டு ஆமி செத்துப் போச்சுதாம். அதுவும் இங்கையிருந்து போய்த்தான் எறிஞ்சவங்களாம். எல்லாரையும் உடனை செக் பண்ண தொடங்கினாங்கள்.

சாமான் தருவதை நிப்பாட்டியதாயும் இன்று போய் இனி நாளை வரும் படியும் சொன்னார்கள். (இராம நாட்டிலிருந்து வந்தவர்கள் தானே! இதைச் சொல்லத் தான் நேற்றொருவர் பகிடியாய்ச் சொன்னது நினைவுக்கு வருது. இலங்கைக்குள் நுழைந்த முதல் றோ உளவாளி அனுமர் தானாம்.)

பிறகென்ன.. நான் வெயில் என்று சிணுங்க பெரியப்பா தலையிலை ரண்டு தட்டு தட்டி கூட்டிக் கொண்டு போனார்.

நான் சிணுங்கியதால் தட்டினாரா அல்லது சாமான் தரவில்லை என்று தட்டினாரா என்று தெரியவில்லை.

பிற்குறிப்பு: பலதடவைகள் இப்படி இடை நடுவில் வந்திருக்கிறோம். இப்படி ஏதாவது நடந்திருக்கும். அல்லது சாமான் முடிந்திருக்கும். இருந்தாலும் இன்று போய் இனி நாளை வா என்று சொன்னாலும் நாளை போய் வென்று வந்த சம்பவங்களும் இருக்கிறது.

12 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: muulai

உங்கள் அனுபவங்கள் நகைச்சுவை கலந்து நீங்கள் எளூதினாலும் அந்த நேரம் தமிழ் சனம் பட்ட துன்பத்தை காட்டுகிறது.தொடர்ந்து பதியுங்கள்.

20.34 8.3.2005

11:44 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Kangs (http://zendaily.blogspot.com)

//இனி நாளை வா என்று சொன்னாலும் நாளை போய் வென்று வந்த சம்பவங்களும் இருக்கிறது//
நல்ல பதிவு.
//இந்திய ராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் //
இந்தியா ஆக்கிரமித்ததா? (அ)
அமைதி காக்க வந்ததா?
அமைதி காப்பவர்தானே உங்கள் வீட்டிற்கு உண்பண்டங்கள் கொடுக்க இயலும்

14.32 8.3.2005

11:47 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ஷியாம்

//அமைதி காப்பவர்தானே உங்கள் வீட்டிற்கு உண்பண்டங்கள் கொடுக்க இயலும்//
Simple theory!!!
--தமது ஆக்கிரமிப்பு மற்றும் மீறல்கள் தெரியா வண்ணம் எல்லா நாட்டு ஆக்கிரமிப்பு இராணுவங்களும் செய்யும் ஒரு யுக்தியைத்தான் அவர்களும் செய்திருக்கிறார்கள். ஈராக்கில் இப்போது அமெரிக்க இராணுவம் அங்குள்ள மக்களுக்கு அரிசியும் பருப்பும் கொடுத்துக்கொண்டிருக்கக் கூடும்--

6.59 9.3.2005

12:10 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Dondu

testing

8.27 9.3.2005

7:11 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

"அந்தக் காம்பிற்கு அடுத்த காம்பில பொடியள் கிரேணைட் எறிஞ்சு ரண்டோ மூண்டு ஆமி செத்துப் போச்சுதாம். அதுவும் இங்கையிருந்து போய்த்தான் எறிஞ்சவங்களாம். எல்லாரையும் உடனை செக் பண்ண தொடங்கினாங்கள்"
பொடியள் மற்றும் பெண்களையெல்லாம் இந்த வேலைக்கு உபயோகித்தால் ஆமி வேறு எவ்வாறு எதிர் ஆக்கம் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்? இம்மாதிரி வேலைகள் செய்தால் பரஸ்பர நம்பிக்கைத்தானே பாதிக்கப்படும்? அமைதிப் படை என்றுப் பெயர் கொடுத்து அவர்கள் கைகளைப் பின்னால் கட்டியதும் இம்மாதிரியான விபரீதங்களுக்கு ஒரு காரணமே. அமைதிப் படை கையொப்பம் முடிந்து ராணுவ மரியாதையின் போது ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதைத் தொலைக் காட்சியில் பார்த்ததுமே தோன்றி விட்டது, இது விபரீதங்களுக்குத்தான் வழி வகுக்கும் என்று. அதே போலத்தான் நடந்தது.
இவ்வளவு நடந்தப் பின்னாலும் பாலசிங்கத்துக்கு வைத்திய உதவி எதிர்ப்பார்த்துக் கேட்டதும், அதற்கு சிலர் இங்குத் தமிழகத்தில் பரிந்துப் பேசி குதித்ததும் விந்தையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

7:13 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: சீலன்

அன்ரன் பாலாண்ணைக்கு வருத்தம் மாறினாலும் டோண்டு அண்ணைக்கு அது மறக்காது போல. உண்மையில் நோர்வேயிலை மருத்துவ சிகிச்சை எல்லாம் முடிச்ச பிறகு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில இருக்க வேண்டிய தேவை இருந்தது. பேச்சுக்களில் கலந்து கொள்ள அடிக்கடி வன்னி செல்ல வேண்டியிருந்ததனால் அருகே தமிழகத்தில் அல்லது கேரளாவில் தங்கியிருக்க அனுமதி கேட்டார்கள். இப்படித்தான் புலிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இலங்கைப் பிரச்சனையில் தற்போதைய இந்திய நிலை எப்படி இருக்கிறதென்பதை அறியத் தான் புலிகள் அவ்வாறு கேட்டார்கள் என்று நான் நினைக்கிறன். இதன் மூலம் தமது தடை தொடர்பான சில சாதக விளைவுகளையும் எதிர்பார்த்திருக்கலாம். அவ்வளவும் தான். அதை விடுத்து மருத்துவ உதவி கேட்டிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். அதற்கு நோர்வே தாய்லாந்து யப்பான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என்று மனித நேயம் மிக்க பல நாடுகள் இருக்கின்றன.

14.29 9.3.2005

7:48 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: R.Sivarsa

உனக்கு வேற வேலை இல்லையோ பேயா.

12.3 6.4.2005

10:34 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: J.Karunakaran.

தாய்மண்ணை பற்றி எங்கை சுகபோகமாக இருந்து எழுதிறாய் மடையா.அந்தளவு பற்று இருந்தா சொந்த மண்ணில போய் போராடு.சும்மா நடிக்கிறியள்.மண்ணாங்கட்டி.

12.40 6.4.2005

11:12 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

"அன்ரன் பாலாண்ணைக்கு வருத்தம் மாறினாலும் டோண்டு அண்ணைக்கு அது மறக்காது போல."
எப்படி ஐயா மறக்கும்? தமிழக மக்களுக்குப் பிரியமான நேருவின் பேரனைத் தமிழக மண்ணிலேயே சாய்த்தவர்களை இன்னும் தூக்கிலேற்றாமல் இருக்கப்படும் வரை இது மறக்காது. அதுவும் அவர்களின் தலைவன் இது ஒரு துன்பியலான சம்பவம் என்று வேறுப் பசப்புவதைப் பார்க்கும் போது?
அன்புடன்,
டோண்டு ராகவன்

11:41 PM  
Blogger வன்னியன் said...

//எப்படி ஐயா மறக்கும்? தமிழக மக்களுக்குப் பிரியமான நேருவின் பேரனைத் தமிழக மண்ணிலேயே சாய்த்தவர்களை இன்னும் தூக்கிலேற்றாமல் இருக்கப்படும் வரை இது மறக்காது. அதுவும் அவர்களின் தலைவன் இது ஒரு துன்பியலான சம்பவம் என்று வேறுப் பசப்புவதைப் பார்க்கும் போது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//

டோண்டு!
இதையே ஈழத்தவர் பார்வையில் கொஞ்சம் திருப்பிப் பாருங்கள். ஆயிரம் மடங்கு அந்தக் கொலையை நியாயப்படுத்தலாம்.

2:22 AM  
Blogger வன்னியன் said...

துன்பியல் சம்பவம் என்று சொல்லவாவது தமிழர் பக்கம் மனசிருக்கிறது. அதுகூட இந்தியப்பக்கம் இல்லையே. உயிரின் விலை ஆட்களைப் பொறுத்து மாறுபடுமா? ஒரு முறை தெளிவுபடுத்துங்கள். மேலும் சயந்தனின் பதிவு சாதாரண ஒரு சம்பவத்தைப் பதியும் முயற்சியே. இதிலே நீங்கள் தூக்கிப் பிடிக்க எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. தேவையற்ற விதத்தில் ஒரு விவாதத்தைத் தொடங்க விரும்புவதாகவே தெரிகிறது.

2:26 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: சேயோன்

கொலை செய்வதில்லை என்று.. களையெடுப்புக்களில் ஒரு சில பயிர்களும் தவறுதலாக எடுக்கப்படலாம்.. ஆனால் இது தவறும் அல்ல..
உணர்ச்சிப் போராட்டத்தை இந்திய மூன்றாந்தர அரசியல் ஆக்குவதை பொறுக்க முடியுமா???

13.46 9.3.2005

11:13 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home