30.7.05

என்னத்தை சொல்ல - இலங்கையில் 3

'உவரோடை எதுக்கு அடிக்கடி தனகுறாய்' எண்டு அம்மம்மா கேட்டா.

'தனகேல்லையம்மம்மா, அவர் சொல்லுறதுகளுக்கு பின்னூட்டம் குடுக்கிறன் என்றன் நான்.

அம்மம்மாவுக்கு பின்னூட்டம் எண்டால் என்னெண்டு விளங்கேல்லைப் போலை. 'என்ன விண்ணானக் கதை கதைச்சுக் கொண்டிருக்கிறாய் எண்டா அவ. எண்டாலும் நான் அவரோடை தனகுப்படுறது அவவுக்கு பிடிக்கவில்லை.

ஆனா உண்மையா நான் அவரோடை தனகுப்படேல்லை. அவருக்கும் எனக்கும் சாதாரண சம்பாசனைதான் நடந்திச்சு. எண்டாலும் அவர் ஒண்டு சொல்லுறதும் அதுக்கு நான் நக்கலா அல்லது கொஞ்சம் குத்தலா பதில் சொல்லறதும் எங்களுக்குள்ளை நடந்து கொண்டிருக்க, அதை அம்மம்மா நானும் அவரும் தனகுப்படுறம் எண்டு விளங்கி கொண்டாவோ தெரியேல்லை.

அந்த அவர் லண்டனில இருந்து இரண்டு சின்னப்பெடியள் மற்றும் மனைவியோடை வந்திருந்தவர்.

2002 இலிருந்து ஒவ்வொரு விடுமுறைக்கும் இலங்கைக்கு வந்து போறவர். அதுக்கு முதல் ரண்டு மூண்டு வருசம் இந்தியாக்கு வந்து போனவராம். ஏனெண்டால் 2002 க்கு பிறகு தானே இலங்கையில் சண்டை நிண்டது. அதுக்கு முதல் வாறது பயம் தானே!

அவற்றை ரண்டு பெடியங்களும் சரியான cute ஆக இருந்தாங்கள். கிராமத்து வீடு அவங்களுக்கு ஒரு புது உலகம் மாதிரி இருந்திருக்க வேணும். ஆனால் வெயில் தான் அவங்களை கஸ்ரப்படுத்திப்போட்டுது. அவங்களாலை வெயிலை தாங்க முடியேல்லை. அடிக்கடி எரிச்சல்ப் பட்டுக்கொண்டிருந்தாங்கள். உண்மையாகவே அவங்களாலை அந்த வெயிலை தாங்க முடியாது தான். உண்மையில வெளிநாடுகளிலேயே பிறந்து வளந்தவங்கள் சுட்டெரிக்கும் வெயிலைக் கண்டு எரிச்சல்ப்படுறது ஒரு பிழையே இல்லை.

ஏனெண்டால் ஏழெட்டு வருசத்துக்கு முதல் கலியாணம் பேசி வெளிநாட்டுக்கு போன ஆக்கள் எல்லாம் திரும்பி இலங்கைக்கு வந்து நிக்கேக்கை 'இதென்ன கண்டறியாத வெயில். மனிசரை இருக்க விடுகுதில்லை. உடம்பெல்லாம் நச நச எண்டு ஒரே வியர்வை. ச்சீ. இதுக்கை என்னெண்டு இருக்கிறது' எண்டு சொல்லும் போது, பாவம் அந்தப் பெடியள் சொல்லுறது ஒரு தப்பே இல்லை.

லண்டன் காரர் நல்லா அரசியல் மற்றும் ராணுவ விசயங்கள் கதைப்பார். அவரிடம் அம்பிட்டால் ஒரு அரசியல் வகுப்பு எடுக்காமல் விடமாட்டார் போல எண்டு நான் நினைச்சன். அவரின்ரை கதைப்படி தமிழருக்கெண்டு ஒரு தனிநாடு வலுகெதியில கிடைக்க வேணும் எண்டு விரும்பிறார் போல எனக்கு தோன்றிச்சு.

'உந்தக் கிளைமோர் மட்டும் வெடிச்சு அதுல போன எங்கடை 40 பெடியளுக்கும் ஏதாவது நடந்திருக்க வேணும், பிறகு நடந்திருக்கிறதே வேறை' எண்டு அவர் ஆவேசமா ஒரு நாள் சொன்னார். 'நடந்திருக்கிறதே வேறை எண்டு அவர் சொன்னாலும் எனக்கென்னமோ 'நடக்கிறதே வேறை' எண்ட தொனியிலதான் அவர் சொன்ன மாதிரி இருந்திச்சு.

ஒரு நாள் அவர் கிளிநொச்சியில நந்தவனம் எண்ட இடத்துக்கு போனார். போகும் போதே நிறைய றிசீற்றுக்களையும் துண்டுக் காகிதங்களையும் எடுத்துக்கொண்டு போனவர். பிறகொரு நாள் அவர் ஆரோடையோ கதைச்சுக் கொண்டிருக்கேக்கை நான் பக்கத்தில இருந்து கேட்டனான்.
'நான் கட்டேல்லை. நான் வலு புத்தியா அங்கை கட்டுற துண்டுகளையும் றிசீற்றுக்களையும் கொண்டு போய்க் காட்டினான். மற்றது அவங்களிட்டை நாங்கள் காசு கட்டுற பதிவவெல்லாம் இருக்கு. அங்கை கட்டுற படியாலை இங்கை குடுக்க தேவையில்லை'

அவருக்கு கடவுள் பக்தி கொஞ்சம் கூடப்போலை. அப்பிடியில்லாட்டி எங்கடை ஊரில இருக்கிற ஒரு கோயிலுக்கு தேர் ஒண்டு செய்ய வேணும் எண்டு சொல்லுவாரே?. ஆனா தேரிழுக்கிறதுக்கு கோயிலைச் சுத்தி நிலமில்லாத படியாலை முதல்ல அதை வாங்க வேணும் எண்டவர். அவரின்ரை மனிசிக்கும் நல்ல கடவுள் பக்தியாக்கும். இல்லாட்டி பத்து நாள் திருவிழாக்கும் பத்துச் சீலை கட்டிக்கொண்டு போக வேணும் எண்டு சொல்லுவாவே?

அவவின்ரை தம்பியார் ஒரு நல்ல pulzer மோட்டச்சைக்கிள் வைச்சிருக்கிறான். அவதான் அது வாங்கிக்குடுத்தவவாம். 'அக்கா வாங்கித்தந்தது என்று பெருமையாச் சொல்லுவான். பெற்றோலுக்கும் அக்கா தான் அனுப்பிறவ போலை. அதுக்கும் அவன் ஒரு தத்துவ விளக்கம் சொல்லிப்போட்டு ஒரு பார்வை பாத்தான்..

'அக்காக்கு ஒரு அம்பது பவுண்ஸ் எண்டுறது பெரிய காசில்லையென. ஆனா.. அதையே இங்கை அனுப்பினா கிட்டத்தடட 6000 ரூபா என்ன..அவுஸ்ரேலிய டொலர் எவ்வளவு போகுது!? எழுபதாக்கும்.. லண்டன் பவுண்ஸ் நூற்றம்பது போகுது'

எனக்கு சோமிதரன் ஒரு விசயம் சொன்னான். ஒரு நாட்டின்ரை பணவீக்கம் கூடுறதெண்டுறது அந்த நாட்டுக்கு கெடுதியான, அந்த நாட்டின்ரை பொருளாதாரம் அடிபடப்போகுது எண்டதுக்கான ஒரு கவலையளிக்கிற விசயம். ஆனால் பணவீக்கம் கூட, வெளிநாட்டுக் காசுகளின் பெறுமதியும் கூடும் எண்டதுக்காக சந்தோசப்படுற ஒரே சனம், யா.. இல்லையில்ல, வெளிநாட்டில சொந்தக்காரர் இருக்கிற தமிழ்ச்சனம் தானாம்.

(யாழ்ப்பாணத்தில பெற்ற விசயங்களை வைச்சு சோமிதரன் ஆங்கிலத்தில எழுதின கட்டுரையொன்றை அவர் தன்ரை பதிவில எழுதியிருக்கிறார். உண்மையில எங்கடை பிரச்சனைகளை இப்பிடி எங்களுக்குள்ளேயே நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறதை விட வெளியாட்களுக்கும் சொல்ல வேணும் எண்டது தான் என்ரை விருப்பம். எனக்கு ஆமி அடிச்சது, எனக்கு ஆமி சுட்டது எண்டத நாங்கள் இன்னொரு ஆமி அடிச்சவனுக்கும், இன்னொரு ஆமி சுட்டவனுக்கும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறம் நான் உட்பட. சோமிதரன் நல்ல விசயம் செய்யிறார். வாழ்த்துக்கள். - சோமிதரன் நீர் கள்ளுக்குடிச்ச விசயத்தை வெளியில சொல்ல வில்லை-)

'அக்காக்கு என்ன வெறும் ஐம்பது பவுண்ஸ் தானே' எண்டு அவன் சொல்லவும் என்ர மனசு கட கடவெண்டு கணக்குப் போட்டுது. அம்பதெண்டால் ஒரு ஐஞ்சு மணித்தியாலம் வேலை செய்ய வேணும். ஐஞ்செண்டால் அது விடியக்காலமை 4 மணிக்கு தொடங்குதோ அல்லது பின்னிரவு 2 மணிக்கு முடியுதோ ? அதெல்லாம் அவனுக்கு தெரியுமோ தெரியாது!

அவனோடை ஒரு நாள் ரவுணுக்கு ஒரு சொந்தக்கார வீட்டை போனனான். தன்ரை pulzer மோட்டச்சைக்கிளை தந்து 'நீர் ஓடும்' எண்டான். உண்மைய சொல்லப்போனால் எனக்கு க்ளச் மொடல் சைக்கிள்கள் ஓடிப் பழக்கமில்லை. அதை விட முக்கியமான விசயம் யாழ்ப்பாணத்து தெருக்களில் ஓடுறதுக்கு ஒரு விசேட பயிற்சியும் தற்துணிவும் வேணும்.அது என்னட்டை இல்ல.

யாழ்ப்பாணம், வீதி ஒழுங்கைக் கூட ஒழுங்காக் கவனிக்க ஆக்கள் இல்லாமல் கிடக்கு.

நான் சிரிச்சுக்கொண்டே 'இல்ல நீரே ஓடும் எண்டன். சீற்றில அவனுக்கெண்டு இருக்கிற இடத்தில இருக்காமல் நல்லா பின்னாலையா இருந்து என்னையும் இன்னும் பின்னுக்காக தள்ளிக் கொண்டு முதுகை வளைச்சு அவன் ஒரு வித்தியாசமாத்தான் ஓடினான். அவ்வப்போது பொம்பிளைப்பிள்ளையளை கடக்கேக்கை horn அடிச்சான்.

என்ன தான் நேருக்கு நேரை நிண்டு கதைச்சாலும், ஒண்டா இருந்து பம்பல் அடிச்சாலும், சண்டை பிடிச்சாலும் இப்பிடித்தள்ளித் தள்ளி நிண்டு கவன ஈர்ப்புக்களை செய்யிறது எண்டுறது ஒரு தனிச்சுகம் தான்.

அவவை கடந்து போகேக்கை ஒருக்கா குரலை செருமுறதும் (மோட்டச்சைக்கிள் வைச்சிருக்கிற ஆக்கள் horn அடிக்கலாம்) ஏன் நேற்று கோயிலுக்கு வரேல்லை என்று எங்கேயோ பாத்துக் கேக்கிறதும் அதுக்கு அவ அந்தக் கேள்வி பிடிச்ச மாதிரியும் அதே நேரம் பிடிக்காத மாதிரியும் முகத்தை வைச்சுக்கொண்டு சொண்டுக்குள்ளை சிரிக்கிறதும், அவர் அவவை முந்திக்கொண்டு போறதும் பிறகு ஸ்லோப் பண்ணுறதும் , அவ பக்கத்தில வாற தன்ரை சினேகிதியப் பாத்து 'இப்ப என்னவாமடி இவருக்கு' எண்டு கேக்கிறதும்... ஓ.. அது ஒரு அழகிய உலகம்......

Track மாறிட்டன் எண்டு நினைக்கிறன். எழுத வந்த விசயத்தை மட்டும் எழுதும். எல்லாத்தையும் போட்டு பிசையாதையும் எண்டு வசந்தன் சொல்லுறது.

அவனுக்கு பின்னாலை இருந்து போகேக்கை சும்மா பேச்சுக் கொடுத்தன். 'இங்கை என்ன மாதிரி கார்கள்? என்ன மொடல்கள் ஓடுது?' எனக்கு ஒரு மொடலுகளின்ரை பெயரும் தெரியாட்டிலும் சும்மா கேட்டன்.

அதுக்கு அவன் 'காரை மனிசன் ஓடுவானே. உள்ளை இருந்து ஓடினால் ஆர் பாக்கப் போறாங்கள். மோட்டச்சைக்கிள் எண்டாத்தான் முறுக்கிக் கொண்டு ஓட ஒரு நாலைஞ்சு மடியும்' எண்டான். 'அதென்ன நாலைஞ்சு மடியும்' எண்டு யோசிச்சுக்கொண்டேயிருக்க அவன் என்னை கொண்டு போய் சொந்தக்கார வீட்டை நிப்பாட்டினான்.

அந்த வீட்டில இருந்த ஒரு அக்கா அவனைப்பாத்து 'என்ன ஐசே.. 'இந்தப்' படத்தில 'இன்ன' ஹீரோ 'இந்தக்' கட்டத்தில 'இப்பிடி' வாற மாதிரி வாறீர் எண்டு கேட்டா. அதுக்கு அவன் இல்லயக்கா, இது அப்பிடியில்லையெண்டு விட்டு இன்னொரு படத்தில இன்னொரு ஹீரோ இன்னொரு கட்டத்தில இன்னொரு மாதிரி வாறதெண்டு விளக்கம் குடுத்தான்.

அதுக்கு அவ, ம்.. அந்த மாதிரியும் கிடக்கு இந்த மாதிரியும் கிடக்கு எண்டா. உவங்கள் படத்தை பாக்கிறவங்களோ இல்லாட்டி பாடமாக்கிறவங்களோ எண்டு நான் மனசுக்குள்ளை பிரமிச்சுக்கொண்டிருக்க, அவ என்னைப்பாத்து என்ன ஆள் சரியா கறுத்துப் போய் முகமெல்லாம் வாடி ஆளே மாறிப்போய் வந்திருக்கிறீர் எண்டு கேட்டா. அதைக் கூட என்னாலை பொறுக்க முடியும்!

ஆனா அவவின்ரை அம்மா என்னைப் பாத்து காச நோய் வருத்தக்காரன் வந்த மாதிரி இளைச்சுப் போய் வந்திருக்கிறீர் எண்டு கேட்டாவே ஒரு கேள்வி ! அதை நான் ஆயுளுக்கும் மறக்க மாட்டன் எண்டு அப்பவே முதலாவது சத்தியம் பண்ணிக்கொண்டன். ரண்டாவது சத்தியமும் பண்ணினனான். அதுக்கு பிறகு வாறன்.

'ஒஸ்ரேலியாவில கிட்டத்தட்ட யாழ்ப்பாணச் சுவாத்தியம் தான். அதுவும் கோடை காலத்தில சரியா யாழ்ப்பாணம் மாதிரித்தான் இருக்கும். இப்ப தான் அங்கை குளிர் தொடங்குது. போன முறை அங்கை சரியான வெயில்! அது தான் இப்பிடி எண்டு நான் வெதர் மேலை பழியைப்போடடன்.

'அப்ப அங்கை இனி ஸ்நோ கொட்டுமோ' எண்டு அவ தன்ரை பொது அறிவை வளக்கப்பாத்தா.

'இல்ல எங்களுக்கு ஸ்நோ இல்லை. அது எங்கையோ மலைப்பக்கம் கொட்டுதாம். நான் போனதில்லை' எண்டு நான் சொன்னன்.

'எட.. அப்ப அங்கை ஸ்நோ இல்லையே? என்ரை மகன்ரை வீட்டு முத்தத்தில நிறையக் கொட்டுமாம் என்ன.? வீடியோ கொண்டு வந்து போட்டுக் காட்டினவன். நல்ல வடிவாத்தான் இருந்தது.' அவவின்ரை கதையைப் பாக்க ஏதோ ஸ்நோ இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எண்டுமாப்பொலை இருந்தது. அப்ப தான் நான் ரண்டாவது சத்தியம் செய்தன். ஒஸ்ரேலியா திரும்பினவுடனை பக்கத்தில எந்த இடத்தில ஸ்நோ கொட்டுதோ அங்கை போய் நானும் ஒரு படம் எடுத்து அனுப்புறதெண்டு.

இத்தனைக்கும் இடையில அந்த லண்டன் காரர் எனக்கு கன தரம் அரசியல் வகுப்புக்கள் எடுத்திட்டார். ' உது சரிப்பட்டு வராது. சிங்கள அரசுகளை நம்பி ஒரு பிரியோசனமும் இல்லை. பொடியங்கள் என்ன செய்ய வெணுமெண்டால் சண்டையைத் தொடங்கிப்போட்டு பத்துப்பதினைஞ்சு குண்டுகளை கொழும்பில வைக்க வேணும். அப்பிடியே அரசாங்கத்தை திணறடிக்க வேணும். அப்ப தான் அவங்களுக்கு புரியும் எங்களைப் பற்றி.' எண்டு ஒருநாள் அவர் சொன்னார்.

நான் ஒண்டும் பதில் சொல்லவில்லை. உண்மையில சொல்லுறதுக்கு ஒண்டும் இல்லை.

இதெல்லாம் முடிஞ்சு அடுத்த நாளோ அதற்கடுத்த நாளோ லண்டனில் குண்டு வெடிச்சது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கள் செத்தவை. அவருக்கு அந்தச் செய்தியை நான் தான் முதலில சொன்னனான். கேட்ட மாத்திரத்திலேயே பேயறைஞ்சவர் மாதிரி போனார்.

'எங்கை எந்த இடத்தில எண்டு அந்தரப்பட்டு கேட்டார். உண்மையில எனக்கு லண்டனில இடம் வலம் எதுவும் தெரியாத படியாலை 'எனக்கு தெரியா லண்டன் எண்டுதான் சொன்னது எண்டு சொன்னன்.

அவர் உடனையே தன்ரை செல்போனில இருந்து லண்டனுக்கு போன் பண்ணி ஆரோடையோ தமிழில கதைச்சார். கதைக்க கதைக்க முகத்தில அறைஞ்ச பேய் கொஞ்சம் கொஞ்சமா இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. கதைச்சு முடிச்சார்.

'அது லண்டனில. நாங்கள் இருக்கிறது வெம்பிளிதானே. அந்த இடத்தில எங்களுக்கு பிரச்சனை ஒண்டும் இல்லை. எல்லாம் ஸ்மூத்தாம்.'
நான் அவரைக் கொஞ்ச நேரம் பாத்துக்கொண்டிருந்தன்.

'ம் உண்மைதானே! வெம்பிளி தவிர்ந்த வேறை எந்த இடத்தில குண்டு வெடிச்சாலும் அவருக்கு பிரச்சனை இல்லைத்தானே..! '

இந்த பதிவை எழுதி வசந்தனுக்கு அனுப்பி விட்டு ஒரு தலைப்பு சொல்லும் எண்டன். அவர் என்னத்தை சொல்ல எண்டார்.
அதுக்கு நான் இஞ்சை இப்பிடிச் சொல்லாமல் நல்ல ஒரு தலைப்பு சொல்லம் எண்டன். அவரும் நிறைய தலைப்புக்கள் சொன்னார். ஒண்டும் சரிவரேல்லை. கடைசியா திரும்பவும் ஒருக்கா என்னத்தை சொல்ல எண்டார். நான் உடனை அட.. இதையே தலைப்பா வைக்கலாமே எண்டன். அட நாசம் கட்டினவனெ அதைத்தனேடா அப்போதையிருந்தே சொல்லிக்கொண்டு வாறன் எண்டார். நான் தான் விளங்கி கொள்ள வில்லை.

24.7.05

பனங்காய்ப் பணியாரமே..!

பனங்காய்ப் பணியாரம் தெரியுமோ? பனம்பழச்சாறெடுத்து மாவொடு பிசைந்து எண்ணையில் பொரிச்சு.. (அப்பிடிச்செய்யிறதெண்டு தான் நினைக்கிறன். )
நல்ல சுவையாக இருக்கும். யாழ்ப்பாணத்தில பனம்பழ கால சீசனில எல்லா வீடுகளிலும் இந்தப் பணியாரம் செய்வினம்.

கிட்டடியில கேட்ட ஒரு பாட்டில காதலியை பனங்காய்ப்பணியாரத்திற்கு ஒப்பிட்டிருந்தவை. பனங்காய்ப் பணியாரமே பச்சை கொழும்பு வெத்திலையே என்று!

இந்தியாவில இப்பிடியொரு பணியாரம் இருக்கா என்று தெரியவில்லை. இருந்தால் சொல்லவும்! அது இப்பிடித்தான் இருக்கும். அய்.. பனங்காய்ப் பணியாரமே..

Image hosted by Photobucket.com

பட உதவி - திரு கிளிநொச்சியிலிருந்து

23.7.05

அசைலம் அடிக்கேல்லையோ- இலங்கையில் -2

அந்த ஆச்சி கிட்டடியில சாகப்போற மாதிரி, எனக்கு தெரியேல்லை. ஆனாலும் அம்மா சொன்னா. "நீ அடுத்த முறைக்கு வரேக்கை மனுசி இருக்குதோ இல்லையோ தெரியாது. எதுக்கும் ஒருக்கா போய்ப்பாத்திட்டு வா."

பரவாயில்லை. மனுசி திடகாத்திரமாத்தான் இருந்தது. என்னைக் கண்டவுடனை அடையாளம் கண்டுகொண்டிச்சு.

"வாப்பு. என்னப்பு சரியா இளைச்சு போட்டாய்? சரியான சாப்பாடு இல்லைப்போல?" நான் மெல்லிசா சிரிச்சு வைச்சன். "எப்பிடி இருக்கிறியள்" எண்டு கேட்டன்.

"முந்தி மாதிரி ஓடியாடி வேலையள் செய்ய முடியேல்லை. எண்டாலும் பரவாயில்லை. ஏதோ இருக்கிறன். கடவுள் எப்ப என்னை எடுக்கப்போறாரோ தெரியேல்லை." எண்டு அவ சொன்னா.

எனக்கெண்டால் இப்ப கடவுள் எடுக்க மாட்டார் எண்டு தான் தோன்றிச்சு.

மனிசி நிறைய கதைச்சது. கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தது. இருந்தாப்போல கேட்டுது.

"அப்ப உனக்கு அங்கை காட் கிடைச்சிட்டுதோ?"

யாழ்ப்பாணத்தில இப்ப வெளிநாடு சம்பந்தப்பட்ட பொதுவான பேசுபொருள் இது தான் என்றாலும் செத்தாலும் செத்துப்போடும் போய்ப்பாத்து விட்டு வா எண்டு அம்மா அனுப்ப, போய்ப்பார்த்த ஒரு ஜீவனிடமிருந்து இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

மனுசி என்ன கேட்குது என்று எனக்கு விளங்கிட்டுது. இண்டைக்கு காட் கிடைக்கிறது எண்டது யாழ்ப்பாணத்து சமூகத்தின் உச்ச பட்ச எதிர்பார்ப்புகளில் ஒன்றாகிவிட்டது போல எனக்குப் பட்டது.

இன்னொரு பக்கத்தாலை மனுசி ஆருக்கும் என்னை கலியாணம் பேசப்போதோ என்று கூட ஒரு வெட்கம் கலந்த யோசினை எனக்கு வந்து போனது.

மகளுக்கு வெளிநாடுகளில ஆரும் காட் கிடைச்ச பெடியனா பாக்க முடியுமோ? சாதியைப் பற்றி பிரச்சனையில்லை. ஆனா காட் கிடைச்சிருக்க வேணும் எண்ட மாதிரியான கதையள் அங்கை வலு பிரபலம்.

எனக்கென்னவோ சாதி முறையெல்லாம் ஒழிஞ்சு புதுசா காட் கிடைச்ச சாதி, காட் கிடைக்காத சாதி என்று வந்தாலும் வந்திடும் போல கிடக்கு.

"என்ன காட் ஆச்சி" எண்டு நான் அவவை கேட்டன்.

"அதுதானப்பு! அங்கை இருக்கிற காட். அது கிடைச்சால்த்தானம் ஆரையேனும் கூப்பிடலாம். என்ரை மூத்த ரண்டுக்கும் கிடைச்சிட்டுது. கடைசிதான் பாவம். இன்னும் கிடைக்காமல் கஸ்ரப்படுறான்."

மனுசி உண்மையிலேயே கவலைப்பட்டுது.

"ஓமணை. இப்ப கொஞ்சம் கஸ்ரம் தான்." எண்டு சொல்லி நான் அவவை ஆறுதல்ப்படுத்த முயற்சித்தன்.

எனக்கும் ஆறுதலாயிருந்தது. ஏனென்றால் எல்லாம் உந்த சமாதானத்தாலை தான் எண்டு மனுசி சொல்லவில்லை.

ஆனா எனக்கு இன்னொருவர் அப்பிடிச்சொன்னார். அவரும் வெளிநாடு தான். ஐரோப்பா நாடுகளில இப்ப கோடைகாலம் எண்ட படியாலை நிறையப் பேர் விடுமுறையில தமிழீழத்துக்கு வந்திருக்கினம். விடுமுறை முடிய தங்கடை இடங்களுக்கு போறதுக்கு முதல் தங்கடை பிள்ளையளுக்கு தமிழீழத்தின் அருமை பெருமைகளை அவை சொல்லிக்கொண்டிருக்கினம்.

அதுகள் தங்களுக்குள்ளை டொச்சிலையும் பிரெஞ்சிலையும் இங்கிலிசிலையும் கதைச்சுக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஒரு மல்ரி கல்ச்சர் சிற்றியாக்கி, மாட்டு வண்டிலயும், ஆட்டுக்குட்டியையும் விநோதமாக பார்த்துக் கொண்டிருக்குதுகள். ஒரு காலத்திலை நான் ரெயினைப் பார்த்த மாதிரி.

இதுக்குள்ளை இங்கிலிஷ் கதைக்கிற ஒரு பிள்ளையின்ரை அம்மா சொன்னா. இப்ப டொச்சிலையோ பிரெஞ்சிலையொ படிச்சால் பிற்காலத்தில எங்கடை நாடுகளில வந்து வேலை எடுக்க முடியாதென!. இப்ப இவன் இங்கிலிசில படிக்கிற படியாலை ஒரு காலத்தில எங்கடை நாட்டில வந்து வேலை செய்யலாம் என்ன? நல்ல வேளை நாங்கள் நேரத்தோடை லண்டன் போனது.

நான் அந்த பிற்காலத்தில எங்கட நாட்டுக்கு வந்து வேலை செய்யப்போற பெடியை பார்த்தன். கொசுக்கடியில முகம் எல்லாம் வீங்கி, தடிமனாலை குரல் எல்லாம் அடைச்சு, பெடியை பாக்கவே பாவமா இருந்தது. அவனுக்கு வெயில் ஒத்துக்கொள்ள வில்லையாம் எண்டு அவன்ரை அம்மா சொன்னா.

தனக்கு தமிழீழம் எண்டொரு நாடு சிறீலங்காவில இருக்கு எண்டு அறிவூட்டப்படுகிற ஒரு குழந்தையின் அப்பா தான் அந்த கேள்வியை என்னை கேட்டார்.

"ஏன்.. அசைலம் அடிக்கேல்லையோ.. ஒஸ்ரேலியாவில கஸ்ரமோ?"

தெரியாதெண்டு சொன்னன்.

"விசாரிச்சு பாக்கவில்லையோ?" எண்டு கேட்டார்.

"எனக்கு இப்ப என்ன அவசரம்? வேலை செய்யிறன். படிக்கிறன். அசைலம் பற்றி யோசிக்கவில்லை." என்று சொன்னன்.

"ஓ.. முந்தி சண்டை நடக்கும் போதாவது அசைலம் அடிக்கிறதுக்கு ஒரு காரணம் சொல்லலாம். இப்ப ஒண்டும் இல்லைத்தானே..." எண்டு அவர் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு பத்திக்கொண்டு வந்திச்சு. என்ன செய்ய வயசுக்கு மூத்த ஆக்களை எடுத்தெறிந்து பேசி எனக்கு பழக்கம் இல்லையெண்ட படியாலை பேசாமல் இருந்தன்.

யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்டாயிற்று. பஸ்ஸில் தான் வந்தேன். பயணங்களின் போது அது விமானப்பயணமாயினும் எதுவாயினும் எனக்கருகிலிருப்பவர் யாராயிருக்கும் என எதிர்பார்ப்பதும் பின்னர் ஏமாந்து போவதும் தான் எனக்கு அமைந்த வாழ்க்கை. ஆனால் அன்று வழமை மாறியிருந்திச்சு.

அவளுக்கு என்னை விட வயசு குறைவு. லண்டனில் படித்துக்கொண்டிருக்கிற அவளும் விடுமுறையில் வந்து திரும்பினாள். எனக்கு பக்கத்த சீற். தனியத் தான் வந்தாள். லண்டனில் ஏரோ ஸ்பேஸ் இஞ்சினியரிங் படிக்கிறாளாம். நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம்.

லண்டன் பற்றி நிறைய சொன்னாள். லண்டனில் தமிழ் இளைஞர்கள் படும் கஷ்டங்கள் பற்றி சொன்னாள். அகதி அந்தஷ்த்துக்கள் ஏற்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் மிகுந்த நெருக்கடிக்குள்ளும் வேதனைக்குள்ளும் ஆகிறார்கள் என்றாள். ஒரு அறையை சில நேரங்களில் 5 க்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்றாள். சரியான அனுமதியில்லாததால் அடிமாட்டு விலைச் சம்பளத்தில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றாள். மணித்தியாலத்துக்கு மூன்று அல்லது நான்கு பவுண்ஸ் தான் சில சமயங்களில் கொடுக்கிறார்களாம். எவ்வளவு தான் கஷ்ரப்பட்டாலும் வீட்டிலிருந்து பெற்றோர் கதைக்கும் போது அதையெல்லாம் மறைத்து சந்தோசமாக பேசிச் சிரித்து மகிழ்விக்கிறார்கள் என்றாள்.

லண்டனிலிருந்து வருகின்ற ஒரு பேப்பரில் அண்மையில் றெபேக்கா என்பவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை பற்றி அவளிடம் விசாரித்தேன். I would never marry a tamil man என றெபேக்கா எழுதிய காரணங்கள் சரியானவை தானா என கேட்டேன்.

நாங்கள் பேசிச் சிரித்து வருவதை எமக்கு அருகிலிருந்து வந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் பார்த்துக் கொண்டே வந்தார். முறிகண்டி தாண்டியதும் தான் கேட்டார்.

"வீட்டை வந்து போறியள் போல" அவளைப்பார்த்து தான் கேட்டா.

"ஓம். லீவில வந்து போறன்."

"எந்த நாடு?"

"லண்டனுங்கோ.."

அவ தன்ரை மகள் ஜேர்மனியில எண்டா. மகள் இப்ப புருசனோடையும் பிள்ளையளோடையும் கொழும்பில வந்து நிக்கிறதாகவும் தமிழ்ச்செல்வன் ரண்டு கிழமை காலக்கெடு விதிச்சிருக்கிற படியாலை என்னவும் நடக்கலாம் எண்டு கொழும்பில நிக்கிறதாகவும் இந்த இடைப்பட்ட காலத்தில நுவெரெலியா கண்டிப்பக்கம் போகலாம் எண்டு தன்னையும் கூப்பிட்டவையாம். ரண்டு கிழமை முடிய யாழ்ப்பாணம் வாறதைப்பற்றி யோசிப்பம் எண்டவையாம்.

"தம்பி அப்ப நீர் லண்டனுக்கு போய் எவ்வளவு காலம்" எண்டு அவ என்னைப்பார்த்து கேக்க எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டிட்டுது.

"இல்லைங்கோ.. நான் லண்டனில்லை. நான் கொழும்பு" எண்டன்.

மனுசி கொஞ்சம் குழம்பிப் போன மாதிரி இருந்திச்சு. மனுசி எங்களை என்னெண்டு நினைச்சுப் பார்த்திருக்கும் எண்டதை நான் நினைச்சுப் பார்த்தன். கொஞ்சம் சங்கடமாவும் கொஞ்சம் வெக்கமாகவும் இருந்திச்சு.

நான் மனிசியைப் பாத்தன். அவ இப்ப கொஞ்சம் தெளிவா இருந்த மாதிரி இருந்திச்சு.

ஓ.. அப்ப இனி இவ உம்மை கூப்பிட வேணுமென்ன? மனுசி திடீரென்று கேட்டுது.

எனக்கு இதுக்கும் மேலையும் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்திச்சு. வலு விபரமா அவவுக்கு நான் எடுத்துச் சொன்னன்.

ரண்டு பேரும் சின்னப்பிள்ளையளா இருக்கேக்கையே நினைச்சன். எண்டாலும் இப்ப உப்பிடி நடக்குது தானே.. எண்டு மனுசி சமாதானம் சொன்னா

பிறகு மனுசி லண்டன் நிலவரங்கள் பற்றி அறியத்தொடங்கினா.

கனநேரத்துக்கு பிறகு நான் எதிர்பார்த்த அந்த கேள்வியை அவ கேட்டா.

"அப்ப உமக்கு லண்டனில காட் கிடைச்சிட்டுதோ?"

பிற்குறிப்பு: ஓமந்தை சோதனை சாவடியில் இறங்கி ஏறிய போது அவ லண்டன் பெண்ணைப் பார்த்து கேட்டாவாம். உமக்கு அந்த பெடியனுக்கு பக்கத்தில இருக்கிறதுக்கு ஒரு மாதிரி இருந்தா சொல்லும். சீற்றை மாத்துவம்.

எனக்கு அது தான் பிடிச்சிருந்தது. யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை தன் மகளாக நினைத்து அக்கறையோடை கேட்டா பாருங்கோ அங்கை தான் அவ ஒரு தமிழ் பொம்பிளையா நிக்கிறா. என்ன! அவவை மாதிரியான ஆக்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளில இருக்கினம்.

தொடர்ந்தும் சொல்லுவன்

20.7.05

ஊர்ப்பூக்கள்

Image hosted by Photobucket.com
செவ்வெரத்தம் பூ

Image hosted by Photobucket.com
நித்தியகல்யாணியும் மொட்டும்

17.7.05

தொடர் தாக்குதல்கள்: இலங்கையில் - 1

நானும் அனந்தனும் சேயோனும் கொழும்பில் தாட்சாயினி வீட்டுக்கு போயிருந்தோம். சேயோன் கனடாவிலிருந்து வந்திருந்தான். படிக்கின்ற காலங்களில் முன் நெற்றியில் வந்து விழும் முடிகளை வாயிலிருந்து காற்றுக்கொண்டே ஊதிச் சரி செய்து வயிற்றெரிச்சல் தருகின்றவனை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

அகண்ட தமிழ்த்தனிநாடு எண்டுறது போல அவன்ரை நெற்றி மேலேறி தலையிலும் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்து இருந்திச்சு. பரம்பரை வழுக்கையெண்டும் தான் அதைப்பற்றி கவலைப்பட போறதில்லை எண்டும் சொன்னான்.

தாட்சாயினி வீட்டை போய் இருக்கிறம். தாட்சாயினியின்ரை அம்மா அதில நான் ஒருத்தன் இருக்கிறதைப் பற்றி சட்டை செய்யாமல் அனந்தனைப்பாத்து அப்ப எப்பிடி அவுஸ்ரேலியா பிடிச்சிருக்கோ எண்டுறா.

இது எனக்கு முதலாவது அற்றாக்.

அனந்தன் அது நானில்லைங்கோ அது அவர் என்று என்னைக்காட்டி நெளியுறான்.

சேயோன் சிரிசிரியெண்டு சிரிக்கிறான். எட நாசம் கட்டினது. என்ரை மூஞ்சையைப்பாத்தா வெளிநாட்டில இருந்து வந்தவன் மாதிரி தெரியேல்லையாம். நான் என்ன செய்யிறது.

என்ரை கையில டிஜிற்றல் வீடியோ கமெராவும் இல்லை. அந்த முழங்காலுக்கு கீழே போடுற காற்சட்டையும் போடேல்லை. அப்ப நான் வெளிநாடு எண்டு கண்டு பிடிக்கிறது அவவுக்கு கஸ்ரமாத்தானே இருந்திருக்கும்.

எண்டாலும் என்ரை முகம் கொழு கொழு மொழு மொழு எண்டு இல்லையாம். வெளிநாடுகளில இருந்து வாறவை அப்பிடித்தானாம் இருக்கிறவை.

நான் என்னத்தை செய்ய? என்ரை முக விருத்தம் அப்பிடி!

இப்ப நான் சோமிதரனோடை கிளிநொச்சிக்கு போறன். ஒரு பின்னேரப் பொழுது. கிளிநொச்சியில திட்டமிடல் செயலகத்தில க.வே பாலகுமாரனை சோமிதரன் ஏதோ ஊடக அலுவலாய்ச் சந்திச்சு கதைச்சுக் கொண்டிருந்தான். நான் அந்த இடங்களை சுத்திப் பாத்துக்கொண்டிருந்தன்.

இப்ப பாலகுமாரன் என்னோடை கதைக்கேக்கை சொன்னார். நான் முதலில நினைச்சன் நீர் லோக்கல் ஆள் எண்டு.

இது எனக்கு ரண்டாவது அற்றாக்.

பிறகு சோமிதரன் சொன்னான். நீ கை இல்லாத கலர் பனியன் போட்டுக்கொண்டு வாறதுக்கு பதில் உப்பிடி வெள்ளைச் சேட்டோடை வந்தால் எப்பிடித் தெரியும் நீ வெளிநாடு என்று?

எட! இது வேறையோ? நான் வெயிலுக்கு வெள்ளைச் சேட்டுத்தான் நல்லது எண்டு போட்டுக்கொண்டு போனனான்.

இப்ப திரும்பவும் கொழும்பில! படிச்ச பள்ளிக்குடத்துக்கு போறம். நான் சேயோன் நிரஞ்சன் மற்றது ஜெயகாந்தன் ஜீவன். எல்லா ஆசிரியர்களையும் சந்திச்சு கதைச்சம்.

என்னடா ஒரு அற்றாக்கையும் காணவில்லையே என்று நான் நினைக்கிறன். நினைக்க விழுகுது அடி!

ஒரு ரீச்சர் கேட்டா! அவுஸ்ரேலியாவில வெயில் கூடப் போல..

நான் சேயோனைப் பாத்துட்டு எனக்குள்ளை சிரிச்சன். ' அப்ப கனடாவில எப்பிடியிருக்கும் வெயில்'

(தொடர்ந்தும் கதை சொல்லவன்)

என்னா இதுங்கிறேன்?

இதோ.. அண்ணாந்து ஆறுதலாக தேடியும் கிடைக்காத தீர்த்தம் போல இவர் அருந்துவது என்ன என்று தெரிகிறதா?

யாழ்ப்பாணத்தில் எல்லோருமே படம் எடுத்துக்கொண்டோம். இவர் மட்டுமே மிக வாய்ப்பாக கமெராவுக்குள் அகப்பட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் என்னோடு தனது நேரத்தினை செலவழித்தமைக்காக இந்தப் பதிவினையும் படத்தினையும் அவருக்கு காணிக்கையாக்குகின்றேன்.

நன்றி நண்பா நன்றி

Image hosted by Photobucket.com

15.7.05

படம் காட்டுறன்

Image hosted by Photobucket.com

யாழ்ப்பாணத்தில் எழுந்த மாற்றாய் ஒரு பத்துப்பேரை படம் பிடித்தால் கண்டிப்பாக ஒரு இராணுவ சிப்பாயோ அல்லது ஒரு இராணுவ வாகனமோ அவர்களுக்குள் அடங்குவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. உண்மையும் அது தான். யாழ்ப்பாணத்தில் பத்து நபர்களுக்கு ஒரு சிப்பாய் என்ற விகிதத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள். இந்த படம் யாழ் பேரூந்து நிலையத்தில் எடுக்கப்பட்டது.


Image hosted by Photobucket.com

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் இருக்கின்ற முனியப்பர் கோயில் இது. இப்போது யாழ்ப்பாணத்தின் காதல் தெய்வம்.

14.7.05

யாழ்ப்பாணம் வரவேற்கிறது!

Image hosted by Photobucket.com
யாழ்ப்பாணத்தினுள் நுழையும் வாயில்

Image hosted by Photobucket.com
யாழ் நூல் நிலையத்தின் அண்மித்தாக

11.7.05

தொடரும் யாழ்ப்பாண காட்சிகள்

யாழ்ப்பாணத்தின் இன்னும் சில காட்சிகள் இவை. யாழ்ப்பாணத்தின் இணைய வேகத்தோடு போராடி பணத்தை விரயம் செய்ய விருப்பம் இல்லை. அதே நேரம் பொறுமையும் இல்லை. இந்த படங்கள் ஏற்கனவே கிளிநொச்சியில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவேற்றப்பட்டவை. (ஓசியில் படம் காட்டுதல்!). இனி வரும் படங்களை ஒஸ்ரேலியா திரும்பியவுடன் காட்டுவதே நல்லது எனவே நன்றி. (தமிழ் மணத்தில் ஏதேனும் சண்டை நடக்கிறதா?)

Image hosted by Photobucket.com
யாழ் கோட்டையின் வெளிப்புறத்தில்

Image hosted by Photobucket.com
நல்லூர் திலீபன் நினைவு தூபி

Image hosted by Photobucket.com
யாழ்ப்பாணம் புதிய தபால் நிலையம்