31.5.05

எங்கள் வீட்டு மரங்கள்

எல்லோரும் படம் காட்டுகிறார்கள்.

நாமும் ஏதும் காட்டலாம் என்றால் இது மெல்பேண் வானம், கடல், மற்றும் வானளாவும் கட்டடம், இது பூங்கா அது பூ என்று காட்டுவதற்கு நிறைய மினக்கெட வேண்டியுள்ளது.

சரி ஏதோ எங்களால் முடிந்தளவு சிக்கனமாக படம் காட்டலாம் என்ற எண்ணம்.

வசந்தன் தன் வீட்டின் உள்ளே இருக்கிற சாமான் சக்கட்டு எல்லாத்தையும் காண்பித்தார். நான் கொஞ்சம் வெளியே வந்திருக்கிறேன்.

இவை நான் மெல்பேணில் இருக்கின்ற வீட்டின் மரங்கள்.

Image hosted by Photobucket.com

மல்லிகையை போல மணக்கிற ஒரு மரம். முல்லையில்லை. பெரிய பந்தலாயிருந்தது. இப்ப ஒட்ட நறுக்கியிருக்கிறோம்.

Image hosted by Photobucket.com

மாதுளை மரம்.பழம் ஒண்டும் மரத்தில இல்லை. ஒருவேளை சீசன் முடிஞ்சிருக்குமோ?

Image hosted by Photobucket.com

வாழைமரங்கள் ஒரு கட்டத்துக்கு மேலை வளருதில்லை. குட்டி வாழையொன்று சில குட்டிகள் போட்டிருக்கு

Image hosted by Photobucket.com

அடுத்த வீட்டு தமிழர்கள் வளர்க்கும் கறிவேப்பிலை. வேலி தாண்டுகிறது. நாமும் கறிவேப்பிலை கடையில் வாங்குவதில்லை

19.5.05

குமரிக்கண்ட கடல்கோள் நிவாரணம்

நேற்று ஒரு செய்தி கேட்டன். இலங்கையில சுனாமியாலை பாதிக்கப்பட்ட இடங்களில அபிவிருத்தி பணியளை செய்யிறதுக்கு உலக நாடுகள் குடுக்கிற நிதியை சரியா பங்கிடுறதுக்கு பொதுக்கட்டமைப்பு ஒண்டை புலிகள் முன் மொழிஞ்சிருந்தவையெல்லோ. அதின்ரை பேரை அதாவது பொதுக்கட்டமைப்பு எண்ட பேரை முகாமைத்துவ வியூகம் எண்டு மாத்துறதுக்கு இலங்கையின்ரை அதிபர் ஆலோசிக்கிறாவாம்.

சுனாமி அடிச்சு ஆறு மாசம் ஆகப்போகுது. சரியா பாதிக்கப்பட்ட நிறைய இடங்கள் இலங்கை அரசின்ரை நிர்வாகம் நடக்காத புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியள் எண்டதாலை சுனாமிக்கு வெளிநாடுகள் வழங்கிற நிதியினை சரியா பங்கிட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெண்டதாலை புலிகள் பொதுக்கட்டமைப்பு யோசினை ஒண்டை நோர்வே நாட்டுக் கூடாக முன்வைச்சினம்.

அதுக்குள்ளேயே ஆயிரம் இழுபறியள் வந்து கடைசியா (களைச்சுப் போய்) நோர்வேயும் சில திருத்தங்களை செய்து ஒரு யோசினையை முன்வைக்க சரியெண்டு புலிகள் அதை ஏற்றுக்கொண்டினம்.

புலிகள் ஏற்றுக்கொண்ட நாளிலை இருந்து சந்திரிகாவும் ஏற்றுக்கொள்ள போறன்.. இந்தா ஏற்றுக்கொள்ள போறன்.. எண்டு சொல்லி இப்ப ஏற்றுக்கொண்டிட்டன்.. இனி நடைமுறைப்படுத்த போறன் எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறா.

அதுவும் கடைசியா கண்டியில நடந்த ஒரு மாநாட்டில( மாநாடு எண்டு தாங்களே தங்களுக்குள்ளை நடத்தினவை. இது ஒரு..... என்னெண்டு சொல்லுறது..? கிட்டத்தட்ட கட்சி மாநாடு மாதிரி) தன்ரை உயிரைக் குடுத்தெண்டாலும் பொதுக்கட்டமைப்பை கொண்டு வருவன் எண்டு சொல்லியிருக்கிறா.

இலங்கைய ஆளுற கட்சியிலை சந்திரிகா இப்பிடி சொல்ல அதே கட்சியில இருக்கிற ஜே வி பி அதெல்லாம் குடுக்க முடியாது. குடுக்கவும் கூடாது எண்டு துள்ளுது.

உண்மையில அமெரிக்கா உட்பட்ட பல நாடுகள் பொதுக்கட்டமைப்புக்கு தங்கடை ஆதரவை தெரிவிச்சிட்டினம். (இந்தியா அதை விரும்பவில்லை எண்டு வெளிப்படையா சொல்லிட்டுது. நல்லது.நன்றி)

தமிழ்ச்செல்வன் தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்கு குடுத்த பேட்டியொண்டில காலத்தை இழுத்தடிக்கிறதுக்காகவே சந்திரிகாவும் ஜே வி பி யும் மாறி மாறி இப்பிடி நடந்து கொள்ளுகினம் எண்டும் மற்றும்படி அவைக்குள்ளை நல்ல நெருக்கம் இருக்கெண்டும் தாங்கள் நம்புறதாக சொல்லியிருக்கிறார். ஆரும் ஏன் பொதுக்கட்டமைப்பு இன்னும் சரிவரேல்லை எண்டு கேட்டால்.. பொறுங்கோ அதைப்பற்றி எங்கடை கட்சிக்குள்ளேயே பிரச்சனை இருக்குது. அதை முடிச்சுப் போட்டு வாறம் எண்டு சொல்லுறதுக்கு தான் உந்த கூத்தெல்லாம் எண்ட சாரப்பட தமிழ்ச்செல்வன் சொல்லிருக்கிறார்.

இதுக்கிடையில தான் உந்த பெயர் மாத்துற செய்தியை நேற்றுக் கேட்டன். ஒருவேளை பொதுக்கட்டமைப்பு எண்டுறது ராசியில்லாத பேரோ? எண் சாத்திரப்படி சரியில்லையோ தெரியேல்லை. அது தான் உப்பிடி இழுபடுதோ..

சரி.. இப்ப முகாமைத்துவ வியூகம் எண்ட பெயர் வைக்க ஆலோசிக்க, ஜே வி பி விடுதோ இல்லயோ ஆர் கண்டது.

என்னவோ, எனக்கு தெரிஞ்ச அளவில ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை சுனாமி மாதிரி ஏதாவது ஒரு அழிவு வருமாம். இதுக்கு முதலும் பெரிய கடல் கோள் வந்து நிறைய இடங்கள் அழிஞ்சதாம்.

அடுத்த சுனாமி வர முதல் உந்த பொதுக்கட்டமைப்பை ஒருக்கா பாத்து முடிச்சால் இலங்கை அரசாங்கத்தக்கு புண்ணியமாப் போகும்.

புலிகளை இதில சேத்துக் கொண்டால் அவங்களை பெரிய மனிசர் ஆக்கிப்போடும் எண்டு நினைக்காமல், அல்லது எங்களுக்கு பக்கத்தில ஒரு இயக்கம் இப்பிடி வளருகிறது என்பது எங்கடை தேசிய பாதகாப்பிற்கு அச்சுறுத்தல் எண்டு நினைக்காமல்..

எல்லாத்தையும் இழந்து போய், ஏதேனும் உதவியள் கிடைச்சால் திரும்பவும் ஒருக்கா வாழ முயற்சிக்கலாம் எண்ட நம்பிக்கையோடை இருக்கிற சனத்தையும் யோசிச்சுப் பாத்தினம் எண்டால் எவ்வளவு நல்லாயிருக்கும்.

11.5.05

பாவியர் போற இடம்!

பாவியர் போற இடம் பள்ளமும் திட்டியும் எண்டு சொல்லுவினம். ஆனா நான் பாவியில்லையே.. அப்பாவியெல்லோ!
அடச்சே... ஒரு நிமிச நேரத்தில எல்லாம் நடந்து முடிஞ்சுது.

150 டொலர்!

ரயிலில் கட்டணமின்றி பிரயாணம் செய்வது குற்றம் தான். அட.. ஆகக் குறைந்தது அந்தக் குற்றத்தை புரிந்திருந்தாலாவது தண்டம் அறவிட்டிருக்கலாம். போயும் போயும்.. ரயிலில் முன் சீற்றில் கால் வைத்ததற்கெல்லாம் தண்டம் அறவிடுவார்களா..?

அது குற்றம் என கண்ணுக்கு தெரியத்தக்கதாக எழுதி வைத்த பின்னரும் அவ்வாறு பிரயாணம் செய்தால் அறவிடுவார்கள் தானே!

இன்று மதியம் வகுப்புக்கள் முடிந்து வந்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 30 நிமிட பயணம் அது. ஆரம்பகாலங்களில் அவ்வாறான பயணங்களிடையே புத்தகங்கள் வாசிப்பது வழமை. இலங்கையில் இருந்த வரைக்கும் எந்தவொரு ஆங்கில நாவல்களையும் வாசித்ததில்லை. இங்கே அந்த வாய்ப்பு கிடைத்த போது சரி உலக இலக்கியங்களில் ஒரு வகையை ரயிலில் அற்நிது கொள்வோம் என்ற எண்ணத்தில் வாசிக்க தொடங்கினேன். கொஞ்சக்காலம் தான்.

இடையில் ஒரு MP3 Player வாங்க, உலக இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது! என்ன இருந்தாலும் நமது தமிழ்ச்சினிமா பாடல்கள் போல வருமா என்கிற நிலைக்கு கீழிறங்கி கடைசியில் அதுவும் கைவிட்டாயிற்று. (அதற்கு Battery வாங்கி கட்டுப்படியாகவில்லை).

இப்பொழுதெல்லாம் பயண நேரங்களில் ஒரு குட்டித் தூக்கம் மட்டுமே. அது தானே.. ஓடுகின்ற வண்டியில் தூங்குவது போல சுகம் வேறு எங்கு வரும்?

இன்றும் அப்படித்தான்.. லேசாக கண்ணை மூட.. இயல்பாக ஒரு காலின் நுனி முன் இருக்கையில் முட்டிக்கொண்டது. (உன் காலை எடுத்து முன் இருக்கையில் போட்டாய் என்று எழுதேன்.)

கொஞ்ச நெரம் போயிருக்கும். தோளைத்தட்டியது ஒரு கை. சுதாகரித்து கண் விழிக்க ரிக்கெற் பரிசோதகர். ரிக்கெற்றை எடுத்து காட்டினேன். (இத்தனைக்கம் காலை உடனே கீழே எடுத்துவிட்டேன் மரியாதை நிமித்தம்)

ரிக்கெற் எல்லாம் சரியாகத் தான் இருந்தது.

காலை முன்னால் வைத்திருந்ததற்கு ஏதாவது காரணம் இருக்குதா என்று அவர் கேட்டபோது தான்.. ஓஹோ இந்த விசயத்தை அண்ணர் பெரிது பண்ணப் போகின்றார் என்று விளங்கியது.

ஏதாவது சொல்லி வைப்போமே என்று காலில் லேசான வலி என்றேன்.

தன்னிடமிருந்த குறிப்பு புத்தகத்தை விரித்து கொண்டு என் முன்பாக அமர்ந்தார். அந்த கணம் வரைக்கும் நான் எண்ணியது என்னுடைய தூக்கம் போச்சு என்று மட்டும் தான்.

இது பற்றி தான் றிப்போட் குடுக்க வேணும் என்றார். விசயம் கொஞ்சம் பெரிசு தான் என்று யோசித்துக் கொண்டு பேசாமல் இருந்தேன்.
பெயர் கேட்டார் சொன்னேன். என் பெரிய பெயரை (Family Name, அந்த Name இந்த Name சமாச்சாரங்கள் எல்லாம் சேத்து) அவர்களாக எழுதுவதற்கிடையில் எனது தரிப்பிடம் வந்துவிட கூடும் என்பதால் நானாகவே எனது பெயர் முகவரிகளை எழுதி கொடுத்தேன். தவிர களைத்திருந்தமையாலும் காலில் வலி உணர்நத காரணத்தாலும் அவ்வாறு இருக்கவேண்டியேற்பட்டது என்பதனையும் குறித்து கொடுத்தேன்.

முகவரியை உறுதிப்படுத்த வேணும் என்றார். எனது உறவினர் ஒருவரின் தொலைபேசி இலக்கத்தை குடுத்தேன். அங்கிருந்தே அவரோடு பேசினார். உறவினரும் வேலை இடத்தில் நின்று முதலில் என்னவோ ஏதோ என்று பதறி பிறகு உறுதிப்படுத்தினார்.

எல்லாம் முடிந்த பின்னர் நன்றி சொன்னார். இதை றிப்போட் பண்ணுவது தான் தனது வேலையென்றும் தண்டம் குறித்து தெரியாது என்றும் சொன்னார். கிட்டத்தட்ட 150 டொலர் வரலாம் என்றும் சொன்னார்.

ம்.. என்ன செய்வது சில நல்ல பழக்கங்களை 150 டொலர் குடுத்து படிக்க வேண்டியிருக்கிறது.

கொஞ்சக் காலமாகவே என்னுடைய செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வந்தன. இப்போதெல்லாம் வீட்டிலேயே சமைப்பதாலும் சாப்பிடுவதாலும் வெளிச் செலவு என்பது சரியாக குறைஞ்சு வந்தது. அப்பவே நினைச்சன். என்னடா செலவெல்லாம் குறையிதே ஏதோ நடக்கப் போகிறது என்று. இன்று நடந்து விட்டது.

ஆனி மாசம் வரையும் உனக்கு காலம் கூடாது கவனமாயிரு எண்டு அம்மம்மா அண்டைக்கும் சொன்னவ. ஒரு வேளை உண்மையாயிருக்குமோ? கடவுளே ஆனி மாசத்தை கெதியில முடி!

7.5.05

வேட்டையாடு விளையாடு

ஊர் எண்டால் ஒரு பம்பல் எப்பவும் இருக்கும். பதின்ம வயசுடைய ஒரு கூட்டம் எக்காலத்திலும் தனக்குரித்தான குறும்புத்தனத்தை செய்து கொண்டே இருக்கும். இளநீர்களை களவாக பறிக்கிறது. பிலாப்பழத்தை களவாக வெட்டிக்கொண்டு போறது. இப்பிடி கிழமையில எதாவது ஒண்டு எப்பவும் நடக்கும்.

இப்பிடியான ஒரு கூட்டத்தில முழுநேர உறுப்பினராய் இருக்கிறதுக்கு எனக்க பெரிசா வசதிப்படேல்லை. சின்ன வயசிலையே யாழ்ப்பாணத்தை விட்டு போன படியாலை அந்த வாய்ப்பு கிடைக்கேல்லை. இருக்கும் வரையும் நானும் ஒரு இளநிலை உறுப்பினராத்தான் இருந்தனான் எண்டாலும் பெரிசா ஒண்டும் சாதிக்கேல்லை.

எனக்கு நாடகம் பழக்கினவர் எண்டு ஒராளை முந்தி சொன்னானெல்லோ. அவர் தேனீ வளக்கிறவர். வடிவா ஒரு பானையை தன்ரை வளவில இருக்கிற மரத்தில கட்டி மனிசன் எப்பிடியாவது அதுக்குள்ளை தேனியளை குடியேத்திப் போடும். இப்பிடி தேனியள் அதுக்குள்ளை வதை எல்லாம் வைச்சு நல்ல கணக்காக வரேக்கை மரத்தில இருந்த பானையோடு கடத்திப் போடுவாங்கள்.

இப்பிடி எத்தினையோ நடந்தாலும் உதுகள் நடக்கிற நேரம் அப்ப சின்னப்பெடியனான எனக்கு கலந்து கொள்ள முடியாத நேரம்.

2002 பாதை திறந்த பிறகு ஊருக்கு போனன். அதே திருகுதாளங்களோடை அந்த குறூப்பை கண்டன். அதுவும் முந்தி வாலுகளாக இருந்த என்ரை வயசுக்காரர் தான் இப்ப பெரிய தலைகளாக இருக்கிற குறூப். அப்பிடியே ஐக்கியமாயிட்டன்.

பின்னேரம் ரண்டு மணிக்கெல்லாம் இறங்கிடுவம். சாரத்தை மடிச்சு சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு காணிக்கு போய் கொஞ்ச நேரம் விளையாட்டு. அந்த நேரம் எல்லை, பேணியடிக்கிறது இப்பிடியான விளையாட்டுக்கள் தான் விளையாடுறது. இப்ப கிரிக்கெற் விளையாடுறாங்கள். கொழும்பில இருந்து வந்திருக்கிற படியாலை நல்லா நான் கிரிக்கெற் விளையாடுவன் எண்டு அவங்கள் நம்பினாங்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றுறதுக்காகவே நான் ஊரிலை கிரிக்கெற் விளையாடுறேல்லை. அதுவும் அவங்கள் விளையாடேக்கை ஏதாவது இசகு பிசகாகி என்னிடம் வந்து முடிவு கேக்கேக்கை என்ன சொல்லுறதெண்டே தெரியாமல் இருக்கும்.

விளையாடி முடிஞ்ச பிறகு அப்பிடியே ஊர் சந்தியில இருக்கிற கேணிக்கட்டில போய் குந்துறது எல்லாரும். பிறகு ஒரு 9 மணிவரைக்கும் அரட்டைதான். எல்லா விசயமும் அங்கை வந்து போகும். சந்திரிகாவில இருந்து சந்திரமுகி வரைக்கும் வரும். போனவருசம் சித்திரைக்கு நான் அங்கை போயிருந்தன். ஒரு பின்னேரம் முயல் பிடிக்க போறம் எண்டு சொன்னாங்கள். சரியெண்டு நானும் வெளிக்கிட்டு விட்டன். அதுகும் காலைமை பத்து மணியிருக்கும். எல்லாரும் கையில ஒரு பொல்லு.. பிறகு சாக்குகளில கல்லு.. எல்லாத்தோடும் வெளிக்கிட்டாச்சு.

றோட்டாலை நடந்து போறம். ஊருக்கே தெரியுது நாங்கள் எங்கையோ வேட்டைக்கு போறம் எண்டு. (இந்த செய்கைகள் பிடிக்காத பலர் ஊரில் இருந்தார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பினம். வீட்டில் வாழைக்குலையையோ அல்லது கோழியையோ பறி கொடுத்தவர்களாக இருப்பினம். அவர்கள் காதுபடவே எங்களை வேடர்கள் எண்டு திட்டுவினம்.)

ஒரு பற்றைகள் நிறைந்த வளவு.. இதுக்குள்ளை தான் முயலை தேடவேணுமாம். எல்லாருக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப் படுது. பிறகென்ன ஒரே களேபரம் தான். அடியடா, பிடியடா, கொல்லடா, விடாதை, பிடி, துரத்து, எறி இதுகள் தான் கேட்கும். நான் போன நாள் எந்த முயலும் சிக்கவில்லை.

எல்லாரும் நல்ல களைச்சிட்டினம். திருபுறது எண்டு முடிவாச்சு. சரி எண்டு நான் வீட்டை வந்து குளிச்சு விட்டு வர ஒரு பொடியன் வந்தார். முயல் பிடிச்சாச்சாம்.. அங்கை இறைச்சி காய்ச்சுப்படுகுது உங்களை வரட்டாம். எண்டு சொன்னார். சரியெண்டு வெளிக்கிட்டன்.

நான் நின்ற காலத்தில ஊரில ஒரு வாசிக சாலை புதுசா கட்டுப்பட்டுக் கொண்டிருந்தது. அதுக்குள்ளை தான் சமையல் நடக்குது. ஒரு தாய்ச்சிக்குள்ளை இறைச்சி காய்ச்சுப் படுகுது. போற வாற சனத்துக்கெல்லாம் இண்டைக்கு முயல் பிடிச்சனாங்கள் எண்டு கதை வேறை.

இறைச்சிக்கு பாண்தான் நல்லாயிருக்கும் எண்டு 10 றாத்தல் பாணும் வாங்கினம். எல்லாம் முடிய சாப்பிடுற தட்டுகள் தேவையாயிருந்தது. அப்ப அதில ஒரு பெடிப்பயல் நிண்டவர். அவற்றை வீடு பக்கத்தில தான் இருந்தது. அவரை அனுப்பினம் போய் தட்டுக்கள் கொஞ்சம் எடுத்தாடா எண்டு.. சரியெண்டு போனவனை கனநேரமா காணேல்லை.

கறி வேறை ஆறிப்போகுது. கடைசியா ஆள் வந்துது. என்னடா அசைஞ்சு வாறாய்.. உடனை வரத்தெரியாதோ உனக்கு எண்டு ஆளுக்கு நல்ல பேச்சு..

இல்லயண்ணை.. வீட்டில கோழியொண்டைக் காணேல்லையாம்.. அது தான் அம்மா எரிஞ்சு விழுகிறா.. சரியண்ணை நிங்கள் சாப்பிடுங்கோ நான் போய்த் தேட போறன் எண்டுவிட்டு அவன் ஓடினான்.

என்னத்தை இனித் தேடி...

நான் வந்த போதே அது முயல்க்கறி இல்லை. கோழிக்கறிதான் எண்டு எனக்கு விளங்கிட்டுது. ஆனா அது அந்தப் பெடியனின் வீட்டு கோழி தான் எண்டு அங்கை நிண்ட எல்லாருக்கும் அப்பதான் தெரிஞ்சுது.

உதோடை சேர்ந்த இன்னொரு வேலையையும் செய்தாங்கள். கோழி இறைச்சியெடுத்த பின்னர் எஞ்சிய இறக்கை கழிவுகளை ஒரு சீமெந்து பையில் இட்டு வடிவாக மடித்து கட்டினாங்கள். றோட்டாலை Bar க்கு கீழாலை சைக்கிளோடிக்கொண்டிருந்த ஒரு சின்ன பெடியனை கூப்பிட்டு அதைக் குடுத்து.. ஊரில சைக்கிள் கடை வைச்சிருந்த ஒருவரின் பெயரை சொல்லி அவரிடம் கொண்டு போய் குடுத்து 'நீங்கள் கேட்டது இப்ப இவ்வளவும் தானாம் கிடைச்சது. மிச்சம் பிறகு அனுப்பிறமாம் எண்டு சொல்லிக் கொடு என்றோம்.

அவனும் சரியெண்டு விட்டு ஆர் தந்தது எண்டு கேட்டால்.. என்ன சொல்லுறது எண்டான் அப்பாவியாக. ஊரில பலசரக்கு கடை வைச்சிருக்கிறவரின் பெயரை சொல்லி அவர் தந்தவர் எண்டு சொல்லு எண்ட அவன் வாங்கி கொண்டு போனான்.

கண்டிப்பாக சைக்கிள் கடை வைத்திருப்பவர் அன்று ஊரின் மொத்த இளைஞர் கூட்டத்தையும் திட்டி தீர்த்திருப்பார்.

குறிப்பு வேட்டையாடு விளையாடு இந்த பெயரில கமல் ஒரு படம் நடிக்கிறாராம். நல்ல தமிழ்ப் பெயரென?