29.1.07

கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க..

உங்களுக்கு வேலையற்ற நேரம் இருக்கிறதா..? இருந்தால் இந்த அலட்டலைக் கேளுங்கோ.. சென்னையில் உள்ள எனது நண்பர் சோமிதரனும் நானும் வலைப்பதிவுக்காக அலட்டியதன் ஒலிப்பதிவு இது. இலங்கைத் தமிழ் நல்ல தமிழ் சென்னைத் தமிழ் ஊடகத் தமிழ் என்பவை பற்றி பலதும் பத்துமான உரையாடல். வழமை போலவே ஆயத்தங்கள் ஏதுமின்றி வழ வழா கொழ கொழா என்று கதைத்துவிட்டு பிறகு நேரக் கணக்கிற்கும் விசயக் கணக்கிற்கும் ஏற்ப வெட்டியதும் கொத்தியதும் போக மிச்சத்தை உங்கள் செவிகளுக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஒலிப்பதிவு தரமாக இருக்கிறது. இரு பக்கமும் கணணியூடாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட இப் பதிவில் சில இடங்களில் நேரடியாக ஒலிப்பதிவு செய்தது போன்ற தோற்றம் வருகிறது. நன்றி voipcheap.com

இதனையும் எனது பிரேத்தியேக player ஊடாக வெளியிடுகிறேன். கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க.. இது ஒரு Tea with sayanthan





26.1.07

ஒரு வழியாய் முடித்தாயிற்று

நிறைய நாளாக எனக்கே எனக்காக ஒரு Audio player செய்ய வேண்டும் என்ற ஆசை இன்று ஒரு 50 வீதம் நிறைவுக்கு வருகிறது என நினைக்கிறேன். வழமையாகக் குரல்ப் பதிவுகள் போடும் போது Real player பயன்படுத்துவது தான் வழமை. ஆனால் அது பலரைச் சென்றடைவதற்கான வாய்ப்பு இல்லையென்பதனால் வேறேதாவது Players பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் Flash இல் முயற்சி செய்யத் தொடங்கினேன். இணையத்தில் விழுந்து எழும்பிப் புரண்டு நிமிர்ந்ததில் கிடைத்த துணுக்கு அறிவினைக் கொண்டு Flash மற்றும் xml இல் தயாரித்த இந்தச் சாரல் ஒலியை வெள்ளோட்டத்திற்கு விடுகிறேன். வழமை போலவே இதுவும் என்னைக் கவிழ்க்கலாம்.

இப்போது நான் அடிக்கடி முணுமுணுக்கின்ற பாடல் தான் இங்கும் ஒலிக்கும்.
H. ஜெயராஜ், தாமரை, கெளதம் கூட்டணி பிடித்தவர்களுக்கு இந்தப் பாடலும் பிடிக்கும்.

சோமிதரன்.. அடுத்தது உனதுடனான அலட்டல் ஒலிப்பதிவுதான்.




25.1.07

பழைய இரும்புக்கு பழம் வாங்கியிருக்கிறியளா?

கானா பிரபா மாம்பழங்கள் பற்றி எழுதிய போது நினைத்திருந்த பதிவு இது.
பின்னர் மலைநாடான் பாலைப் பழங்கள் (பால்ப் பழம் என்றால் யார் கேட்கப் போறாங்க..?) பற்றியெழுத அவரின் வழி சிநேகிதியும் அம்பிரலாங்காய் குறித்து எழுதியாயிற்று.

இது என் முறை. எல்லாருக்கும் ஒவ்வொரு பழங்கள் பிடித்தது போலவே எனக்கு நிறையப் பிடித்தது ஐஸ்பழங்கள். (தமிழ்நாட்டில் இதனை குச்சி ஐஸ் என்பர்). 50 சதம் விற்றுக் கொண்டிருந்த போது அறிமுகமானது இந்தப் பழம். மத்தியானத்துக்கும் பின்னேரத்துக்கும் இடைப்பட்ட நேரங்களில் சைக்கிளில் மணியடித்துக் ஐஸ்பழக் காரர் வர ஆரேனும் 50 சதம் தரமாட்டினமோ எண்டு மனம் அலைபாயும். அந்த நேரம் கோன் கிறீம் 2 ரூபா வித்தது. எண்டாலும் அது எங்கையாவது கோயிலுக்குப் போனாத்தான் வாங்கித் தருவினம். மற்றும் படி வீடுகளில இருக்கிற நேரம் ஐஸ்பழம் தான்.

ஞாபகப்படுத்திப் பாத்தால் ஐஸ்பழம் சிவப்பு நிறத்திலையும், மஞ்சளும் ஒரேஞ்சும் கலந்த ஒரு நிறத்திலையும் தான் அதிகம் இருந்தது போல. நீல நிறத்திலையோ பச்சை நிறத்திலையோ அதை நான் பாத்ததில்லை.

ஐஸ் பழக்காரர் ஒரே பெட்டியிலயே ஐஸ்பழங்களையும், கிறீமையும் வைச்சிருந்து எடுப்பார். சில வேளை பெட்டியை ரண்டாப் பிரிச்சு வைச்சிருப்பார் எண்டு நினைக்கிறன். முன்னாலை கோன் பிஸ்கற்றை அடுக்கி வைத்திருப்பார். சில வசதியான ஐஸ்பழக்காரர் சைக்கிள் டைனமோவில பாட்டும் போட்டுக் கொண்டு வாறவை. ஆனா மணிச் சத்தம் தான் பிரசித்தம்.

எங்கடை அம்மம்மா கச்சான் விக்கிற படியாலை அதுக்கான பைகளை ஒட்டிக் குடுத்தால் 25 சதம் அல்லது 50 சதம் தருவா. அல்லது கச்சான் விற்கும் போதும் நேரை கோவிலுக்குப் போய் அம்மம்மாவை ஒரு அப்பாவிப் பார்வை பாத்துக் கொண்டு நிண்டா ஐஸ்பழம் வாங்கக் காசு தருவா.

இதெல்லாத்தையும் விட அந்த நேரம் ஒரு நடைமுறையிருந்தது. ஐஸ்பழக் காரரிடம் ஏதாவது பழைய இரும்பைக் குடுத்தால் அவர் ஐஸ்பழம் தர மாட்டார். ஆனா ஒரு தட்டையான பிஸ்கற்றில கொஞ்சக் கிறீம் போட்டுத் தருவார். இதனாலை எங்கடை வீட்டில இருந்த பழைய நெளிஞ்ச புட்டுப்பானை, வாளிக் கம்பி இதெல்லாம் அந்தரத்தக்கு எனக்குக் கை கொடுத்திருக்குது.

ஒரு முறை.. எங்கடை வீட்டுச் சாமியறைக்குள்ளை சாமிக்குத் தண்ணி வைக்கிறதுக்கெண்டு (ஒரு கமண்டலம் இருந்தது. கமண்டலம் அங்கை அப்ப அரிதான பொருளாம். (கமண்டலம் தானா சரியான பெயர் எனத் தெரியாது. அகத்தியர் வைச்சிருந்தாரே அது ) அந்தக் கமண்டலம் ஒரு நாள் வீட்டில இருந்து காணாமல் போனது. கடைசியில சரியான விசாரனைகளுக்குப் பிறகு அதை நான் தான் ஐஸ்பழக் காரருக்கு குடுத்தனான் எண்டதை ஒப்புக் கொள்ள வேண்டியதாப் போச்சு. எண்டாலும் வழமையா வெறும் பிஸ்கற்றில கிறீம் பூசித் தாற ஐஸ்பழக் காரர் கமண்டலத்துக்கு ஒரு முழு ஐஸ்பழமே தந்தார் எண்டால் பாத்துக் கொள்ளுங்கோவன்.

ஐஸ்பழங்களிலயும் நிறையச் சுவையள் இருக்கு. சிலது முடியும் வரை நாவுக்குச் சுவை தரும். சிலது ஒரே உறிஞ்சலில, நிறமும் போய், சுவையும் போய் வெறும் ஐஸ்கட்டியா குச்சியில ஒட்டிக் கிடக்கும்.

காலம் போகப் போக ஐஸ்பழ வாகனங்கள் ஊருக்குள்ளை வரத் தொடங்கின. சினிமாப் பாட்டுக்களைப் போட்டு விட்டு குழந்தைகள் இருப்பதாய் அவர்கள் அவதானிக்கிற வீடுகளில் நெடுநேரமாய் நிறுத்தி வைத்திருப்பார்கள். அவர்களிடம் அறிமுகமானது தான் ஐஸ் சொக்.
வெளியே சொக்லெற் பூசப்பட்ட, உள்ளே பாற் சுவையில் (ஐஸ் பழத்தைப் போலல்லாது கடைசி வரை நிண்டு நிலைக்கும் மாறாச் சுவை) நிறைய ருசியாக இருக்கும். அதுவும் கோன் கிறீமும் சமமான விலையில் விற்றன.

இரண்டு மூன்று பேர்களுடன் ஐஸ் பழம் வாங்கி அவர்கள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்து விட்டு அதன் பிறகு நான் குடிக்கத் தொடங்குவதில் ஒரு ஆனந்தம்.

ஒரு முறை கோவில் திருவிழா ஒண்டில் எனக்கு கோன் ஐஸ் கிரீம் ஒண்டு வாங்கித் தந்தினம். தனியக் கிறீமை மட்டும் சாப்பிட்டு விட்டன். கோன் பிஸ்கற் மட்டும் அப்பிடியே முழுசாக் கிடந்தது. மனசுக்குள்ளை ஒரு யோசினை. யாருமில்லாமல் நான் மட்டும் ஐஸ்பழ வாகனத்தை நோக்கிப் போனன். அங்கை ஆக்கள் எல்லாம் வாங்கி முடியட்டும் எண்டு காத்திருந்தன். ஒரு மாதிரி ஒரு இடை வெளி கிடைச்சுது. ஒரு தயக்கமாவும் கிடக்குது. பரவாயில்லை எண்டு நேரை போய் அண்ணாந்து வாகனத்துக்குள்ளை இருந்தவரைப் பாத்து வெறும் பிஸ்கற் கோனை நீட்டிக் கேட்டன்

இதுக்கை கொஞ்சம் கிறீம் போடுவியளே..?

அவருக்கு ஒரே சிரிப்பு. இங்கை என்ன சபையோ வைக்கிறம்.. ( சாப்பாட்டுப் பந்தி ) கறி முடிஞ்சால் போடுறதுக்கு..

நான் கொஞ்ச நேரம் அப்பிடியே நிண்டன். பிறகு வந்திட்டன். என்ர கஸ்ர காலம் பரன் எண்டொரு அண்ணை அதை கண்டு வீட்டை சொல்ல.. எல்லாற்றை மானத்தையும் நான் காத்தில பறக்க விடுறதா ... பிறகென்ன வழமையான பூசை தான்.
கிராமத்தின் பாடசாலையை விட்டு நகரப் பாடசாலைக்கு பெயர்ந்த காலங்களில்த்தான் எனக்கு கூல்பார்களும் கப்பில் போட்டுச் சாப்பிடும் ஐஸ்கிறீம்களும் அறிமுகமாயின. அப்போது கூட நோர்மல் ஸ்பெசல் என்ற இரண்டு வகைதான் பாவனையிலிருந்தது. சொன்னா நம்ப மாட்டியள்.. 6 ம் ஆண்டு நகரப் பாடசாலைக்கு வந்த பிறகு முதலாம் தவணைச் சோதினையில 7ம் பிள்ளையா வந்த எனக்கு அடுத்த முறை 3ம் பிள்ளைக்குள்ளை வந்தால் ஒரு ஸ்பெசல் ஐஸ்கிரீம் வாங்கித் தரப்படும் என வாக்குறுதி தரப்பட்டது. என்னால் நிறைவேற்ற முடியேல்லை எண்டாலும் ஐஸ்கிரீம் கிடைச்சது.

அதுவே அடுத்த ஐந்தாறு வருடங்களில் 20ம் 25 ம் பிள்ளையாக வந்த போது எனக்கு எதுவும் வாங்கித் தருவதாய் எவரும் சொல்ல வில்லை. அந்த நேரங்களில ஆசைப் பட்டதை வாங்கித் தரவும் முடியாது தானே.

22 ம் திகதியும் 25ம் திகதியும்


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


24.1.07

பனி விழும் இரவு

நேற்றைய இரவில் இருந்து இங்கு பனிப் பொழிந்து கொண்டிருக்கிறது. அதிகாலை 6 மணிக்கு புகையிரத நிலையத்திற்கு செல்ல கால்கள் புதையப் புதைய நடக்க வேண்டியிருந்தது. முதல் முறை.. அதனால் ஒரு வித கிளர்ச்சி.. நாளாக நாளாக அலுப்பினையும் எரிச்சலையும் தருவது உறுதி. படங்களின் மேல் கிளிக்குக..
wweeeeee

wweeeeee

22.1.07

படங்களில் நோண்டுதல்

சில்லென்ற தண்ணீரும் அழகிய மாலையும் அதோ தூரத்தில் பனி மலையும் இன்னும் ஒரு மொட்டை மரமும் வீடும். படங்களில் மேல் கிளிக்குக.

wweeeeee

wweeeeee

21.1.07

எனக்கெண்டொரு றேடியோ

தடங்கலுக்கு வருந்துகிறேன். சொதப்பிட்டுது. சரி வந்தது தான் வந்தியள். பக்கத்தில இருக்கிற என்ர பாடலை கேட்டுப் போங்கோ. அதுவும் புது றேடியோத்தான்.

20.1.07

உலக வலைப் பதிவுகளில் முதல் முறையாக

கொஞ்ச நாளுக்கு முன்னாலை வசந்தன் தன்ர வலைப்பதிவின்ர ரண்டாம் ஆண்டு நிறைவுக்காக ஏதாவது செய்ய இருக்கிறதாகவும் என்ன செய்யலாம் எண்டும் கேட்டார். வழமையா குரல் பதிவுகள் தான் அவரின்ர விசேசமான பதிவுகள். அதனாலை ஒரு குரல் பதிவைப் போடும் எண்டு சொன்னன். சரியெண்டு அவரும் அதைப்பற்றிக் கதைச்சக் கொண்டிருக்கும் போது இதை ஒரு கலந்துரையாடல் குரல்ப்பதிவாப் போடலாமே எண்டு நான் தான் அவருக்குச் சொன்னன்.

ஏற்கனவே வானொலிக்காக சிலரைச் செவ்வி கண்டு அதனை நேரடியாக கணணியில் ஒலிப்பதிவு செய்த அனுபவம் இருந்தபடியாலை இது பெரிய அளவில் கஸ்ரமாக இருக்கவில்லை.

அதுவும் ஒரு சதமும் செலவழியாமல் இந்த கலந்துரையாடல் நடந்தது. Voip தொழில் நுட்பத்துக்கூடாக அவரை தொலைபேசியில் அழைத்து இந்தக் கலந்துரையாடலை ஒலிப்பதிந்தன். நன்றி Voipcheap.com

ஆயத்தம் ஏதுமில்லாமல் செய்த படியாலை முழு ஒலிப்பதிவையும் கால் மணி நேரமளவக்குச் சுருக்க வேண்டியிருந்ததாலை அங்கங்கே வெட்டியதும் நான் தான். இதனாலை சிலநேரம் தொடர்ச்சித் தன்மை இல்லாமல் இருக்கும். இப்ப முழுசா கேட்ட பிறகு இன்னும் சிலதை வெட்டியிருக்கலாம் போல இருக்கு. ஆனா இனி வெட்டிப் பிரியோசனம் இல்லை.

வசந்தன் சயந்தன் அவ்வப்போது சிலரால் கிளப்பப்படும். கடைசியா குழம்பியவ தமிழ்நதி அக்கா. ஆரம்பத்தில் படு தீவிரமாக குழம்பியது மட்டுமல்லாமல் மற்றோரையும் குழப்பியவர் கறுப்பியக்கா.

பதிவை வசந்தன் வெளியிட்ட பின்னர்தான் வந்த கருத்துக்களின் அடிப்படையில் இதுவரை வலையுலகில் இப்படி யாரும் செய்திருக்கவில்லையெண்டு உணர முடிந்தது. இதை ஒரு தொடக்கமாக வைத்து இதுபோலவே வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடி வலையில் ஏற்றலாம். ஏற்றுவோம்.

இந்த ஒலிப்பதிவு கேட்பதற்கு இங்கே கிளிக்கவும்
நட்பு ரீதியில் கலாய்த்துரையாடிய இந்தப் பதிவின் மூலம் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் very very sorry.

17.1.07

பசுத்தோல் போர்த்திய புலிகளோ?

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வட்டுக்கோட்டையில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய இரண்டு பசுமாடுகளை இராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டார்கள் - சோமிதரன் (சந்தோசம் தானே மச்சான்..)ஆனந்த விகடன், 10.01.07

Photobucket - Video and Image Hosting

படம் - திரு கிளிநொச்சியிலிருந்து

15.1.07

ஜெருசேலம்

கூடி மகிழ்ந்திட்ட கோவில் வயல் வெளி
யாவும் இவர் இழந்தாரே - நேற்றுப்
பாடி மகிழ்ந்திட்ட ஊரைத் திறந்துமே
போகும் திசையறியாரே..
-புதுவை இரத்தினதுரை-

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting

படங்கள்: திரு - கிளிநொச்சி

14.1.07

பொங்கல் நினைவுகளும் சோமிதரனும்

84 இல் அத்திவாரக் கல்லிட்ட எங்கள் வீடு முழுமை பெற்று முடிந்தது 94 இல் சந்திரிகா கொண்டு வந்த அரையாண்டுச் சமாதான காலத்தில்த் தான் என்றாலும், 88 களிலேயே பூச்சற்ற சுவர்களுடனும், ஒன்றிரண்டு பிரதான கதவுகள் தவிர மொட்டையாக நின்ற வாசல்களுடனும் இருந்த வீட்டினில் நாங்கள் குடி வந்திருந்தோம். ஆயினும் 95 வரை எங்கள் வீட்டீல் எத்தனை தடவை பொங்கல் கொண்டாடியிருக்கிறோம் என்றால் எனக்கு நினைவு தெரிய இரண்டு அல்லது மூன்று தடவைதான்.

அந்தக் காலங்களில் அதிகம் பொங்கல் கொண்டாடியது எனது பெரியப்பா வீட்டில்த் தான். பொங்கலுக்கு முன்னைய இரவில் வந்து அவர் அழைத்துச் செல்வார். மின்சாரமற்ற அப்போதைய யாழ்ப்பாணம் எட்டு மணிக்கெல்லாம் உறங்கி விடும். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கிணற்றில் சில் என்ற தண்ணீரில் முழுகி விட்டுத் திரும்பினால் பெரியப்பா தனது வேட்டியொன்றைக் கட்டி விடுவார்.

அப்போது வெடிகள் வெடிக்கின்ற வழக்கம் எல்லாம் இல்லை. பட்டாசுகளைப் பயன்படுத்திப் புலிகள் ஏவுகணைகளைத் தயாரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அவை யாழ்ப்பாணத்துக்கு தடை செய்யப் பட்டிருந்தன.

(பிற்காலத்தில் இதற்கான மாற்றீடு ஒன்றினை நானே தயாரித்துப் பயன்படுத்தியிருக்கிறேன். அப்போதைய, காலத்துக்கு உதவாத தொலைக்காட்சி அன்ரனாவின் உணர் கம்பிகளை சிறிய அளவில் வெட்டி உள்ளே தீக்குச்சி மருந்துகளை அடைந்து இரண்டு பக்கத்தினையும் குறட்டினால் அமத்தி மூடிவிட்டு அதனை துணி கொண்டு சுற்ற வேணும். அதனை ஒரு தடவை மண்ணெண்ணையில் தோய்த்து எடுத்து விட்டு எங்காவது தூர இடத்தில் - இது முக்கியம் - வைத்து தீ மூட்டினால் சில நிமிடங்களில் டமார். பின்னர் குண்டு வெடித்த இடத்திற்குச் சென்று வெடித்துச் சிதறிய அன்ரனா கம்பியின் சிதறல்களைத் தேடி எடுப்பதுவும், அது எப்படிச் சிதறியிருக்கிறது என ஆராய்வதும் இன்னொரு பொழுது போக்கு. சில வேளைகளில் வெடிக்காது. அடைக்கப்பட்ட கம்பி ஏதாவதொரு பக்கத்தால் திறந்து புஸ் ஆகிவிடும். அது Mission Fail)

கோலங்களில் புள்ளிகள் கோடுகள் வளைவுகள் என பலவகை உள்ளன என்பதை நான் அறிந்து கொண்டது பிறகு தான். முன்னைய காலங்களில் எனக்கு தெரிந்த ஒரேயொரு கோலம் நீள் சதுரத்தில் வரைந்து ஒவ்வொரு மூலைகளிலும் வளைவுகள் போடும் கோலம் தான். ஒவ்வொரு பக்கத்திலும் வாசல் வேறு வைப்பார்கள்.

உலக்கையொன்றினைப் பயன்படுத்தி அதன் நடுவில் மாவினை இட்டு வர அது Double border கோலமாகும்.

பொங்கலுக்கான அடுப்பு இரு வாரங்களுக்கு முன்னரே தயாராகி விடும். பெரும்பாலும் ஒவ்வொருவரும் தமக்கென செய்து கொள்வார்கள். வாளிகளில் மண் குழைத்து அவற்றின் அச்சில் செய்யப்படும் அடுப்பு பின்னர் மாட்டுச் சாணம் கொண்டு பூசி மெழுகப்படும். எங்களுக்கான விசேட அடுப்பக்களை தயாரிப்பதற்கு டம்ளர் பயன்படுத்தப்படும்.

Photobucket - Video and Image Hosting

நான் கோலம் போடுவதற்கு சில தடவைகள் முயற்சித்திருக்கிறேன். முடியாத காரணத்தினால் பெரும்பாலும் உலக்கையை ஆடாமல் அசையாமல் பிடிக்கும் பொறுப்புத்தான் வரும். அதுபோலவே வீபுதி பூசிய அடுப்பிற்கு சந்தனப் பொட்டிடும் வேலையும் வரும்.

எல்லாம் சரியாகத்தான் போகும். ஆயினும் அடுத்த ஒரு விடயத்தினை நினைத்து பயந்து பயந்து மனம் இருக்கும். அது தேவாரம் பாடுவது. பொங்கலின் ஒரு கட்டத்தில் தேவாரம் பாட வேண்டும். அந்த நிகழ்வைக் கடக்கும் மட்டும், எங்கே என்னைத் தனிய பாட விட்டு விடுவார்களோ என லப் டப் அடித்துக் கொண்டேயிருக்கும். நாலைந்து பேரோடு சேர்ந்து பாடினால் கும்பலில கோவிந்தா போடலாம்.

பொங்கல் சூரியன் உதிக்கும் திசை நோக்கித்தான் பொங்கி வழியும் எனச் சொல்லி விட்டு அந்தத் திசையிலேயே பானையைச் சற்றுச் சரித்து வைப்பார்கள். பொங்கல் முடிய படையல் - அது முடிய எனக்கு எப்போதும் பிடித்தமான - நாவிற்கு சுவையை அடுத்தடுத்து மாற்றித் தரும் - புக்கை + வடை

-----இந்த இடத்தில கட் பண்ணி 2003 இல ஓப்பின் பண்ணுறம்-----

தீவில் சமாதான காலம். தைப்பொங்கல் 2003

யாழ்ப்பாணத்திற்கான பாதை திறக்கப்பட்டது. பட்டாசுகள் யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய பகுதிகளுக்கும் சென்றன. என்னோடு எனது வீட்டில் தங்கியிருந்தார் நண்பர் சோமிதரன். அப்போது சில வெளிநாட்டு வானொலிகளின் யாழ்ப்பாணச் செய்தியாளர் அவர். அன்றைய இரவு ஒரு வானொலியிலிருந்து சோமிதரனைக் கேட்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழா எப்படி இருந்தது?

சோமிதரன் ஆரம்பிக்கிறார்.

மிக நீண்ட காலத்தின் பின்னர் மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் மக்கள் கொண்டாடினார்கள். இங்கே இப்போதும் வெளியே வாண வேடிக்கைகளும் வெடிச் சத்தங்களும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.யாழ் நகரம் மிக பரபரப்பாக இருக்கிறதை காணக் கூடியதாக உள்ளது. உண்மையில் யாழ்ப்பாண மக்கள் மிக நிறைவுடன் தைப்பொங்கலை கொண்டாடியிருக்கிறார்கள். .............. ......... செய்திகளுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சோமிதரன்

நான் சோமியை ஆச்சரியமாகப் பார்த்தேன்.

இங்கை கட் பண்ணுற நாங்கள் வேறெங்கும் ஓப்பின் பண்ணப்போறதில்லை. இனி வருவது இயக்குனர் குரல்

2006 தைப்பொங்கலையொட்டிய காலம்தான். ஒஸ்ரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் தமிழகம் குறித்த ஒரு செய்தி ஆய்விற்காக சோமிதரனைச் செவ்வி கண்டு கொண்டிருந்தேன். அவர் அப்போது உண்மையிலேயே தமிழகத்தில் இருந்தார்.

நன்றி - அருச்சுனா இணையம்

13.1.07

அலை மீதேறிக் கரை தேடி 1

1997 மே 13 மதியம்

மன்னாரின் இலுப்பைக் கடவைக் கடற்கரையோரமாக நடக்கிறேன். போட்டிருந்த செருப்பு புதைய, கால்களைத் தொடும் மணல் சுடுகிறது. அலைகளின் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாய்க் கிடக்கிறது கடல். இன்று இரவு இந்தக் கடலின் அந்தக் கரை நோக்கிச் செல்லும் ஏதாவது ஒரு படகில் நான் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நாளைய இந்த நேரத்தில் ஏதாவது ஒரு அகதிகள் முகாமில் என் பெயரைப் பதிவெடுத்துக் கொண்டிருக்கக் கூடும்.

அல்லது ?

நாச்சிக்குடா கடலில் இருந்து தமிழகம் புறப்பட்ட ஒரு றோலர் படகு கரைக்கு வெகு சமீபமாகக் கவிழ்ந்ததில் 150 பேர் செத்துப் போய் சில காலங்கள் தான் ஆகியிருந்தது.

ம்.. ஒரு மூன்று மாத காலம் ஆகியிருக்கும்.

முல்லைத் தீவின் தேவிபுரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயையும் இரு பிள்ளைகளையும் வெறும் உடலமாக கொண்டு வந்து இறக்கினார்கள். செத்துக் கிடந்த மூத்தவன் வீதிகளில் கண்டால் சிரிப்பான். பேசிப் பழக்கமில்லை. ஆனால் அவர்கள் மூன்று பிள்ளைகள் என்று தெரியும்.

அன்றைய இரவே இன்னொரு பிள்ளையையும் பிணமாக கொண்டு வந்து இறக்கினார்கள்.

அந்தக் குடும்பத்தில் அந்தப் பொழுதில் அவர்களுக்காக அழுவதற்காக யாருமிருக்கவில்லை.

இதோ என்னையும் இந்தக் கடலுக்கு துரத்தி விட்டிருக்கிறது காலம். முல்லைத் தீவில் புறப்பட்டு வன்னியை குறுக்காக கடந்து முழங்காவிலுக்கு வந்த இரண்டு வாரங்களில் இலுப்பைக் கடவைக்கு இரண்டு மூன்று தடவை வந்து விட்டேன். அத்தனை தடவையும் புறப்படும் படகுகளில், ஏதாவதொரு காரணத்தினால் எனது பயணம் தள்ளித் தள்ளிப் போனது.

95 ஒக்ரோபர் யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கித் தொடங்கிய ஓட்டம் கொடிகாமம், எழுதுமட்டுவாள், முல்லைத்தீவு, முழங்காவில் என நீண்டு இன்று இலுப்பைக் கடவையில் வந்து நிற்கிறது, அடுத்த சுற்றுக்கு தயாராக.

இலுப்பைக் கடவையென்ற அந்த நிலத்தில் என்னால் இலகுவாக கரைய முடியவில்லை. எழுதுமட்டுவாள் ஆகட்டும், முல்லைத்தீவு ஆகட்டும் இயல்பாக, இலகுவாக அந்தச் சூழ்நிலைக்குள் என்னைக் கரைத்துக் கொள்ள முடிந்தது. இலுப்பைக் கடவையிடம் நான் தோற்றுத்தான் போனேன்.

கரையில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மருத்துவ முகாம் நடாத்திக் கொண்டிருந்தனர். வேறு மருத்துவ வசதிகள் அங்கு கிடையாது. ஏதாவது பாரதூரமான நோய்கள் எனில் அவர்களூடாக மன்னார் மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டும்.

எனக்குள் நிறைய எண்ண அலைகள்

கிளாலிப் பயணம் போலவே இதுவும் இருக்குமா?

கிளாலியில் கடந்தது, யாழ்ப்பாணத்தையும் வன்னி பெரு நிலப்பரப்பையும் இணக்கும் கடல் நீரேரி. நிலங்களுக்கிடையில் உள் நுழைந்த கடல்.

இங்கே கடக்கப் போவது இலங்கையையும், இந்தியாவையும் இணைக்கும் பாக்கு நீரிணை.

வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். பயணத்தில் நேவி கவிழ்ப்பானோ.. அலைகள் கவிழ்க்குமோ.?

கரையைப் பார்த்தால் அவ்வளவு அலைகள் இருக்காது போலத்தான் தெரிந்தது. முல்லைத்தீவில், மணற்காட்டில் சீறி உயர்ந்தெழுந்து கரை வரும் வங்க அலைகளுடன் ஒப்பிடுகையில் இந்தக் கடல் அமைதியின் சொரூபம். இருப்பினும் இடையில் கிளம்பலாம். எவர் கண்டார்?

மணற்காட்டில் ஒரு முறை கரையில் வந்து சுழற்சியை முடித்துச் செல்லும் அலையொன்றின் இடையில் சிக்கி என்னை முழுவதுமாய் தண்ணீர் மூடி உள்ளே வைத்துச் சுழற்ற, என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில், செத்துப் போகும் கணம் இதுதானாக்கும் என நினைத்தேன். பாவம் பிழைத்துப் போகட்டும் என அலை விட்டுப்போன இடத்தில் திக்கித் திக்கி திணறிக் குழறியது ஞாபகத்தில் வந்தது.

பயணத்தின் போது அரைக் காற்சட்டையும், உடலோடு ஒட்டிய ரி சேட்டும் போட வேண்டும். சப்பாத்தோ செருப்போ அணிவதில்லை என முன்பே நினைத்திருந்தேன்.

கடலில் நீந்தியிருக்கிறேன். நீச்சல் பழகியதே திருவடிநிலைக் கடலில்த் தான். ஆனால் இலக்குத தெரியாத நிலையில், எங்கு போகிறோம், எங்கு நிற்கிறோம் என்று தெரியாத சூழ்நிலையில், என்னால் நீந்த முடியும் என்ற எண்ணம் துளியும் எனக்கு இல்லை.

ஆயினும் ஐந்து பத்து நிமிடங்களாவது சாவைத் தள்ளிப் போடும் ஆசை அது. யாருக்குத் தெரியும், யாராவது மீனவர்கள் காப்பாற்றக் கூடும். அல்லது நேவியே பிடித்து சுட்டுக் கொல்வதற்கான மனநிலை இல்லா விட்டால் மன்னார் நீதி மன்றத்தில் நிறுத்தலாம். அதுவரைக்குமாவது நீந்தலாமே

இத்தனை கடந்து இது தேவைதானா? இந்தப் பயணத்தைத் தவிர்த்திருக்கலாமோ?
அலையும்

11.1.07

சோதனை மேல்...

தமிழ்மண பதிவு பட்டைக்கான பரிசோதனை

10.1.07

கவிதையில் களவு

சமீபத்தில்.. உண்மையாகவே சமீபத்தில் தான் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் சோமிதரனுடன் பேசிக்கொண்டிருந்த போது கொழும்பில் அவர் எழுதிய கவிதை ஒன்றினை எடிற் செய்து வெளியிட்ட முன்னைய சம்பவம் ஒன்று தொடர்பாக தனது காரசாரமான கண்டனத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். (.. மச்சான் எடிற் செய்தனோ.. இல்லை என்ன செய்தனோ.. இண்டைக்கு ஆனந்த விகடனில உம்மடை எழுத்துக்கு அவங்கள் செய்திருக்கிறதை விட மோசமாய் நான் ஒன்றும் செய்யவில்லை.)

1990ம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் நினைவு கூரப்பட்ட இரண்டாவது மாவீரர் தினம்.
யாழ்ப்பாண பகுதியெங்கும் முன்னெப்போதும் பின்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு வார காலம் அனுஸ்டிக்கப்பட்டது. 27 நவம்பர் 90 இறுதி நாளன்று எங்கள் ஊரிலும் ஒரு மேடை நிகழ்வு ஒழுங்கு படுத்தியிருந்தார்கள்.

அதில் நானாக ? எழுதி கவிதை வாசிக்கும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு நினைவில் உள்ள வரை இதுதான் நான் எழுதி வெளிக் கொண்டு வந்த முதலாவது கவிதை.

குரலிலும் உடம்பிலும் கொஞ்சம் நடுக்கத்தோடு வேட்டி கட்டி இரண்டு கைகளாலும் ஒலிவாங்கியை அழுத்திப் பிடித்து அந்த நீண்ட கவிதையை வாசித்துக் கொண்டிருந்த போது எனது வயது 10.

மாவீரர் தினம் வந்ததுவே மாவீரர் தினம் வந்ததுவே என ஆரம்பித்து சாவிலும் தம்மை சந்தனமாக்கினர் என்றவாறாக தொடர்ந்தது அக்கவிதை.

அப்போதே எனக்கு எதுமை மோனை பற்றிய புரிதல் இருந்தது. சொல்லப் போனால் எதுகை மோனையுடன் ஒரு ஓசைச் சந்தத்தில் எழுதினாலே அது கவிதைதான் என்ற நினைப்பும் இருந்தது. அது நிறைய நாளாக இருந்தது.

மாவீரர் தின கவிதை கூட முடிந்தளவு எதுகை மோனைச் சந்தத்துடன் தான் இருந்தது.

கவிதையை முடித்து வெளியேறிய அடுத்த நாள் எனது ஊரைச் சேர்ந்த ஒருவர் என்னைச் சந்தித்தார். அவர் அப்போது முரசொலி பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

-நல்ல கவிதை. தாருமன் பேப்பரில போடுவம்- என்று அவர் கேட்டார்.

ஏதாவது ஒரு ஆக்கத்துடன் எனது பெயரும் அச்சில் வரவேண்டும் என்ற தணியாத தாகம் இருந்த அந்தக் காலத்திலும் அவரது கோரிக்கைக்கு என்னால் இணங்க முடியவில்லை.

-வேண்டாம் அங்கிள். -

-ஏன்.. இது நல்லதொரு கவிதை.. தாரும்.. நான் கட்டாயம் போட்டு விடுறன்..-

-இல்லை அங்கிள்.. நான் சின்னப் பெடியன்.. போடுவினமோ தெரியாது..- உண்மையில் அந்த வாய்ப்பை எப்படியெல்லாம் தவிர்க்க முடியுமோ அதற்கெல்லாம் முயன்றேன். -அங்கிள் மாவீரர் பற்றின இந்த நினைவுகள் என்ர ஆத்ம திருப்திக்காக எழுதினது. இதை அச்சில ஏற்றி பிரபல்யம் தேட வேணும் எண்டு நான் நினைக்கவில்லை- என்று சொல்லியாவது சமாளிப்பதற்குரிய ஆக்குறைந்த வளர்ச்சி கூட அப்போது என்னிடம் இல்லை.

அவரோ விட்ட பாடில்லை.அவர் அப்போது முரசொலியில் முக்கிய பதவியொன்றில் இருந்தார்.

வேறு வழியில்லாமல் அழுத்தங்கள் காரணமாக எனது கவிதையை முரசொலியில் பிரசுரிக்க கையளித்தேன். அது மேடை வாசிப்புக்காக எழுதப்பட்டதால் நீண்டதாக இருந்தது. பத்திரிக்கையில் வெளியிடுவதற்காக எடிற் செய்ய வேண்டியிருப்பதாகவும் அதனை என்னை வைத்துக் கொண்டே செய்தால் இலகுவாயிருக்கும் என்றும் அவர் கூறி அப்போதே அந்த வேலையை ஆரம்பித்தார்.

-இந்த வரி நல்லாயிருக்கு.. இந்தப் பந்தி பெரிசா நல்லாயில்லை.. ம்.. இது சுப்பர்.. -இப்படியாக முழுக்கவிதையும் எடிற் செய்யப்பட்ட பிறகு உண்மையிலேயே அது ஒரு ரசனைக்கு உரிய ஆக்கமாக மாறியிருந்தது.

-உம்மடை பெயரை அச்சில கொண்டு வாற முதல் ஆள் நான்- தான் என்ற புளகாங்கிதத்துடன் அவர் புறப்பட்டார்.

மூன்று நாட்கள் ஆகிய நிலையில் நானும் ஒரு நப்பாசையில் வாசிக சாலையில் முரசொலியைப் பார்ப்பதுண்டு.

அதே வாசிக சாலையில் அவரை அடுத்தடுத்த ஒரு நாளில் பார்த்தேன். ஒரு புழுவைப் பார்ப்பது போல அவர் என்னைப்பார்த்தார்.

-என்னடா.. இப்பிடி என்ரை மானத்தை வாங்கிப் போட்டாய்..? நீ தந்தது புதுவை இரத்தின துரையின்ர கவிதையாம். அதை கொண்டு போய்க் குடுத்த என்ர மானம் காத்தில போட்டுது. நீ சொல்லியிருக்கலாம் தானே.-

அவர் ஒரு வித விரக்தியில் அதிகம் பேசவில்லை. அவர் அவமானப் பட்டது அவரது பேச்சில் தெரிந்தது.

உண்மைதான். அந்தக் கவிதையில் ஐம்பதுக்கு மேற்பட்ட வீதம் கவிஞர் புதவை இரத்தின துரையின் வரிகள்தான். அதிலும் சிக்கல் என்ன என்றால் முரசொலிக்காரர் எடிற் செய்யும் போது எனது வரிகளைச் சரியில்லை என்ற காரணத்தால் தூக்கி விட்டதால் அந்தக் கவிதை முழுக்க முழுக்க புதுவையின் வரிகளாகிப் போனது.

ஆனாலும்.. .இதில நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நாம் மறைமுகமாக சாத்தியமான எல்லா வழிகளிலும் எமது மறுப்பைத் தெரிவித்திருந்த போதும் ....

நான் அதற்குப் பின்னரும் கவிதை எழுதினேன்..
இப்போது எழுதுவதில்லை.