27.9.05

ஊர் நினைவில் ஒரு வீடு - சிட்னியில்

சிட்னியில் penrith (என்று தான் நினைக்கிறேன்..) போகிற வழியில் தெரிந்த ஒருவர் இருந்தார். மிக அண்மையில் அந்த இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தார். நகர்ப்புறத்தில் இருந்து மிக அதிகமாக விலகிய ஒரு காடு சார்ந்த ஒரு சூழலில் அவர் வீடு இருந்தது.

ஒரேஞ் தோட்டம் செய்வதற்கு ஏதுவான இடமாம். அவரது காணிக்குள்ளேயே நிறைய ஒரேஞ் (என்று தான் நினைக்கிறேன்..) மரங்கள் காய்த்துக் குலுங்கின.. தவிர வீட்டைச் சுற்றி கோழிகள் அங்குமிங்கும் ஓடித்திரிந்தன.. அவற்றுக்கு முற்றத்தில் அரிசி வீசிக் கிடந்தது.

இரண்டோ மூன்று ஆட்டுக்குட்டிகள்..

ஒரு நாய்..

ஒஸ்ரேலியாவில் முழுக்க முழுக்க தனது வீட்டினை ஒரு கிராமத்து சூழலில் மாற்றிவிட்டிருந்தார்.

காலையில் சேவல் கூவி நித்திரைவிட்டெழும் பாக்கியம் அவருக்கு!

அங்கு எடுத்த சில படங்கள் இவை.. அந்த ஒரு நாளும் எனக்கும் ஏதோ ஊர்ச் சூழலில் வாழ்வது போன்ற உணர்வு கிடைத்தது..

Image hosted by Photobucket.com



Image hosted by Photobucket.com



Image hosted by Photobucket.com



Image hosted by Photobucket.com

இந்தச் சேவலுக்கு இது இறுதிப்படம். அன்று விருந்தினராய்ப் போன எங்களுக்காக தன்னையே தந்த அந்த சேவலுக்கு எனது நன்றி நன்றி நன்றி...

26.9.05

இது எங்க பாடல்!

கத்தரித்தோட்டத்து மத்தியில கழுத்தறுத்து விட்டது. இதுக்கு முதலில போட்ட பாட்டு நினைச்ச நேரங்களில மட்டும் தான் வேலை செய்யுது. அதனால வன்னியன்ரை உதவியோடை இந்தப்பாட்டை அவரின்ரை தளத்தில திரும்பவும் போடுறன். கூடவே போனசா இன்னும் ஒரு பாட்டும் போடுறன். அதையும் கேளுங்கோ!! அந்தப்பாட்டுக்கு சும்மா அவசரத்துக்கு வரிகள் எழுதினது.. ஒரு பரீட்சாத்த முயற்சியாக.. மற்றும் படி அதில இசை நுணுக்கங்களை தேடாதேங்கோ.. தேடினாலும் கிடைக்காது.




கத்தரித்தோட்டத்தின் மத்தியிலே..




நெருப்பெரிந்த நிலமாய்...

கத்தரித் தோட்டத்து மத்தியிலே..

சென்ற முறை இலங்கை சென்ற போது வசந்தன் திரும்பத் திரும்ப சொன்ன விசயத்தினை நான் நிறைவேற்றாமல் வந்தேன். அது சில சிறுவர் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வருதல். குறிப்பாக அவர் கத்தரித்தோட்டத்து மத்தியிலே பாடலை கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்து வரும்படி சொல்லியிருந்தார்.

சென்ற வாரம் சிட்னி சென்ற போது எப்பிடியாவது அந்தப்பாடலை ஒலிப்பதிவு செய்ய சொல்லியிருந்தார். இம்முறை அவரது விருப்பத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நோக்கில்... இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறேன்.

இந்தப்பாடலுக்கு தனியாக இசையமைக்கப்பட்டது. சிட்னியில் எனது நண்பன் ராஜ் (தல) இதற்கான இசையை தந்திருந்தார். குரல் வழங்கியிருக்கிறார்.. அத மட்டும் சொல்ல மாட்டன்.

வசந்தனுக்கு இப்ப சந்தோசமாயிருக்கும். என்ன வசந்தன் சந்தோசம் தானே!


23.9.05

சிட்னியில் இருந்து..

வணக்கம்! சிட்னியில் நடந்து முடிந்த மாநாடு, மெல்பேண் வலைப்பதிவாளர்கள் சார்பில் வானொலியில் செய்த நிகழ்ச்சிகள், சில சிறுவர் பாடல் ஒலிப்பதிவுகள் என சிட்னிப்பயணம் போய்க்கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் மெல்பேண் திரும்பியவுடன் எழுத இருக்கிறேன்.

நாளை வானொலியில் வலைப்பதிவுகள் குறித்த ஒரு அறிமுகம் வழங்கப் போறன்.. சும்மா கத்தரிக்காய் கறி வைக்கிறது எப்பிடியெண்டு கத்தாமல் பிரியோசனமா ஏதாவது பண்ணும் என வசந்தன் கத்தியதன் விளைவு அது!!

இப்போதைக்கு இன்று சிட்னியில் எடுத்த இரண்டு படங்கள்... மீதி வரும்!!!

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

12.9.05

நான் வளர்கிறேனே! மம்மி

உங்கள் எல்லாருக்கும் இண்டைக்கு நான் வளந்த படங்கள் காட்டப்போறன். குட்டிப் பெடியனா இருக்கேக்கை எடுத்த படங்களில இருந்து இந்தா இப்ப முந்தாநாத்து எடுத்த படம் வரைக்கும்... படங்களோடை கொஞ்சம் கதைக்கவும் போறன்..

Image hosted by Photobucket.com
இந்தப்படம் என்ரை பிறந்தநாள் ஒண்டுக்கு எடுத்த படம். என்ன அமைதியா நல்ல பெடியனாய் இருக்கிறன் என்ன? ம்.. சொல்ல மறந்திட்டன். இந்தப் படம் எடுத்தண்டு தான் இந்தியா எங்களுக்கு சாப்பாடு போட்டது.


Image hosted by Photobucket.com
இந்தப்படத்தை ஏற்கனவே என்ரை வலைப்பதிவில போட்டிருக்கிறன். ஏதோ ஒரு நாடகத்தில (பெயர் மறந்து போச்) நான் ரீச்சர் வேசம் போட்டிருக்கிறன். அசல் பொம்பிளை மாதிரி சீலை நுனியை பிடிச்சிருக்கிறனாம் எண்டு ஆரோ பின்னூட்டம் அப்ப போட்டிருந்தவை. 93 காலப்பகுதியில எடுத்த படமெண்டு நினைக்கிறன்.

Image hosted by Photobucket.com

ஹி..ஹி.. இந்தப் படத்தை வைச்சு வசந்தன் ஒரு போட்டியே அறிவிச்சிருந்தவர். கனபேர் சரியா சொல்லியிருந்தவை. அதுக்கு காரணம் வசந்தன் என்ன படம் போட்டாலும் அது நானாய்த்தான் இருப்பன் எண்ட மாதிரி போட்டுது. ஆனா முதலில இந்தப்படத்தை பாத்த வசந்தனும் உது ஆரெண்டு தான் கேட்டவர். 96 இல வன்னியில முத்தயன் கட்டு அணைக்கட்டோரம் எடுத்த படம் இது. வடிவா இருக்கிறன் தானே!

Image hosted by Photobucket.com
2003 இல ஒரு நாள். வெளிய மழை பெய்து கொண்டிருந்தது. யன்னலைத்திறந்து விட்டுவிட்டு மழைச்சாரல் என்னில பட படுக்கிறதுக்கு எனக்கு சரியான விருப்பம். அப்பிடிப் படுத்திருந்தவனை தட்டி எழுப்பி ராகுலன் எடுத்த படம் இது. தலைகணியை விட மாட்டாங்கள்!


Photobucket - Video and Image Hosting

கடைசியாக

11.9.05

சைய சையா நய்.. தைய தையா

எல்லாமாச் சேத்து ஒரு 15 000 சனம் வந்திருக்கும். அதில ஒரு முக்கால்ப் பங்கு இந்திய அதுவும் ஹிந்தி மொழி பேசும் சகோதரர்களாக இருந்திருப்பார்கள். நாங்கள் ஒரு ஏழெட்டு தமிழ்ப்பெடியள்.

வழமை போலத்தான் கொஞ்சம் லேற்றாகப் போனம். உள்ளே நுழைஞ்ச போது ஏதோ ஒரு ஹிந்திப்பாட்டை ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். நீண்ட முடி வளர்த்திருந்த அவர் சரியாகச் சொல்லப்போனால் பேயோட்டுபவர் மாதிரி பாடிக்கொண்டிருக்க 'ஐயோ.. பயமாக்கிடக்கு' எண்டு முதல் அலறல் எங்களிட்டை இருந்து வெளிப்பட்டது.

இருக்கைகளில் 3D கண்ணாடிகள் வைக்கப்பட்டிருந்தன. இருந்தவுடனையே எடுத்துப் போட்டுப்பாத்தன். எல்லாம் அப்பிடியே தான் இருந்திச்சு. 'கழட்டுடா. எப்ப போடுறது எண்டு சொல்லவாங்கள் எண்டான் எனக்கு பக்கத்தில இருந்தவன்.

இரண்டு பெரிய திரைகள் அரங்கத்தின் அருகருகாக இருக்க அதில நிகழ்வுகள் போய்க்கொண்டிருந்தன. ரஹ்மான் மேடையின்ரை நடுவில கொஞ்சம் பின்னுக்காக நின்றுகொண்டு keyboard வாசிச்சுக்கொண்டிருந்தார். மேடையின் ஒரு புறத்தில சிவமணி தாரை தப்பட்டையளோடை நிண்டு கொண்டிருந்தார்.

முதலில் போனதெல்லாம் பரிச்சயமில்லாத ஹிந்திப்பாடல்கள் எண்ட படியாலை அமைதியாத்தான் இருந்தம்.

ஒரு கொஞ்ச நேரத்தில சங்கர் மகாதேவன் வந்தார். 'தமிழ்ப்பாட்டு ஒண்ணு பாடலாமா' எண்டதும் தான் தாமதம், ஆங்காங்கே இருந்து ஹே என்ற கத்தல்கள். (தமிழர்கள் தங்கள் சிறுபான்மைப் பலத்தை காட்டிச்சினம்.)

உப்பக்கருவாடு பாட்டைத்தான் சங்கர் பாடினவர்.

அந்தப்பாட்டு முடிய திரும்பவும் ஹிந்திக்கு போயிட்டினம். எண்டாலும் எங்களுக்கு தெரிஞ்ச தமிழ்ப்பாடல்களின் மெட்டுக்கள் தான். அதே நேரம் ஹிந்திப்பாட்டுக்களின் இடையில அவ்வப்போது தமிழ் வரிகளையும் சேத்திச்சினம். அந்த நேரமெல்லாம் நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாக இருந்தம்.

எண்டாலும் ஹிந்தியில ஆரம்பிச்ச பாட்டுக்கள் ஒரு கட்டத்தில அடுத்தடுத்து தமிழுக்கு மாறிச்சுது. சிலர் we want hindi எண்டு கத்துற அளவுக்கு நிலைமை இருந்திச்சு. எங்களுக்கு முன்னாலை இருந்த ஒருவர் சைய சையா எண்டு கத்தினார்.

பின்னாலை இருந்த நாங்கள் சைய சையா நய்.. தைய தையா எண்டு கத்த அவர் ஒரு நட்புடன் எங்களைப்பாத்து சிரிச்சார்.

அவ்வப்போது இப்பொழுது உங்கள் 3D கண்ணாடிகளை அணியுங்கள் என்றும் இப்பொழுது கழற்றுங்கள் என்றும் அறிவிப்பு திரையில் வந்தது.

3Dயில் திரையில் அவ்வப்போது சில காட்சிகள் போய்க்கொண்டிருந்தன. ஆரம்பத்தில் அவற்றைப்பார்ப்பதில் இருந்த ஆர்வம் பின்னர் இல்லாமல் போய்விட்டது.


ஒரு கட்டத்தில எங்களுக்கு பின்வரிசையில் இருந்த ஹிந்திச் சகோதரிகள் நாலைந்து பேர் ஆடத்துடங்கி விட்டார்கள். எனக்குப் பக்கத்தில இருந்த செந்தூரன் டேய்.. புரோக்றாமை பாரடா எண்டு என்ரை தலையை அடிக்கடி முன்னாலை திருப்பிக் கொண்டிருந்தான்.

நிகழ்வின் நடுவில் சிவமணியின் தாளவாத்திய நிகழ்வு நடந்தது. அந்த நேரம் ஒரு வெள்ளைக்கார பெண்மணியும் சேர்ந்து ஏதோ ஆங்கிலத்தில பாடினவ. அவ பாடுற நேரம் தவித்து மற்ற நேரங்களில் சிவமணியின் கைகள் புரியும் நர்த்தனத்தை வாய் பாத்தக்கொண்டிருந்தா.

அதுக்கு பிறகும் ரஹ்மான் உங்கள் எல்லாருக்கு bombay dreams வேணுமா எண்டு கேட்டார். முதல் பாடின வெள்ளைக்கார பெண்மணி தான் வந்து பாடினா. அது தாளத்தில வாற ஒரு பாட்டுமாதிரி இருந்தது.

அ.ஆ படத்தில இருந்து ரஹ்மான் ஒரு பாட்டுப் பாடினார்.

ஆறரைக்கோடி பேர்களில் ஒருவன்.. அடியேன் தமிழன்.. எண்ட பாட்டு..

ஒவ்வொரு முறையும் அடியேன் தமிழன் எண்டும் போதும்.. கலக்கிட்டமில்ல!!

அதுக்கடுத்ததா வந்தது மரங்கொத்தியே பாட்டு. தமிழென்ன ஹிந்தியென்ன? அந்த ஹிந்திச் சகோதரிகள் ஆடிக் கொண்டேயிருக்க ஒரு கட்டத்தில எங்களுக்கு இருப்புக் கொள்ளேல்லை. எழும்பிட்டமில்ல!!

இறுதிப்பாடல் சரிகமே! மொத்த அரங்கமும் எழுந்து நின்றாடியது.

கடைசியாக வந்தே மாதரம்! அத்துடன் நிறைவுற்றது நிகழ்வு. வீட்டுக்கு வந்திட்டமில்ல!!

10.9.05

மெல்பேணில் AR ரஹ்மான்

இப்பத்தான் நிகழ்வு முடிஞ்சு வீட்டை வந்தன். நித்திரை கொள்ளப்போறன் ஏனெண்டால் எனக்கு நித்திரை வருகுது. நன்றி

1.9.05

மெல்பேண், சிட்னி, நியூஸிலான்ட்- சங்கமம்

தென்துருவ வலைப்பதிவர் கழகமும்
ஒரு பகிரங்க அறிவித்தலும்.

வலைப்பதிவர் சந்திப்பொன்றை ஒஸ்ரேலியாவில நடத்தி நிறைய நாளாச்சு. கடைசியா போன சித்திரை மாசம் எண்டு நினைக்கிறன் ஒரு வலைப்பதிவா சந்திப்பை நானும் வசந்தனும் திறம்பட நடத்தி முடிச்சிருந்தனாங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில எங்கடை மெல்பேண் வலைப்பதிவர் கழக கண்மணிகளுக்கு நிறைய நேர மற்றும் இன்னொரன்ன நெருக்கடிகள் காரணமாய் ஒண்டும் சரிவர எழுத முடியேல்லை. ஒஸ்ரேலியாக்கு வந்த புதுசில வீடும் படிப்பும் வேலையும் எண்டிருந்த எங்கடை கழக கண்மணிகள்.. இப்ப உலகமும் ஒஸ்ரேலியாவும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிடி பட வீட்டிலயே இருக்கிறதில்லை.

முந்தியொரு காலத்தில தினமும் பதிவுகள் போட்டு வந்த நாங்கள் இப்பவெல்லாம் ஏதோ நாங்களும் இருக்குறமுங்கோ எண்டு காட்டுறதுக்காகவே படங்களும் பத்துவரிப் பதிவுகளும் போட்டுக்கொண்டிருந்தம்.

இப்பிடி வலைப்பதிவகளில் எங்கடை மெல்பேண் கழக மூத்த உறுப்பினர்களுக்கு ஆர்வமும் உற்சாகமும் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைஞ்சு கொண்டு வரேக்கை முந்தநாள் (நேற்று முன்தினம்) இரவு பத்து மணிக்கு பிற்பாடு!! (முந்தியெண்டால் இரவு 8 மணிக்கெல்லாம் வீட்டை வந்திடுவம்.) அவசரமான ஒரு மீற்றிங்கை வசந்தன் கூட்டினார். அதுவும் City Flinder Street Station க்கு பக்கத்தாலை ஓடுற yara ஆற்றங்கரையில இருந்து கொஞ்ச நேரமும் நடந்து கொஞ்ச நேரமும் மீற்றிங் நடந்திச்சு.

அந்த நேரம் பயங்கர காத்து. மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில காத்து வீசினது. சரியா 10.15 க்கெல்லாம் நான் வசந்தன் மற்றது அருணன் இவையெல்லாம் அந்த இடத்தில சந்திச்சம்.

வசந்தன் கொஞ்சம் குண்டாயிட்டார் இப்ப. அருணன் கொஞ்சம் வளந்திட்டார்.

வசந்தன் நேரடியா விசயத்துக்கு வந்திட்டார். 'உங்களையெல்லாம் ஏன் கூப்பிட்டனான் தெரியுமே எண்டார்.'

'தெரிஞ்சிருக்கும் எண்டால் எங்களை கூப்பிட்டிருப்பீரோ எண்டு நான் பதிலுக்கு ஒரு கேள்வியைப் போட்டன். வசந்தன் அதைப்பத்தி சட்டை செய்யாமல் நான் சொல்லப் போற திட்டத்தை பற்றி வடிவாக் கேளுங்கோ.. அதுக்கு பிறகு நீங்கள் கதைக்கலாம் எண்டார். அவர் என்னை மனசில வைச்சுத்தான் அதை சொல்லியிருக்க வேணும்.

'இவ்வளவு நாளும் நாங்கள் வலைப்பதிவில பெரிசா ஒண்டும் எழுதாமல் இருந்திட்டம். அது ஏன் எதுக்கு எண்டெல்லாம் நான் ஆராயப்போறதில்லை. ஆனா.. ஒரு மூத்த மெல்பெண் வலைப்பதிவர் எண்ட முறையில தொடந்தும் இதை நான் அனுமதிச்சுக் கொண்டிருக்க முடியாது. எண்ட படியாலை'..... எண்டு வசந்தன் இழுக்க இடையில குறுக்கிட்டார் அருணன்.

'நீர் பிரச்சனை விளங்காமல் கதைக்காதையும்.. நீர் என்னைத்தான் சொல்லுறீர் எண்டு விளங்குது. ஆரம்பத்தில வலைபதிவு தொடங்கிட்டு இடையில கைவிட்ட ஆள் நான் தான். அனா அதுக்கு காரணங்கள் இருக்கு. எண்டாலும் அந்தக் காரணங்களை குறிப்பிட்டு அதை ஒரு பதிவாக்கி விடைபெறுகிறேன் நண்பர்களே எண்டு போட்டுவிட்டு பிறகு கொஞ்சக் காலத்தாலை என்னாலை வலைப்பதியாமல் இருக்கவே முடியுதில்லை எண்டு வாறாக்கள் மாதிரி நான் செய்யேல்லையே.. ' எண்டு அருணன் நீட்டி முழக்கினார்.

'ஷ்் உதையெல்லாத்தையும் விடும்.. இப்ப நான் சொல்லுறதை கேளும்.. ' எண்டு ஒருக்கா தொண்டையைச் செருமிக்கொண்டு தொடங்கினார்.

'இவ்வளவு நாளும் மெல்பேண் வலைப்பதிவர் கழகமாயிருந்த எங்கடை அமைப்பை நான் இண்டையில இருந்து தென்துருவ வலைப்பதிவர் கழகமா அதாவது ஒரு அகண்ட வலைப்பதிவர் கழகமா மாத்துறன்..' எண்டு விட்டு நாங்கள் ஏதும் சொல்லுறோமோ எண்டு பாத்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் ஏதும் சொல்லேல்லை எண்டுற அதேவேளை வசந்தனுக்கு தட்டிட்டுதோ எண்டும் நினைக்கவில்லை.

'இந்த தென்துருவ வலைப்பதிவர் கழகம் 3 பிரிவுகளை உள்ளடக்கியிருக்கும். சிட்னி, நியூஸிலான்ட், மெல்பெண்.. இந்த மூண்டு இடத்திலயும் மெல்பேண் தான் தலைமைச்செயலகமாவும் அதிகார மையமாவும் இருக்கும்.'

மீற்றிங் எண்டு வந்தால் நாலு பேருககு முன்னாலை எழும்பி நிண்டு மூண்டு கேள்வி கேக்க வேணும் எண்ட படியாலை இந்த இடத்தில நான் ஒரு கேள்வி கேட்டன்.

'அது எப்பிடி நாங்களாவே மெல்பேணை தலைமைச் செயலகமாக்கிறது ..? .. இது ஜனநாயக விரோதமெல்லோ! இந்தக் கேள்விக்கு பதிலளிக்காவிட்டால் மாற்றுக்கருத்தை மதிக்காதவர் எண்டு வரலாறு நாளையிண்டைக்கு உம்மைத் தூற்றும் எண்டு நான் சொன்னன்.'

இந்தக் கேள்வி மீற்றிங்கில சலசலப்பை உண்டாக்கினது. நான் கேட்ட ஒரு கேள்வி ஒரு இடத்தில சலசலப்பை உண்டு பண்ணுறது எண்டுறது எனக்கு சரியான சந்தோசம். மற்றும் படி அந்தக் கேள்விக்கு பதில் கிடைக்க வேணுமெண்ட எந்த தேவையும் எனக்கு கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் சும்மாதான் அப்பிடிக் கேட்டன். ஏனெண்டால் நானும் ஒரு பெரிய ஆள் எண்டு காட்டத்தானே வேணும்.

சலசலப்பெல்லாம் முடிய ஒருமாதிரி வசந்தன்ரை எண்ணத்தை நாங்கள் மனப்பூர்வமா ஏற்றுக்கொண்டம். அதன்படி நியூஸி பிரிவுடனும் சிட்னிப்பிரிவினருடனும் சுமுகமான ஒரு உறவை ஏற்படுத்தி அவையை ஒரு குடையின் கீழை காணாட்டி ரண்டு மூண்டு குடைக்கு கீழை கொண்டாறதுக்கான முயற்சிகளில இப்ப இருந்தே ஈடுபடுறது எண்டும் முடிவெடுத்தம்.

இந்த எங்கடை திட்டங்களுக்கு சம்மரிலிருந்து (Summer) திரும்புதல் எண்டு வசந்தன் பேர் சூட்டினார். அதை நாங்கள் கைதட்டி வரவேற்றம்.

எங்கடை திட்டத்தின்ரை முதல்ப்டியாய், ஒரு நல்லெண்ணை.. மன்னிக்கவும் நல்லெண்ண முயற்சியாய் எங்கடை பிரதிநிதி ஒருவரை சிட்னிக்கு அனுப்பி அங்கை இருக்கிற பிரிவினரோடு பேச்சுக்களை நடத்தி எங்கடை ஒரு குடையின் கீழி கொண்டுவருதல் எண்டுற திட்டத்துக்கு இசைய செய்யிற அது முடியாட்டி பணியச் செய்யிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் எண்டு தீர்மானிச்சம்.

அதன் படி வசந்தனை சிட்னிக்க அனுப்ப தீர்மானிச்சிருக்கிறம். (அல்கொய்டா அமைப்பு சிட்னியையும் தாக்குறதுக்கு முடிவு செய்திருக்கிறது எண்ட படியாலை பாதுகாப்பு காரணங்களுக்காக வசந்தன் எப்ப சிட்னி போறார் எண்டதை பகிரங்கமா இப்போதைக்கு வெளியிட முடியாது.)

மீற்றிங்கின் முடிவில் அருணன் சில கோரிக்கைகளை வைச்சார். Modern Girl ஒஸ்ரேலியால இருந்து முந்தி பதியிறன் எண்டு சொன்னவ. அவ எங்கையெண்டு தெரியேல்லை. சிட்னியா மெல்பேணா அல்லது வேறெங்காவதா எண்டு சொன்னால் வசதியாயிருக்கும். மெல்பேண் எண்டு சொன்னால் எங்கடை அதிகார மையத்தில அவவுக்கு ஒரு அதியுச்ச பதவியை குடுக்க நாங்கள் இணங்கியிருக்கிறம்.

தென்துருவ வலைப்பதிவர் கழகம் எண்டுறது ஒரு பரந்த விரிந்த எண்ணம் சிந்தனை செயற்பாடு. குழுக்கள் குழுக்களா இருக்கிறதை விட இப்பிடி ஒரு பெரிய இயக்கமா வளருறதை தான் நாங்கள் விரும்பிறம். அப்பிடி ஒரு எண்ணத்தலை தான் அந்த கழகத்தின்ரை அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறம்.

முக்கிய குறிப்பு: இதன்படி சிட்னி மற்றும் நியுஸி பிரிவினர் என்ன செய்தாலும் அதற்கு மெல்பேண் தலைமைச் செயலகத்தில் அனுமதி பெற வேண்டும். விரைவில் நியூஸியில் நடக்க இரக்கிற வலைப்பதிவர் மாநாட்டுக்கு எங்களுக்கு சரியான முறையில் அறிவிக்கவும் இல்ல. அனுமதி வாங்கவும் இல்ல. இதை சம்மந்தப்பட்டவர்கள் கவனிக்க வேணும்.

இனியும் தொடரும்