காலம் 1மீண்டும் இடம் மாறிப் பூத்தது பூ
அவளோடு அதிகம் பேசச் சொல்லும் மனசு. அதை அடக்கும் புத்தி!
'வழியாதே! கௌரவமாய் இரு"
அவளைப் பார்க்கும் கணங்களில் மனசு மட்டும் பற்றி எரிய மெல்லிய புன்முறுவலோடு சேர்த்து வணக்கம் உதிர்க்கும் உதடு.
தேவைக் கேற்ப பேசினானேயாயினும் சில சமயங்களில் அத் தேவைகளும் திணிக்கப் பட்டனவாயிருந்தன அவள் அறியாமல்!
அவளும் பேசுகிறாள் தன் தேவைக் கேற்ப, அவையும் திணிக்கப் பட்ட தேவைகளோ என்று எண்ணுகையில் அங்கே நிகழிகிறது முதல்த் தவறு!
'எல்லோரும் இருக்க ஏன் என்னிடம் மட்டும்"!! என்ற படு பிற்போக்குத் தனம் உதித்தது!
காலம் 2ரெலிபோனில் அழைத்தான்.
'உங்களோடு கொஞ்சம் பேசலாமோ"
'சொல்லங்கோ"
'இவ்வளவு நாளும் கதைச்சதை விட வித்தியாசமாய் இருக்கும். பரவாயில்லையா"
மௌனம் நீடித்தது.
'வேண்டாம். அப்பிடி எதுவும் கதைக்க வேண்டாமே"
நாக்கு உலர்ந்திருந்தது. தண்ணீர் குடித்தான்.!
'சரி.. கொஞ்ச நாளாய் அப்பிடி ஒரு எண்ணம் மனசில.. கேட்டேன்.. அவ்வளவும் தான்.!"
'கேட்டதும் நல்லது தான்.."
நல்ல வேளை நானும் ஏதாவது காரணமோ என்று அவள் கேட்கவில்லை!
'வேறை என்ன .. நான் உங்களோடு பிறகு கதைக்கிறன்!" துண்டித்தான்.
காலம் 3'நான் நினைச்சன்! இனி என்னோடு கதைக்க மாட்டியள் எண்டு"
சிரித்தான்!
'நான் என்ன செய்ய.. ரொம்பவும் திறந்த மனசு எனக்கு! நினைத்தவுடனை கேட்டன்.."
'எனக்கும் தான்.. கேட்டவுடனை மாட்டன் என்றேன்.. அதை விட்டுவிட்டு யோசிக்க வேணும்.. ரைம் வேணும் என்றெல்லாம் கேட்க வில்லை பாத்தீங்களா"
'அப்புறம்.."
'.............................."
'.............................."
காலம் 4மீண்டும் அவளையும் தன்னையும் ஏமாற்றுவது போலிருந்தது!
அவளோடு சண்டை பிடித்து விலகியிருக்கலாம்!
மனக்குரங்கு மறுபடியும்!
இம் முறை ஆழமாகவும் விரிவாகவும் அர்த்தமாகவும்!
'எனக்கெப்ப கல்யாணம் கட்ட வேண்டும் என்று தோன்றுதோ அப்ப நான் கட்டுவன்.! அதுக்கு முதல் காதல் என்பதெல்லாம் கிடையாது.!"
'சரி.. நான் உங்களை கல்யாணம் கட்டுறன்.. என்ன சொல்லுறியள்?"
'இதுக்கு ஓம் என்றால் காதலிக்கலாமே?"
'அதைத் தானே நானும் கேட்கிறன்"
'....................."
'......................"
'சரி எனக்கு உங்களை பிடிக்க வில்லை என்று சொன்னால் ... இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறன்."
பிரச்சனை முடிவுக்கு வந்தது!
'இப்ப உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும். உணர்வுகள் எனக்கும் விளங்கும்.. இன்னும் கொஞ்சக் காலத்திலை நினைச்சு பாருங்கோ சிரிப்பாக இருக்கும்.. "
உண்மைதான்.. சின்னப் பிள்ளைத் தனமாகத் தான் இருக்கிறது.
காலம் 5'நான் பிசாசு கதைக்கிறன்!"
'அட என்ரை முன்னால் காதலியும்.. இந்நாள் சகோதரியும்.. சொல்லு!" ஒருமைக்கு தாவி நிறைய நாட்கள் ஆகிவிட்டது.
'சகோதரி எண்டால் அடி வாங்குவாய்! இப்ப நீ பெரிய ஆள். போன் பண்ணுறதுமில்லை.. கதைக்கிறதும் இல்லை"
'ஓம்.. முந்தி ஒரு தேவை யிருந்தது.. இப்ப அப்பிடி இல்லைத் தானே.. பிறகென்ன.. சரி.. முந்தி நான் அடிக்கடி எடுத்து கதைக்கும் போது தம்பி வேறையொரு பிளானோடை தான் இப்பிடி எல்லாம் கதைக்கிறார் எண்டு நினைக்க வில்லையா"
'இல்லை.. நீ அப்பிடி தெரிஞ்சிருந்தால் அப்பனுக்கு அப்பவே புத்தி சொல்லியிருப்பனே"
'அப்ப அளவுக்கதிகமா வழிய வில்லையெண்டு சொல்லு.."
காலம் 6
'ஏன் எங்களுக்கெல்லாம் உங்கடை காதல் கதைகளை சொல்ல மாட்டியளோ?"
'ஆறுதலாச் சொல்லுவம் எண்டிருந்தன்..! அதுக்குடனை வந்திட்டுதா?"
'வாழ்த்துக்கள்..!"
'நன்றி.. "
-மறுபதிப்பூ-